வேல் யாத்திரையை தொடங்கியதிலிருந்து திமுக தலைவர் ஸ்டாலினுக்கு தூக்கம் போய் விட்டது - கோவையில் பாஜக மாநில தலைவர் முருகன் பேட்டி
கோவை: கோவையில் இன்று நடைபெற்ற பாஜகவின் வேல் யாத்திரையின் போது, தைப்பூசத்தை விடுமுறை நாளாக அறிவிக்க வேண்டும் என்று பாஜக மாநில தலைவர் முருகன் கோரிக்கை விடுத்துள்ளார்.
கந்த சஷ்டி கவசத்தை இழிவுபடுத்தியதாக கருப்பர் கூட்டத்தை கண்டிக்கும் வகையில் கடந்த 6ஆம் தேதி முதல் பாஜகவின் மாநில தலைவர் முருகன் தலைமையில் வேல் யாத்திரை நடைபெற்று வருகிறது. அந்த வகையில், வேல் யாத்திரை பொதுக்கூட்டத்தில் பங்கேற்க கோவை வந்த பாஜக மாநிலத் தலைவர் முருகனுக்கு விமான நிலையத்தில் அக்கட்சித் தொண்டர்கள் உற்சாக வரவேற்பு அளித்தனர்.
இதனை தொடர்ந்து பாஜக மாநில தலைவர் முருகன் அரசு விருந்தினர் மாளிகையில் கர்நாடக துணை முதலமைச்சர் அஸ்வத் நாராயணனை சந்தித்து வாழ்த்து பெற்றார். பின்னர், இருவரும் மருதமலை முருகன் கோவிலுக்கு சென்று வழிபட்டனர். தொடர்ந்து சிவானந்தா காலனியில் அமைக்கப்பட்டிருந்த வேல் யாத்திரை பொதுக்கூட்ட மேடைக்கு வந்த பாஜகவின் மாநில தலைவர் முருகனுக்கு அங்கு திரண்டு இருந்த பாஜக தொண்டர்கள் மேளதாளங்கள் முழங்க பட்டாசுகள் வெடித்து உற்சாக வரவேற்பு அளித்தனர்.
அங்கு திரண்டு இருந்த சுமார் ஆயிரத்திற்கும் மேற்பட்ட தொண்டர்கள் இடையே பாஜகவின் மாநில துணைத்தலைவர் அண்ணாமலை பேசுகையில், திராவிட கட்சிகளுக்கு பயம் விட்டுப்போய் விட்டது எனவும் இதை யார் வேண்டுமானாலும் பேசலாம் என்ற நிலை இருந்தது எனவும் தற்போது பாஜகவின் எழுச்சிக்குப் பிறகு, அது மாறி இருக்கிறது எனவும் தெரிவித்தார்.
மேலும், 2021 சட்டமன்ற தேர்தலில் கோவை பாஜகவின் கோட்டை என்பதை நிரூபிக்கும் எனவும் கர்நாடக மாநிலத்தின் துணை முதலமைச்சர் அஸ்வத் நாராயணன் மிஸ்டர் கிளீன் என்று பெயரெடுத்தவர் என புகழாரம் சூட்டினார். அதேபோல, பாஜக சார்பில் தேர்ந்தெடுக்கப்படும் சட்டமன்ற உறுப்பினர்களும் மிஸ்டர் கிளீன் ஆக இருப்பார்கள் என்று அவர் தெரிவித்தார்.
அதன் பின், கர்நாடக துணை முதலமைச்சர் அஸ்வத் நாராயணன், வெற்றிவேல் வீரவேல் என்று கூறி உரையை தொடங்கினார். தமிழ் கடவுள் முருகனையும், கந்த சஷ்டிக் கவசத்தையும் அவதூறாகப் பேசி அவர்களை சும்மா விடக்கூடாது எனவும் திமுகவின் இந்து விரோத போக்குக்கு எதிராக பாஜக தொண்டர்கள் பொங்கி எழுந்து வருகின்றனர் எனவும் தெரிவித்தார். தமிழக மக்கள் பாஜகவுக்கு வாய்ப்பு கொடுக்கும் பட்சத்தில், தமிழகத்தை முன்னோடி மாநிலமாக எடுத்துச் செல்வோம் எனவும் தமிழகத்தை தாண்டியும் கர்நாடகா உள்ளிட்ட மாநிலங்களிலும் வேல் யாத்திரை குறித்து ஒவ்வொருவரும் பேசி வருகின்றனர் எனவும் தெரிவித்தார்.
