கோவை: 2ஜி வழக்கில் குற்றம் சாட்டப்பட்டவர்கள் குற்றவாளிகள் இல்லை என நீதிபதி தெரிவித்துவிட்டதாக கோவையில் திமுக எம்.பி கனிமொழி தெரிவித்தார்.
கோவை: 2ஜி வழக்கில் குற்றம் சாட்டப்பட்டவர்கள் குற்றவாளிகள் இல்லை என நீதிபதி தெரிவித்துவிட்டதாக கோவையில் திமுக எம்.பி கனிமொழி தெரிவித்தார்.
சேலத்தில் நாளை பிரச்சார பயணத்தை துவங்க திமுக மகளிரணி செயலாளரும் நாடாளுமன்ற உறுப்பினருமான கனிமொழி சென்னையில் இருந்து கோவைக்கு விமானம் மூலம் வந்தார். அவருக்கு விமான நிலையத்தில் திமுக மகளிர் அணியினர் உற்சாக வரவேற்பு அளித்தனர்.

இதன் பின்னர் செய்தியாளர்களுக்கு பேட்டியளித்த கனிமொழி பேசுகையில், சென்ற முறை சென்னையில் மழையால் அதிக பாதிப்பு ஏற்பட்டது எனவும் ஆனால், அதன் பின்பும் இந்த அரசு பாடம் கற்றுகொள்ளவ்வில்லை என்றார். தண்ணீர் வரும் வழித்தடங்கள் சரி செய்யப்படவில்லை என தெரிவித்த அவர், இந்த முறை சென்னையில் ஓரளவிற்குப் பாதிப்புகள் குறைந்ததற்கு புயல் வலுவிழந்ததே காரணம் என தெரிவித்தார்.
மீண்டும் வெள்ளமோ புயலோ ஏற்பட்டால் பாதிப்பு ஏற்படும் சூழல் உள்ளது என தெரிவித்தவர், இன்றைய ஆட்சி சுற்றுப்புறச் சூழலையோ, நீர்நிலைகளைப் பாதுகாக்கக் கூடிய மனநிலையில் இல்லை எனவும் தெரிவித்தார். கார்த்திகை திருநாளை முன்னிட்டு பிரச்சாரம் துவங்கப்படுகின்றதா என்ற கேள்விக்கு பதில் அளித்த கனிமொழி, திமுக பிரச்சாரத்தை துவங்கி நிறைய நாட்களாகி விட்டது எனவும் பிரச்சாரத்திற்கு இந்த நாள் அந்த நாள் என்ற வேறுபாடும் கிடையாது என தெரிவித்தார்.

மேலும், 2 ஜி வழக்கு விசாரணை வேகமாக நடைபெற்று வரும் நிலையில், அது பாதிப்பை ஏற்படுத்துமா என்ற கேள்விற்கு 2ஜி வழக்கில் தீர்ப்பு ஏற்கனவே வந்துவிட்டது என்றவர், இதில் குற்றம் சாட்டப்பட்டவர்கள் குற்றவாளிகள் இல்லை என நீதிபதி தெரிவித்துவிட்டதாக கூறினார்.
சமூக வலைதளங்களில் திமுக குறித்து எழும் விமர்சனங்கள் குறித்த கேள்விக்கு வலைதளங்களில் பா.ஜ.க, அதிமுகவினர் பொய் பிரச்சாரங்களை தவறான செய்திகளை முன்னெடுத்து வருகின்றனர் என கனிமொழி குற்றம்சாட்டினார். இதனையடுத்து, சாலை மார்க்கமாக சேலம் புறப்பட்டுச் சென்றார்.