கோவை: கோவை சாய்பாபா காலனி அருகே மசாஜ் செய்வதாக கூறி மூதாட்டியிடம் நான்கரை பவுன் நகையை திருடிச் சென்ற இளைஞரை போலீசார் தேடி வருகின்றனர்.
கோவை: கோவை சாய்பாபா காலனி அருகே மசாஜ் செய்வதாக கூறி மூதாட்டியிடம் நான்கரை பவுன் நகையை திருடிச் சென்ற இளைஞரை போலீசார் தேடி வருகின்றனர்.
கோவை சாய்பாபா காலனி மருதுகுட்டி வீதியைச் சேர்ந்தவர் மீனாட்சி அம்மாள் (75), இவருக்கு கை, கால், மூட்டு மற்றும் நரம்பு தளர்வு பாதிப்பு உள்ளது.
இந்நிலையில், கடந்த மூன்று நாட்களுக்கு முன்பு இவரது செல்போனில் தொடர்பு கொண்ட ஒரு நபர் ஆயில் மசாஜ் செய்தால் நரம்புத் தளர்வு சரியாகும் என கூறியுள்ளார். அதை நம்பிய மீனாட்சி அம்மாள் அவரை நேற்று வீட்டுக்கு வரவழைத்தார்.
இந்த நிலையில், நேற்று மீனாட்சி அம்மாள் வீட்டுக்கு வந்த 30 வயது மதிக்கத்தக்க வாலிபர் ஆயில் மசாஜ் செய்ய முகம், கை, கால்களை கழுவி விட்டு வருமாறு மீனாட்சி அம்மாளிடம் கூறியுள்ளார்.
இதையடுத்து, மூதாட்டி தனது நான்கரை பவுன் தங்க நகையை அங்குள்ள மேஜை மீது கழட்டி வைத்துவிட்டு முகம் கழுவச் சென்றுள்ளார். அப்போது, உடனடியாக அந்த வாலிபர் நகையைத் திருடிவிட்டு தப்பிச் சென்று விட்டார். இதுகுறித்து சாய்பாபா காலனி போலீசார் வழக்குப்பதிவு செய்து குற்றவாளியை தேடி வருகின்றனர்.