பின்னர், பாஜக தேசிய மகளிர் அணி தலைவர் வானதி ஸ்ரீனிவாசன் பேசுகையில், எதிர்வரும் சட்டமன்ற தேர்தலில் பாஜக உறுப்பினர்கள் கட்டாயம் வெற்றி பெற்று கோட்டைக்கு செல்வார்கள் எனவும் குறிப்பாக கோவையிலிருந்து பாஜக சட்டமன்ற உறுப்பினர்கள் தேர்வு செய்யப்படுவார்கள் எனவும் தெரிவித்தார். கிராமத்தில் பிறந்த தன்னை பாஜக தேசிய மகளிர் அணி தலைவராக பொறுப்பு வழங்கி அழகு பார்த்து இருக்கிறது எனவும் நம்முடன் பணியாற்றிய தமிழிசை சவுந்தரராஜனுக்கு பாஜக தெலுங்கானா மாநிலத்தில் கவர்னர் பதவி வழங்கி உள்ளது எனவும் தெரிவித்தார்.
மேலும், ஹிந்து மக்களையும் இந்து தெய்வங்களையும் இழிவுபடுத்துவதை எப்போதும் ஏற்றுக்கொள்ள முடியாது என்றும் அவர் குறிப்பிட்டார்.
இதனைத்தொடர்ந்து பாஜகவின் மாநில தலைவர் முருகன் பேசுகையில், தான் வேல் யாத்திரையை தொடங்கியதிலிருந்து திமுகவுக்கும், திமுகவின் தலைவர் ஸ்டாலினுக்கும் தூக்கம் போய் விட்டது எனவும் வேல் யாத்திரை யாருக்கும் தொந்தரவு இன்றி அமைதியாக நடைபெற்று வருகிறது எனவும் தெரிவித்தார்.
பாஜகவுக்கு அமைப்பு ரீதியில் பலம் குறைந்த கடலூர், திருவண்ணாமலை உள்ளிட்ட இடங்களில் மக்களிடையே தற்போது வரவேற்பும், ஆதரவும் பெருமளவில் கிடைத்துள்ளது, எனவும் தெரிவித்தார். கொரோனா தாக்கும் என பயந்து ஸ்டாலின் வீட்டை விட்டு வெளியேறாமல் இருந்தார் எனவும், ஆனால் பாஜகவினர் ஊரடங்கு நேரத்திலும் வெளியே வந்து ஏழை எளியவர்களுக்கு உணவு வழங்கினர் என்று தெரிவித்தார்.
அவர் கந்த சஷ்டி கவசத்தையும் தமிழ் கடவுள் முருகனையும், இழிவுபடுத்தியவர்களுக்கு தக்க பாடம் புகட்ட வேண்டும், என்று வேண்டுகோள் விடுத்தார்.
ஊழல் என்பது திமுகவுடன் பிறந்தது, எனவும் ஊழலையும் திமுகவையும் பிரிக்க முடியாது எனவும் கூறிய அவர், திமுகவில் ஆட்சியைப் பிடிக்கும் கனவு கனவாகவே இருக்கப் போகிறது என தெரிவித்தார்.
மேலும், மற்ற மத பண்டிகைகளுக்கு அரசு விடுமுறை விடப்படுவது போலவே தைப்பூசத்துக்கும், தமிழக அரசு விடுமுறை அளிக்க வேண்டும், என கோரிக்கை விடுத்தார்.
இதில் சுமார் ஆயிரத்திற்கும் மேற்பட்ட பாஜக தொண்டர்கள் கலந்து கொண்டனர். சுமார் 900 காவலர்கள் பாதுகாப்பு பணியில் ஈடுபடுத்தப்பட்டனர்.