கோவை: விவசாய சட்டத்திற்கு எதிராக டெல்லியில் போராடி உயிரிழந்த விவசாயிகளுக்கு மலர் தூவி வீரவணக்கம் செலுத்தப்பட்டது.
கோவை: வேளாண் திருத்த சட்ட மசோதாவிற்கு எதிர்ப்பு தெரிவித்து டெல்லியில் போராடி உயிரிழந்த விவசாயிகளுக்கு கோவையில் மலர் தூவி வீரவணக்கம் செலுத்தப்பட்டது.

மத்திய அரசு கொண்டு வந்த 3 வேளாண் சட்டத்திருத்த மசோதாவை கண்டித்து டெல்லியில் லட்சக்கணக்கான விவசாயிகள் போராடி வருகின்றனர். அவர்களுக்கு ஆதரவாக இந்தியா முழுவதும் பல்வேறு அரசியல் கட்சியினர் பொதுமக்கள் மத்திய அரசின் விவசாய சட்டத்திருத்தத்திற்கு எதிராக போராடி வருகின்றனர்.
இதனிடையே, டெல்லியில் இச்சட்டத்திற்கு எதிராக போராடி வந்த விவசாயிகளில் சுமார் 40 விவசாயிகள் உயிரிழந்தனர்.
இந்நிலையில், இன்று விவசாய தினத்தை முன்னிட்டு உயிரிழந்த அவர்களுக்கு வீரவணக்கம் செலுத்தும் நிகழ்வு கோவை செஞ்சிலுவைச் சங்கம் அருகே நடைபெற்றது.
தமிழ்நாடு விவசாயிகள் சங்கம் சார்பில் நடைபெற்ற இந்நிகழ்வில் உயிரிழந்த விவசாயிகளின் புகைப்படத்திற்கு மெழுகுவர்த்தி ஏற்றியும் மலர் தூவி வீர வணக்கம் செலுத்தினர்.

மேலும் விவசாய சட்டத்தை திரும்பப் பெற வலியுறுத்தியும் மத்திய அரசை கண்டித்தும் முழக்கங்களை எழுப்பப்பட்டது.
இந்த நிகழ்வில் கோவை மக்களவை உறுப்பினர் பி.ஆர்.நடராஜன், குருதுவாரா அமைப்பின் தலைவர் இக்பால் சிங், இந்திய கம்யூனிஸ்ட் கட்சியைச் சேர்ந்த சிவசாமி உட்பட 50க்கும் மேற்பட்டோர் கலந்து கொண்டு உயிர்நீத்த விவசாயிகளுக்கு மலர் அஞ்சலி செலுத்தினர்.