பொள்ளாச்சி: பொள்ளாச்சி அருகே உள்ள சின்ன நெகமம் ஊராட்சிக்கு உட்பட்ட அய்யம்புதூர் கிராமத்தில் உள்ள பொதுமக்கள் பயன்பெறும் வகையில், அம்மா நகரும் நியாய விலைக்கடை துவக்க விழா நிகழ்ச்சி இன்று நடைபெற்றது.
பொள்ளாச்சி: பொள்ளாச்சி அருகே உள்ள சின்ன நெகமம் ஊராட்சிக்கு உட்பட்ட அய்யம்புதூர் கிராமத்தில் உள்ள பொதுமக்கள் பயன்பெறும் வகையில், அம்மா நகரும் நியாய விலைக்கடை துவக்க விழா நிகழ்ச்சி இன்று நடைபெற்றது.

இதில், சட்டப்பேரவை துணை சபாநாயகர் பொள்ளாச்சி ஜெயராமன் கலந்துகொண்டு பொதுமக்களுக்கு ரேஷன் பொருட்களை வழங்கினார். பின்னர், செய்தியாளர்களுக்கு அவர் அளித்த பேட்டியின்போது, திமுக இளைஞரணி செயலாளர், உதயநிதி ஸ்டாலின் காவல்துறை அதிகாரியை மிரட்டும் தோணியில் பேசியதற்கு கண்டனம் தெரிவித்தார்.

மேலும் அவர் பேசுகையில், கொரோனா தொற்று காரணமாக அதிக கூட்டங்களை அரசியல் கட்சிகள் கூட்டக் கூடாது என்பது நாடு முழுவதும் உள்ள நடைமுறை. "உதயநிதி ஸ்டாலினை கண்டு அதிமுக பயப்படாது. அவரது தாத்தா கலைஞரையும் அதிமுக சந்தித்து உள்ளது. தற்போது ஸ்டாலினையும் சந்தித்து வருகிறது. இவர் ஒரு சாதாரணமான அரசியல் பேச்சாளர், நடிக்க வாய்ப்பு இல்லாததால் குடும்ப கட்சிக்காக பிரச்சாரம் செய்து வருகிறார்", என்று தெரிவித்தார்.
"ஆட்சி அதிகாரத்தில் இல்லாத போதே, காவல்துறையினரை மிரட்டுகிறார்கள், இன்னும் தேர்தல் நெருங்க நெருங்க எவ்வளவு அராஜகத்தில் ஈடுபட போகிறார்கள் என்பது தெரியவில்லை. இது வன்மையாக கண்டிக்கத்தக்கது. சொடுக்கு போடும் நேரத்தில் ஆட்சிக்கு வருவோம், என்று ஸ்டாலின் கூறினார். ஆனால், நான்கு ஆண்டுகளாக அதிமுக ஆட்சியை ஒன்றும் செய்ய முடியவில்லை. 2021 ஆம் ஆண்டு அதிமுக இதைவிட வலுவாக வெற்றி பெற்று ஆட்சி அமைக்கும்" என்று அவர் தெரிவித்தார்.