கோவை: தீபாவளி பண்டிகையையொட்டி சிறு, குறு தொழில் நிறுவனங்களுக்கு உதவும் வகையில் மத்திய, மாநில அரசுகள் தீபாவளி சிறப்பு கடன் வழங்க வேண்டும் என தொழில்முனைவோர்கள் வலியுறுத்தியுள்ளனர்.
கோவை: தீபாவளி பண்டிகையையொட்டி சிறு, குறு தொழில் நிறுவனங்களுக்கு உதவும் வகையில் மத்திய, மாநில அரசுகள் தீபாவளி சிறப்பு கடன் வழங்க வேண்டும் என தொழில்முனைவோர்கள் வலியுறுத்தியுள்ளனர்.
கோவை மாவட்டத்தில் சுமார் 1 லட்சத்து 50 ஆயிரத்திற்கும் அதிகமான சிறு குறு, நடுத்தர மற்றும் பெரும் தொழில் நிறுவனங்கள் செயல்பட்டு வருகின்றன. பவுண்டரி, டெக்ஸ்டைல்ஸ், பவர்லூம், வெட் கிரைண்டர்ஸ், பம்புகள், பிளாஸ்டிக் தொழிற்சாலைகள் என சுமார் 60 சதவீதம் தொழிற்சாலைகள் கிராமப்புறங்களிலும், 40 சதவீதம் தொழிற்சாலைகள் நகர்புறங்களிலும் செயல்படுகின்றன.
இதில் கிராமப்புறங்களைச் சுற்றி சுமார் 325 பெரிய தொழிற்நிறுவனங்களும், மாநகராட்சிப் பகுதிகளைச் சுற்றி சுமார் 100 பெரிய தொழில் நிறுவனங்களும் உள்ளன. கோவையில் உள்ள இத்தொழில் நிறுவனங்களில் சுமார் 5 லட்சம் தொழிலாளர்கள் பணிபுரிந்து வருகின்றனர்.
கோவையில் சிறு, குறுந்தொழில் முனைவோர்கள் மட்டும் 15 ஆயிரம் முதல் 20 ஆயிரம் பேர் வரை உள்ளனர். அவர்களது தொழில்நிறுவனங்களில் 1 லட்சத்திற்கும் அதிகமான தொழிலாளர்கள் பணிபுரிந்து வருகின்றனர். குறுந்தொழில்கள் முக்கியமாக ஜாப் ஆர்டர்களை நம்பியே உள்ளனர். ஆட்டோ மொபைல் தொழில் சார்ந்த உதிரிபாகங்கள் தயாரிப்பு, பம்புசெட் உதிரிபாகங்கள் தயாரிக்க தேவைப்படும் பொருட்கள் தயாரிப்பது, ஜவுளி தொழில்துறையில் உள்ள இயந்திரங்களுக்கு தேவையான பொருட்களை தயாரிப்பது உள்ளிட்டவை ஜாப் ஆர்டர்களாக பெற்று தயாரிப்பார்கள்.
கொரோனா ஊரடங்கிற்கு பிறகு இந்த தொழில் நிறுவனங்கள் முற்றிலும் முடங்கி உள்ளன. இதனிடையே வரும் 14ம் தேதி நாடு முழுவதும் தீபாவளி பண்டிகை கொண்டாடப்பட உள்ளது.
தொழிலாளர்களுக்கு சம்பளம் வழங்குதல், போனஸ் உள்ளிட்டவை வழங்குவதற்கு போதுமான நிதி இல்லாத காரணத்தால் சிறு,குறு தொழில் நிறுவனங்கள் மிகவும் இக்கட்டான சூழ்நிலையில் உள்ளனர். இதனை கருத்தில் கொண்டு சிறு,குறு தொழில் நிறுவனங்களுக்கு மத்திய, மாநில அரசுகள் தீபாவளி சிறப்பு கடனாக ரூ.50 ஆயிரம் முதல் ரூ.1 லட்சம் வரை உடனடியாக வழங்க வேண்டும் என தொழில்முனைவோர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.
