கோவை: கோவையில் விபத்தில் காயமடைந்த சுகாதார ஆய்வாளரை ஆம்புலன்சில் அழைத்துச் சென்ற போது, அவரை ஏற்றி சென்ற ஆம்புலன்ஸ் மீது லாரி மோதியதி விபத்தில், சுகாதார ஆய்வாளர் உயிரிழந்த சம்பவம் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.
கோவை: கோவையில் விபத்தில் காயமடைந்த சுகாதார ஆய்வாளரை ஆம்புலன்சில் அழைத்துச் சென்ற போது, அவரை ஏற்றி சென்ற ஆம்புலன்ஸ் மீது லாரி மோதியதி விபத்தில், சுகாதார ஆய்வாளர் உயிரிழந்த சம்பவம் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.
இந்த பரிதாப சம்பவம் பற்றி போலீஸ் தரப்பில் கூறியதாவது:-
நாமக்கல் மாவட்டம் மோகனூர் அருகே உள்ள மணப்பள்ளியைச் சேர்ந்தவர் சங்கரன் இவருடைய மகன் தேவராஜ் (29) சுகாதாரத்துறை ஆய்வாளராக பயிற்சி பெற்று வந்தார். இவர் அந்த பகுதியில் மோட்டார் சைக்கிளில் சென்றபோது விபத்தில் சிக்கினார். இதில் படுகாயமடைந்த தேவராசை அங்குள்ள தனியார் மருத்துவமனையில் சேர்த்தனர். அங்கு அவருக்கு முதலுதவி சிகிச்சை அளிக்கப்பட்டது.
பின்னர் மேல் சிகிச்சைக்காக கோவைக்கு அழைத்துச் செல்லுமாறு மருத்துவர்கள் கூறினர். இதனால் தனியார் மருத்துவமனையில் உள்ள ஆம்புலன்ஸ் வேனில் அவரை ஏற்றி அனுப்பி வைத்தனர். வேனை சங்கர் (35), என்பவர் ஓட்டி வந்தார்.
இந்நிலையில், கருமத்தம்பட்டி சுங்கச்சாவடி அருகே நேற்று முன்தினம் இரவில் ஆம்புலன்ஸ் வேன் வந்தபோது, முன்னால் சிமெண்டு ஏற்றிச் சென்ற லாரி மீது வேகமாக மோதியது. விபத்தில் இடிபாடுகளில் சிக்கி சுகாதார ஆய்வாளர் தேவராஜ் சம்பவ இடத்திலேயே பலியானார். ஆம்புலன்ஸ் டிரைவர் சங்கர் மற்றும் நோயாளியுடன் வந்த 3 பேர் படுகாயம் அடைந்தனர்.
விபத்து நடந்ததை அறிந்த அப்பகுதி பொதுமக்கள் காயமடைந்தவர்களை மீட்டு அங்குள்ள தனியார் மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். இந்த விபத்து பற்றிய தகவல் அறிந்ததும் கருமத்தம்பட்டி போலீசார் சம்பவ இடத்துக்கு விரைந்து வந்து உடலை மீட்டு பிரேத பரிசோதனைக்காக கோவை அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். தேவராசை மரணம் விரட்டி விரட்டி சென்றது சோகத்தை ஏற்படுத்தி உள்ளது.