கோவை: கோவை மேட்டுப்பாளையம் அருகே தந்தை கண் முன்பு டிராக்டர் சக்கரத்தில் சிக்கி பள்ளி மாணவன் பலியான சம்பவம் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.
கோவை: கோவை மேட்டுப்பாளையம் அருகே தந்தை கண் முன்பு டிராக்டர் சக்கரத்தில் சிக்கி பள்ளி மாணவன் பலியான சம்பவம் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.
கோவை மேட்டுப்பாளையம் வனபத்ரகாளியம்மன் கோவில் செல்லும் வழியில் உள்ளது சமயபுரம். இங்குள்ள கூடுதுறை மலைப் பகுதியைச் சேர்ந்த கூலித்தொழிலாளி இளங்கோ (38). இவரது மகன் விஜய் (10), வெல்ஸ் புரம் ஆதிதிராவிடர் நலப்பள்ளியில் 4-ம் வகுப்பு படித்து வந்தார். கொரோனாவால் பள்ளி மூடப்பட்டதால் விடுமுறையில் இருந்த மாணவர் விஜய் டிராக்டரின் பின்புறம் அமர்ந்து செல்வது வழக்கம்.
இந்நிலையில், இன்று காலை கூடுதுறை மலைநெல்லி துறையில் உள்ள தனியார் தோட்டத்தில் லோகேஷ் குமார் என்பவர் டிராக்டர் ஓட்ட சென்றார். விஜய் மற்றும் அவரது தந்தை இளங்கோ டிராக்டரில் சென்றனர். தோட்டத்தில் இறங்கி உழவுப் பணியை செய்த போது மாணவர் விஜயை இறக்கிவிட்டனர். மாணவர் அங்கிருந்த வரப்பில் அமர்ந்து இருந்தார். சிறிது நேரத்திற்குப் பின்னர் டிராக்டரில் மாணவர் விஜய் ஏற முயன்றார்.
அப்போது, டிராக்டரில் இருந்து நிலைதடுமாறிய மாணவர் டிராக்டர் அருகிலிருந்த ரொட்டேட்டர் எந்திரத்தில் சிக்கினார். இதில் படுகாயம் அடைந்த மாணவர் கீழே விழுந்தார். அப்போது டிராக்டரின் பின் சக்கரம் அவர் மீது ஏறியது. இதில் சம்பவ இடத்திலேயே மாணவர் விஜய் துடிதுடித்து உயிரிழந்தார். தந்தையின் கண் முன்பு மகன் உயிரிழந்ததைப் பார்த்து அவரது தந்தை இளங்கோ கதறி அழுதார்.
பின்னர், விபத்து குறித்து தகவல் கிடைத்ததும் மேட்டுப்பாளையம் போலீசார் சம்பவ இடத்திற்கு வந்து மாணவர் உடலை மீட்டு பிரேதப் பரிசோதனைக்காக மேட்டுப்பாளையம் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.
மேலும், விபத்து குறித்து போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர். டிராக்டரில் சிக்கி மாணவர் பலியான சம்பவம் அந்த பகுதியில் பெரும் சோகத்தை ஏற்படுத்தி உள்ளது.