கோவை: கோவை மாவட்டத்தில் பெய்து வரும் தொடர் மழையால் நொய்யல் ஆற்றில் வினாடிக்கு 280 கன அடி தண்ணீர் வருகிறது. இதன் காரணமாக கோவையில் 10-க்கும் மேற்பட்ட குளங்கள் நிரம்பி வழிகின்றன.
கோவை: கோவை மாவட்டத்தில் பெய்து வரும் தொடர் மழையால் நொய்யல் ஆற்றில் வினாடிக்கு 280 கன அடி தண்ணீர் வருகிறது. இதன் காரணமாக கோவையில் 10-க்கும் மேற்பட்ட குளங்கள் நிரம்பி வழிகின்றன.
கோவை மாவட்டத்தில் தற்போது வடகிழக்கு பருவமழை தீவிரமாக பெய்து வருகிறது. குறிப்பாக, மேற்கு தொடர்ச்சி மலை மற்றும் அதனை ஒட்டியுள்ள பகுதிகளில் நல்ல மழை பெய்து வருவதால் நொய்யல் ஆற்றில் தண்ணீர் வரத்து அதிகரித்துள்ளது.
அதன்படி, தற்போது சித்திரைச்சாவடி தடுப்பணை, குனியமுத்தூர் தடுப்பணை ஆகியவற்றில் தண்ணீர் சீறிப்பாய்ந்து செல்கிறது. இதனை ஏராளமான பொதுமக்கள் கண்டு ரசித்துச் செல்கின்றனர்.
இதனிடையே, கோவை மாநகரில் நேற்று முன்தினம் இரவில் பெய்த பலத்த மழை காரணமாக அவினாசி சாலையில் இருந்து காட்டூர் செல்லும் சாலையில் உள்ள ரயில்வே மேம்பாலத்தின் கீழ்ப் பகுதியில் மழைநீர் தேங்கியது. இதனை மாநகராட்சி ஊழியர்கள் நேற்று காலை மோட்டார் மூலம் உறிஞ்சி அகற்றினர்.
கடந்த சில நாட்களாக பெய்து வரும் மழையால் நகரின் பல்வேறு சாலைகள் சேறும் சகதியுமாக காட்சி அளிக்கிறது. இதனால் வாகன ஓட்டிகள் கடும் அவதி அடைந்துள்ளனர்.
அதேபோல, பருவமழையால் பேரூர் படித்துறையை தொட்டபடி நொய்யல் ஆறு செல்கிறது. இதனை அந்த பகுதியைச் சேர்ந்த ஏராளமான பொதுமக்கள் திரண்டு வந்து பார்வையிட்டனர். கோவையில் பெய்துவரும் மழை காரணமாக உக்குளம், உக்கடம் பெரியகுளம், குறிச்சி குளம் உள்ளிட்ட குளங்கள் நிரம்பி உள்ளன.
இது குறித்து பொதுப்பணித்துறை அதிகாரிகள் கூறியதாவது:- நொய்யல் ஆற்றில் தற்போது வினாடிக்கு 280 கன அடி தண்ணீர் வந்து கொண்டுள்ளது. நொய்யல் ஆற்றுத் தண்ணீர் கால்வாய்கள் மூலமாக குளங்களுக்கு திருப்பி விடப்பட்டுள்ளது. பருவமழை காரணமாக கோவை உக்குளம், வேடப்பட்டி புதுக்குளம், கோனராம்பதி குளம், நரசம்பதிகுளம், கிருஷ்ணாம்பதி குளம், செல்வம்பதிகுளம், குமாரசாமி குளம், வாலாங்குளம், குறிச்சி குளம், உக்கடம் பெரியகுளம் ஆகிய பத்து குளங்கள் முழுவதும் நிரம்பி விட்டன.
மேலும், இது தவிர கங்க நாராயண சமுத்திரம், சொட்டை ஆண்டி குட்டை, பேரூர் பெரியகுளம், செங்குளம் உள்ளிட்ட குளங்கள் 80% நிரம்பிவிட்டன. தற்போது இந்த குளங்களுக்கு தான் நொய்யல் ஆற்றில் தண்ணீர் திறந்து விடப்பட்டுள்ளது. இன்னும் சில நாட்கள் மழை நீடித்தால் இந்த குளங்கள் முழுவதும் நிரம்பி விடும். புட்டுவிக்கி தடுப்பணை வரை நொய்யல் ஆற்றில் தற்போது தண்ணீர் வந்து கொண்டுள்ளது, இவ்வாறு அவர்கள் தெரிவித்தனர்.