உடுமலை சங்கர் கொலை வழக்கின் மேல்முறையீட்டு மனுவிற்கு பதில் மனு தாக்கல் செய்யும்படி கவுசல்யாவின் தந்தை சின்னசாமிக்கு உச்ச நீதிமன்றம் நோட்டீஸ் அனுப்பி உள்ளது.
டெல்லி: உடுமலை சங்கர் கொலை வழக்கின் மேல்முறையீட்டு மனுவிற்கு பதில் மனு தாக்கல் செய்யும்படி கவுசல்யாவின் தந்தை சின்னசாமிக்கு உச்ச நீதிமன்றம் நோட்டீஸ் அனுப்பி உள்ளது.
திருப்பூரில் சாதி மறுப்புத் திருமணம் செய்து கொண்ட சங்கா் மற்றும் கவுசல்யா தம்பதியினா் மீது கடந்த 2016ம் ஆண்டு கொலை வெறித் தாக்குதல் நடத்தப்பட்டது. இந்த தாக்குதலில் கவுசல்யாவின் கணவர் சங்கா் உயிரிழந்தாா்.
மாநிலத்தையே உலுக்கிய இந்தக் கொலை வழக்கில் மரண தண்டனை விதிக்கப்பட்ட 6 பேரில் கவுசல்யாவின் தந்தை சின்னசாமியை வழக்கில் இருந்து விடுவித்து சென்னை உயர்நீதிமன்றம் கடந்த ஜூன் மாதம் உத்தரவிட்டது. மேலும் மணிகண்டன், செல்வகுமார், தமிழ்வாணன், ஜெகதீசன் மற்றும் மதன் ஆகியோரின் தண்டனையை ஆயுள் தண்டனையாக குறைத்தது.
இந்த தீர்ப்பை எதிர்த்து கௌசல்யா உச்சநீதிமன்றத்தில் மேல் முறையீடு செய்தார். சங்கரின் சகோதரர் விக்னேஸ்வரன் மற்றும் தமிழக அரசு சார்பாகவும் மேல்முறையீடு செய்யப்பட்டது.
இந்த நிலையில், இவ்வழக்கு உச்சநீதிமன்ற நீதிபதி எஸ்.கே.கவுல் தலைமையிலான அமர்வு முன்னிலையில் இன்று விசாரணைக்கு வந்தது.
அப்போது, தமிழக அரசின் மேல்முறையீட்டு மனுவிற்கு பதில் மனு தாக்கல் செய்யும்படி சின்னசாமிக்கு உச்ச நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. இதேபோல் மேல்முறையீட்டு மனுக்களுக்கு எதிர்மனுதாரர்கள் அனைவரும் பதில் மனு தாக்கல் செய்யவும் உத்தரவிட்டு விசாரணையை ஒத்திவைத்தது.