கோவை: அம்மாசை என்ற பெண் கொலை வழக்கில் வழக்கறிஞர், அவரது மனைவி மற்றும் ஓட்டுனர் குற்றவாளிகள் என கோவை நீதிமன்றம் தீர்ப்பு வழங்கியுள்ளது.
கோவை: அம்மாசை என்ற பெண் கொலை வழக்கில் வழக்கறிஞர், அவரது மனைவி மற்றும் ஓட்டுனர் குற்றவாளிகள் என கோவை நீதிமன்றம் தீர்ப்பு வழங்கியுள்ளது.
கோவை சிவானந்தா காலனியை சேர்ந்த அம்மாசை என்ற பெண் கடந்த 2011 ம் ஆண்டு மாயமானார். இது தொடர்பாக போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வந்தனர்.
இந்நிலையில், கோவை இராமநாதபுரம் பகுதியைச் சேர்ந்த மணிவேல் என்பவர் கொலை தொடர்பாக போலீசார் விசாரணை மேற்கொண்ட போது, அம்மாசை என்ற பெண்ணை கோவையைச் சேர்ந்த வழக்கறிஞர் ஈ.டி.ராஜவேல் மற்றும் அவரது கூட்டாளிகளுடன் சேர்ந்து கொலை செய்தது தெரியவந்தது.
இது தொடர்பாக போலீசார் நடத்திய விசாரணையில் வழக்கறிஞர் ஈ.டி.ராஜவேலின் மனைவி மோகனா ஒடிசாவில் நிதி நிறுவனம் நடத்தி மோசடி செய்து இருந்ததும், மோசடி தொடர்பாக ஒடிசாவில் மோகனா மீது 5 வழக்குகள் இருந்த நிலையில், அவரை காப்பாற்ற ஈ.டி.ராஜவேல் முயற்சி கொண்டதும் தெரியவந்தது.
இந்த நிலையில், சொத்து விவகாரம் தொடர்பாக தன்னிடம் வந்த அம்மாசை என்ற பெண்ணை தனது உதவியாளர் பொன்ராஜ், பழனிச்சாமி ஆகியோர் உதவியுடன் வழக்கறிஞர் ஈ.டி.ராஜவேல் கொலை செய்ததும் தெரியவந்தது. மேலும், மனைவி மோகனா உயிரிழந்து விட்டதாக இறந்த அம்மாசையின் உடலைக் காட்டி அனைவரையும் ஏமாற்றியதுடன் மாநகராட்சியில் இறப்பு சான்றிதழையும் பெற்றுள்ளார்.
பின்னர், இறப்பு சான்றிதழை ஒடிசாவில் காட்டி மனைவி மீதான வழக்குகளை வழக்கறிஞர் ஈ.டி.ராஜவேல் முடிவுக்கு கொண்டு வந்துள்ளார். மணிவேல் கொலை தொடர்பான விசாரணையின் போது அம்மாசை கொலை செய்யப்பட்டது தெரியவரவே, காவல் துறையினர் 2013ம் ஆண்டு ஈ.டி.ராஜவேலையும் அவரது மனைவி மோகனாவையும் கைது செய்தனர். இதனிடையே இந்த வழக்கு கோவை 5வது கூடுதல் நீதிமன்றத்தில் நடைபெற்று வந்த நிலையில், இன்று தீர்ப்பு வழங்கப்பட்டது.
அதில், குற்றம்சாட்டப்பட்ட வழக்கறிஞர் ஈ.டி.ராஜவேல், அவரது மனைவி மோகனா, உதவியாளர் பழனிச்சாமி ஆகிய 3 பேரும் குற்றவாளிகள் என தீர்ப்பு வழங்கிய நீதிபதி முகமது பாரூக், குற்றம் சாட்டப்பட்ட வழக்கறிஞர் ஈ.டி.ராஜவேல், அவரது மனைவி மோகனா ஆகியோருக்கு இரட்டை ஆயுள் தண்டனையும் ஓட்டுநர் பழனிச்சாமிக்கு ஒரு ஆயுள் தண்டனையும் மற்றும் 25 ரூபாய் அபராதம் விதித்தார். மேலும், கொலை செய்யப்பட்ட அம்மாசை குடும்பத்தினருக்கு 1.20 லட்சம் இழப்பீடு வழங்கவும் நீதிபதி உத்தரவிட்டார்.
இந்த வழக்கின் 4வது குற்றவாளியான பொன்ராஜ், அப்ருவராக மாறி பிறழ் சாட்சியாக மாறிய நிலையில் தனி வழக்காக பொன்ராஜ் மீதான வழக்கு நடைபெற்று வருகிறது.