கோவை: கோவை அவினாசி சாலையில் 10.10 கிலோமீட்டர் தூரத்திற்கு ரூ 1620 கோடி ரூபாய் மதிப்பீட்டில் அமையவுள்ள தமிழகத்தின் மிக நீளமான உயர்மட்ட மேம்பாலத்திற்கு அமைச்சர் எஸ் பி வேலுமணி பூமி பூஜையுடன் கட்டுமான பணிகளை இன்று டிசம்பர் 3 ஆம் தேதி தொடங்கி வைத்தார்.
கோவை: கோவை அவினாசி சாலையில் 10.10 கிலோமீட்டர் தூரத்திற்கு ரூ 1620 கோடி ரூபாய் மதிப்பீட்டில் அமையவுள்ள தமிழகத்தின் மிக நீளமான உயர்மட்ட மேம்பாலத்திற்கு அமைச்சர் எஸ் பி வேலுமணி பூமி பூஜையுடன் கட்டுமான பணிகளை இன்று டிசம்பர் 3 ஆம் தேதி தொடங்கி வைத்தார்.

கோவையில் பல்வேறு பிரதான சாலைகளில், மேம்பாலம் பணிகளும், சாலை மேம்பாட்டு பணிகளும் நடைபெற்று வருகிறது. குறிப்பாக, உக்கடம் ஆத்துப்பாலம் சாலை மேம்பாலம், திருச்சி சாலையில் அல்வேர்னியா பள்ளி முதல் ரெயின்போ நிறுத்தம் வரையிலான மேம்பாலம், மேட்டுப்பாளையம் சாலையில் கவுண்டம்பாளையம் மேம்பாலம், ஈச்சனாரி மேம்பாலம் என பல்வேறு இடங்களில் மேம்பாலப் பணிகள் நடைபெற்று வருகின்றன.

இந்த நிலையில், தமிழகத்திலேயே மிக நீளமான உயர்மட்ட மேம்பாலமாக, கோவை அவிநாசி சாலையில் ரூபாய் 1620 கோடி மதிப்பீட்டில், அவினாசி சாலை, உப்பிலிபாளையம் முதல் கோல்டுவின்ஸ் வரை 10.10 கிலோ மீட்டர் தூரத்துக்கு புதிய மேம்பாலம் கட்டப்பட உள்ளது.
சென்னை கலைவாணர் அரங்கில் நடைபெற்ற விழாவில், மத்திய உள்துறை அமைச்சர் அமித் ஷா இந்த பாலத்திற்கு காணொளி காட்சி மூலம் அடிக்கல் நாட்டினார்.

இந்த, மேம்பாலம் நான்கு வழி பாலமாக, மொத்தம் 304 தாங்கு தூண்கள் அமைக்கப்பட உள்ளன. அண்ணா சிலை சந்திப்பு, நவ இந்தியா, ஹோப்ஸ் கல்லூரி, பீளமேடு சர்வதேச விமான நிலைய பகுதிகளில் வாகனங்களில் ஏறி இறங்குவதற்கு வசதியாக சாய்வு தள பாதைகள் அமைக்கப்படுகின்றன.
இன்று, கோவை வஉசி மைதானத்தில் நடைபெற்ற மேம்பால கட்டுமானப் பணிகளுக்கான பூமி பூஜையில் கலந்து கொண்ட உள்ளாட்சித் துறை அமைச்சர் எஸ்.பி வேலுமணி மேம்பால பணிகளை தொடங்கி வைத்தார். இந்த நிகழ்ச்சியில், சட்டமன்ற துணை சபாநாயகர் பொள்ளாச்சி ஜெயராமன், பாஜகவின் கேரள மாநில பொறுப்பாளர் சி.பி ராதாகிருஷ்ணன் மற்றும் சட்டமன்ற உறுப்பினர்கள் கலந்து கொண்டனர்.