இதுகுறித்து கோவை மாவட்ட பம்புசெட் மற்றும் உதிரிபாகங்கள் தயாரிப்பாளர் சங்க தலைவர் மணிராஜ் கூறுகையில், ‘‘கொரோனா ஊரடங்குக்கு பின் மீண்டும் தொழிலை புதிதாக தான் துவங்கியுள்ளோம். கொரோனா கால சிறப்பு கடன்கள் அறிவிக்கப்பட்டன. ஆனால், அதில் ஏற்கனவே கடன் வாங்கிய வரவு செலவு கணக்கு அடிப்படையில் 20 சதவீதம் கடன் வழங்கப்பட்டன. இதில் பெரிய நிறுவனங்கள் பயன்பெற்றன.
ஆனால் சிறு, குறு தொழில் நிறுவனங்கள் பெரும்பாலும் வங்கிகளில் சொத்து பினை இல்லாமல் தான் இதுவரை கடன் பெற்றிருப்பார்கள். இதன் காரணமாக கொரோனா கால சிறப்பு கடன் பெரும்பாலும் சிறு, குறு தொழில் நிறுவனங்களுக்கு கிடைக்கவில்லை. கிடைத்தவர்களுக்கும் மிகுந்த குறைந்த அளவே கிடைத்தது. இதனிடையே தீபாவளி பண்டிகையும் நெருக்கிவிட்டது. தொழிலாளர்களுக்கு சம்பளம், போனஸ், கட்டிட வாடகை என பல்வேறு தேவைகளுக்கு சிறு,குறு தொழில் நிறுவனங்கள் பணம் இல்லாமல் தவித்து வருகின்றனர். அவர்களுக்கு மத்திய, மாநில அரசுகள் தீபாவளி சிறப்பு கடனாக ரூ.50 ஆயிரம் முதல் ரூ.1 லட்சம் வரை உடனடியாக வழங்க வேண்டும்,’’ என்றார்.
இதுகுறித்து கோவை, திருப்பூர் மாவட்ட ஊரக தொழில் முனைவோர் சங்கத்தினர் (காட்மா) தலைவர் சிவக்குமார் கூறுகையில், கொரோனா கால சிறப்பு கடனாக ஏற்கனவே கடன் வாங்கியவர்களுக்கு அதன் அடிப்படையில் வங்கிகளில் கடன் அளிக்கப்பட்டது. ஆனால் கடன் வாங்காமல் தொழிலை நடத்தியவர்களுக்கு கடன் பெரும்பாலும் கிடைக்கவில்லை. தீபாவளி பண்டிகையொட்டி முத்ரா கடன் திட்டத்தில் தொழில் நிறுவனங்களுக்கு தேவைக்களுக்கு ஏற்றவாறு கடன் வழங்க வேண்டும்.
மேலும், கொரோனா ஊரடங்கிற்கு பிறகு தொழிலை நடத்துவது என்பது மிகப்பெரிய சவாலக உள்ளது. வங்கிகளில் கடன் கிடைக்காமல் தனியார் கடன் நிறுவனத்தில் குறுந்தொழில் முனைவோர்கள் கடன் பெற்று தொழிலை நடத்தி வருகின்றனர். இதில் இருந்து அவர்கள் மீண்டு வர இந்த சிறப்பு கடன் உதவியாக இருக்கும்,’’ என்றார்.
இதுகுறித்து தமிழ்நாடு கைத்தொழில் மற்றும் குறுந்தொழில் முனைவோர்கள் சங்கம் கோவை மாவட்டம் (டேக்ட்) தலைவர் ஜேம்ஸ் கூறுகையில்,
கோவை மாவட்ட ஆட்சியர் மூலமாக சிறு, குறுந்தொழில் நிறுவனங்களுக்கு கொரோனா காலத்தில் சிறப்பு கடன் வழங்க சுமார் 400 விண்ணப்பங்கள் வங்கிகளுக்கு வழங்கப்பட்டன. ஆனால் அதில் பெரும்பாலான தொழில்முனைவோர்களுக்கு தற்போது வரை கடன் வழங்கப்படவில்லை. வாடகை கொடுக்கக்கூட வழியில்லாமல் குறுந்தொழில் முனைவோர்கள் மிகவும் இக்கட்டான சூழ்நிலையில் உள்ளனர். தமிழக அரசு உடனடியாக ரூ.1 லட்சம் வரை அனைத்து குறுந்தொழில் முனைவோர்களுக்கும் தீபாவளி சிறப்பு கடன் வழங்க வேண்டும்,’’ என்று தெரிவித்தார்.