கோவை: பா.ஜ.கவிற்கு இனி தமிழகத்தில் பின்னடைவு என்பதே கிடையாது எனவும் முன்னேற்றம் மட்டும்தான் என பா.ஜ.க தேசிய மகளிரணி தலைவர் வானதி சீனிவாசன் தெரிவித்தார்.
கோவை: பா.ஜ.கவிற்கு இனி தமிழகத்தில் பின்னடைவு என்பதே கிடையாது எனவும் முன்னேற்றம் மட்டும்தான் என பா.ஜ.க தேசிய மகளிரணி தலைவர் வானதி சீனிவாசன் தெரிவித்தார்.
பாரதீய ஜனதா கட்சியின் தேசிய மகளிரணி தலைவராக டெல்லியில் பொறுப்பேற்ற பின்னர் வானதி சீனிவாசன் விமானம் மூலம் இன்று கோவை திரும்பினார். அவருக்கு கோவை விமான நிலையத்தில் பா.ஐ.க சார்பில் உற்சாக வரவேற்பு அளிக்கப்பட்டது.
விமான நிலையத்தில் வானதி சீனிவாசனை வரவேற்க வந்திருந்த பெண்களில் சிலர் வானதி சீனிவாசன் முகமூடி அணிந்து அவரை வரவேற்றனர்.
இதன் பின்னர் செய்தியாளர்களுக்கு பேட்டி அளித்த வானதி சீனிவாசன் பேசுகையில், பா.ஜ.க மகளிரணி தலைவர் பதவி என்ற மிக முக்கியமான கௌரவத்தை தமிழகத்திற்கு வழங்கியிருக்கின்றனர் எனவும் தென்னிந்தியாவில் முதல்முறையாக தமிழகத்திற்கு இந்த வாய்ப்பு வழங்கப்பட்டு இருக்கின்றது என தெரிவித்தார்.
மத்திய அரசின் திட்டங்களை பெண்கள் வழியாக கொண்டு செல்வது எங்கள் பிரதான பணியாக இருக்கும் என கூறிய அவர், அனைத்து நிலையிலும் பெண்களுக்கு உதவும் முக்கியத்துவம் கொடுக்கும் அரசாக மத்திய அரசு இருக்கின்றது எனவும், நாடு முழுவதும் பெண்களுக்கு பாதுகாவலராக பிரதமர் இருக்கின்றார் என்பதை மக்களிடம் கொண்டு செல்வோம் என தெரிவித்தார்.
தமிழகத்தில் அரசியல் மாற்றம் ஏற்பட வேண்டும் என்பதற்காக வெற்றிவேல் யாத்திரையை மாநில தலைவர் முருகன் நடத்திக்கொண்டு இருக்கின்றார் என தெரிவித்த அவர், தமிழகத்தில் பா.ஜ.க ஆட்சியை ஏற்படுத்துவதையே மாற்றமாக பார்க்கின்றோம் என்றார்.
மேலும், தே.ஐ.கூட்டணியில் பா.ஐ.க இருக்கின்றோம் எனவும் கூட்டணியில் எந்த மாற்றமும் இல்லை எனவும் கூட்டணியின் தலைமையாக அதிமுக இருக்கின்றது எனவும் தெரிவித்த அவர், ஒவ்வொரு கட்சிக்கும் ஆட்சி அமைக்க வேண்டும் என்பதுதான் எதிர்பார்ப்பாக இருக்கும் எனவும் தெரிவித்தார்.
வானதி சீனிவாசன் கருத்துக்கு, அதிமுகவின் "நமது அம்மா" நாளிதழ் எதிர்வினையாற்றியது குறித்த கேள்விற்கு, பா.ஜ.க யாரை பார்த்தும் பயப்படவில்லை எனவும் சட்டப்படி நடைபெறும் வேல் யாத்திரையைத் தடுத்தால் அது மக்களிடையே எதிர்விளைவுகளை ஏற்படுத்தும் என்று தான் சொன்னேன் எனவும் அதை அவர்கள் (அதிமுக) சரியாக புரிந்து கொள்ளவில்லை எனவும் வானதி சீனிவாசன் தெரிவித்தார்.
பெண்களின் கதாநாயகராகப் பிரதமர் மோடி இருக்கின்றார் என தெரிவித்த அவர், கூட்டணியில் தொகுதி உடன்பாடுகள் குறித்து கட்சி தலைமை முறைப்படி அறிவிக்கும் எனவும் தெரிவித்தார்.
மேலும், வெற்றிவேல் யாத்திரை ஒரு அடையாள யாத்திரை எனவும் இந்துக்களைக் கொச்சைப் படுத்துபவர்களை அம்பலப்படுத்தவே இந்த யாத்திரை நடத்தப்படுகின்றது எனவும் தெரிவித்த அவர், பா.ஜ.கவிற்கு இனி தமிழகத்தில் பின்னடைவு என்பதே கிடையாது, முன்னேற்றம் மட்டும்தான் எனவும் தெரிவித்தார்.
வானதி சீனிவாசன் வருகையை முன்னிட்டு ஏராளமான தொண்டர்கள் குவிந்ததால் விமான நிலையம் பகுதியில் சிறிது நேரம் போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டது.