கோவை: இலங்கை கிரிக்கெட் வீரர் முத்தையா முரளிதரன் வாழ்க்கை வரலாற்று திரைப்படத்தில் நடிகர் விஜய் சேதுபதி நடிப்பதற்கு எதிர்ப்புகள் கிளம்பி உள்ளது.
கோவை: இலங்கை கிரிக்கெட் வீரர் முத்தையா முரளிதரன் வாழ்க்கை வரலாற்று திரைப்படத்தில் நடிகர் விஜய் சேதுபதி நடிப்பதற்கு எதிர்ப்புகள் கிளம்பி உள்ளது.
தமிழகத்தை பூர்வீகமாக கொண்டது இலங்கை சுழற்பந்து வீச்சாளர் முத்தையா முரளிதரன் குடும்பம். இவரது தாத்தா தேயிலை தோட்ட தொழிலாளியாக சென்றவர். இவர் பிற்காலத்தில் தமிழகம் திரும்பிவிட்ட நிலையில், முரளிதரன் குடும்பத்தினர் இலங்கையிலேயே தங்கி விட்டனர். 1972ம் ஆண்டு இலங்கை கண்டியில் பிறந்த முத்தையா முரளிதரன் 1992ம் ஆண்டு ஆஸ்திரேலிய அணிக்கு எதிரான போட்டியில் அறிமுகமானார். இலங்கை அணிக்காக விளையாடி அவர், சர்வதேச போட்டிகளில் 800 விக்கெட்டுகளை சாய்த்து உள்ளார்.
இதனிடையே, இவரது வாழ்க்கை வரலாறு குறித்த படத்தில் முத்தையா முரளிதரன் கதாபாத்திரத்தில் நடிகர் விஜய் சேதுபதி நடிக்க உள்ளார்.
இந்நிலையில், நடிகர் விஜய் சேதுபதி இலங்கை கிரிக்கெட் வீரர் கதாபாத்திரத்தில் நடிக்க எதிர்ப்புகள் கிளம்பியுள்ளது. நடிகர் விஜய் சேதுபதியை திரை உலகிற்கு அறிமுகப்படுத்திய சீனு ராமசாமி, அரசியல் அமைப்பினர் மற்றும் பல்வேறு தரப்பில் இருந்து எதிர்ப்புகள் கிளம்பி உள்ளது.
இந்த விவகாரம் தொடர்பாக கோவையில் பேட்டியளித்த தந்தை பெரியார் திராவிடர் கழக பொதுச் செயலாளர் கு.ராமகிருஷ்ணன்,
இலங்கை கிரிக்கெட் வீரர் முத்தையா முரளிதரன் வேடத்தில் நடிக்கும் முடிவை நடிகர் விஜய்சேதுபதி கைவிட வேண்டும் என தெரிவித்தார்.
ஈழத்தமிழர்களை கொடூரமாக கொன்று குவித்த சிங்கள பேரினவாத அதிபர் ராஜபக்சேவின் அரசிற்கு துணை போனவர் கிரிக்கெட் வீரர் முத்தையா முரளிதரன் எனவும் அப்படிப்பட்டவரின் வாழ்க்கை வரலாறு தொடர்பான திரைப்படத்தில் நடிகர் விஜய் சேதுபதி நடிப்பது வேதனையளிக்கின்றது என தெரிவித்தார்.
மேலும், தனக்கு தமிழ் தெரியாது என்பதை பெருமையாக சொல்ல கூடியவர் எனவும் சிங்கள மொழியில் மட்டுமே பேசுபவர் முத்தையா முரளிதரன் என்று தெரிவித்த அவர், இப்படிப்பட்ட நபரின் பாத்திரத்தில் மக்களிடம் நன்மதிப்பிற்குரிய நடிகர் விஜய் சேதுபதி நடித்தால் அது உலக தமிழர்கள், ஈழதமிழர்கள் மத்தியில் வேதனையை உருவாக்கும் என்றார்.
அதேபோல, எந்த வடிவத்திலும் சிங்கள அரசிற்கும், ராஜபக்சேவிற்கும் நன்மை பயக்கின்ற செயலில் நடிகர் விஜய்சேதுபதி ஈடுபட கூடாது எனவும் முரளிதரன் வேடத்தில் நடிப்பது தொழில் என்று விஜய்சேதுபதி சொன்னால் அதை ஏற்று கொள்ள முடியாது எனவும் இந்த செயல் தமிழர்களை சமாதானப்படுத்தவும் கடந்த கால கொடுமைகளை மறக்கடிக்கவும் தமிழர்களின் மனதை மாற்றவும் முத்தையா முரளிதரன் என்ற கிரிக்கெட் வீரர் ரூபத்தில் நடத்தப்படுகின்றது எனவும் இதற்கு நடிகர் விஜய்சேதுபதி பயன்படுத்தப்படுகின்றார் என்று தெரிவித்தார்.
மேலும், நடிகர் விஜய்சேதுபதி இந்த படத்தில் நடிக்கும் முடிவை கைவிட வேண்டும் என தெரிவித்த அவர், தமிழ்மக்கள் மத்தியில் மனிதாபிமானி, எளிமையானவர், முற்போகவாவர் என்று எடுத்த பெயர்களை விஜய்சேதுபதி கெடுத்து கொள்ளக்கூடாது என்றார்.
அதேபோல, மக்கள் மனதில் நிலைக்க வேண்டுமானால் முத்தையா முரளிதரன் கதாபாத்திரத்தில் நடிப்பதை நிறுத்தி கொள்ள வேண்டும் எனவும் அதையும் தாண்டி இது கலை, சினிமா என்று சொல்லி முத்தையா முரளிதரன் வேடத்தில் விஜய்சேதுபதி நடித்தால், நிச்சயமாக உலக தமிழர்கள் அனுமதிக்க மாட்டார்கள் என்று கூறினார்.
மேலும், தந்தை பெரியாரின் கருத்துகளுக்கும், பெரியாருக்கும் பற்றுடையவராக நடிகர் விஜய்சேதுபதி இருந்தாலும் கூட, அவரது செயல் தமிழ் இனத்திற்கு மாறாக இருக்குமானால் அதை தந்தை பெரியார் திராவிட கழகம் கண்டிப்பாக எதிர்க்கும் என கூறிய அவர், இந்த திரைப்படத்தை திரையிட அனுமதிக்க மாட்டோம் என தபெதிக பொதுச் செயலாளர் கு.ராமகிருஷ்ணன் தெரிவித்தார்.