கோவை: லாரிகளில் ஜிபிஎஸ் (GPS) கருவி, வேகக்கட்டுப்பாட்டு கருவி பொருத்தும் உத்தரவை அரசு ரத்து செய்யாவிட்டால், வரும் தேர்தலில் வாக்களிக்க மாட்டோம், என பொள்ளாச்சி லாரி உரிமையாளர்கள் தெரிவித்துள்ளனர்.
கோவை: லாரிகளில் ஜிபிஎஸ் (GPS) கருவி, வேகக்கட்டுப்பாட்டு கருவி பொருத்தும் உத்தரவை அரசு ரத்து செய்யாவிட்டால், வரும் தேர்தலில் வாக்களிக்க மாட்டோம், என பொள்ளாச்சி லாரி உரிமையாளர்கள் தெரிவித்துள்ளனர்.
தமிழகத்தில் லாரி உள்ளிட்ட கனரக வாகனங்களில், வேக கட்டுப்பாட்டு கருவி பொருத்துதல், ஒளிரும் பட்டை ஒட்டுவது, குறிப்பிட்ட நிறுவனங்களின் ஜி.பி.எஸ் கருவிகளை பொருத்த வேண்டும் என்ற போக்குவரத்து ஆணையரின் உத்தரவை ரத்து செய்யக் கோரி லாரி உரிமையாளர்கள் ஏற்கனவே பலமுறை கோரிக்கை விடுத்து வந்தனர்.

இந்நிலையில், இன்று பொள்ளாச்சி தாலுகா லாரி உரிமையாளர்கள், வட்டார போக்குவரத்து அலுவலகத்தில், கோரிக்கை மனு ஒன்றை அளித்தனர். அதில், எந்த மாநிலத்திலும் இல்லாத நடைமுறையை தமிழகத்தில் அரசு கொண்டு வந்துள்ளது. லாரிகளில், வேகக்கட்டுப்பாட்டு கருவி பொருத்துவது, குறிப்பிட்ட நிறுவனங்களின் ஜி.பி.எஸ் கருவிகளை பொருத்துவது போன்ற உத்தரவுகளால் லாரி உரிமையாளர்கள் மிகவும் சிரமப்பட்டு வருகின்றனர், என்று அம்மனுவில் குற்றம் சாட்டினர்.
"ஏற்கனவே, லாரி தொழில் நலிந்து வரும் நிலையில், இது போன்ற செலவுகளை சமாளிக்க முடியாமல் லாரி உரிமையாளர்கள் லாரிகளை விற்க வேண்டிய நிலைமைக்கு தள்ளப்பட்டுள்ளனர். எனவே தமிழக முதலமைச்சர், இந்த கட்டுப்பாடுகளை ரத்து செய்ய நடவடிக்கை எடுக்க வேண்டும். இல்லையென்றால் வரும் தேர்தலில் வாக்களிக்க மாட்டோம்" என்று பொள்ளாச்சி லாரி உரிமையாளர்கள் தெரிவித்துள்ளனர்.