கோவையில் முதல்வருக்கு நன்றி தெரிவிக்கும் வகையில், தனியார் கல்லூரி சார்பில் ஒட்டப்பட்டுள்ள போஸ்டர்கள்.
கோவை: கோவை மாநகரில் நேற்று பெய்த கனமழை காரணமாக, மேம்பாலங்கள் கீழ் பகுதிகள் மற்றும் ரயில்வே பாலங்களில் மழை நீர், சாக்கடை நீருடன் தேங்கி நின்றுள்ளது. சில இடங்களில், மழைநீர் வடிந்த போதிலும், மேம்பாலங்களின் கீழ் பகுதிகளில் தேங்கியுள்ள மழை நீர் மற்றும் சகதியால், மக்கள் அவதியடைந்துள்ளனர்.
கோவை மாவட்டத்தில் தொண்டாமுத்தூர், பெரியநாயக்கண்பாளையம், அன்னூர், மேட்டுப்பாளையம், துடியலூர், சூலூர், விமானநிலையம், வேளாண்மை பல்கலைகழகம் என பல்வேறு இடங்களில் நேற்று இரவு நேரத்தில் கனமழை பெய்தது. அதே போல், மாநகரில் கலெக்டர் அலுவலகம், திருச்சி சாலை, டவுன்ஹால், உக்கடம், கவுண்டம்பாளையம் உள்ளிட்ட பல்வேறு பகுதிகளில் மழை பெய்தது.
இதில் கோவை ரயில்நிலையம் அருகே உள்ள லங்கா கார்னர் ரயில்வே பாலம் அருகே பெரும் அளவில், மழை நீர்சூழ்ந்தது. இந்த நீருடன், சாக்கடை நீரும் கலந்ததால் சுமார் 2 அடி உயரத்திற்கு தண்ணீர் தேங்கியது.
அதே போல், அவினாசி மேம்பாலம் கீழ் பகுதி, கிக்கானி ரயில்வே பாலம், காட்டூர் ரயில்வே பாலம், வடகோவை மேம்பாலம் கீழ் பகுதி என பல இடங்களிலும் மழை நீர் தேங்கி நின்றது. இதனை சீர் செய்யும் பொருட்டு மாநகராட்சி ஊழியர்கள், மழை நீரை வெளியேற்றும் பணியில் ஈடுபட்டனர். இதனால், மழைநீர் தேங்கிய அனைத்து பாலங்களும் அடைக்கப்பட்டன.
குறிப்பாக, அவினாசி மேம்பாலம் கீழ் பகுதியில் சேறும், சகதியும் இன்னமும் அகற்றப்படவில்லை. தற்போது, மழை இல்லை என்றாலும், அதில் வாகனங்கள் செல்ல சீரமமாக உள்ளது.
மழை மீண்டும் வந்தால் தற்போது உள்ள சேறும், சகதியும் மீண்டும் அதிகமாகவும் மழை நீர் தேங்கி மழை நீர் வடிவதே சீரமமாகிவிடும், எனவே மாநகராட்சி அதிகாரிகள் உடனடியாக இது தொடர்பாக நடவடிக்கை எடுக்க வேண்டும் என சமூக ஆர்வலர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

இதே போல, கோவை ஆர்.எஸ்புரம் பகுதியில் உள்ள தனியார் பள்ளி மைதானம் ஒன்றில் தற்காலிகமாக செயல்பட்டு வந்த பூ மார்க்கெட்டிலும் வெள்ள நீர் சூழ்ந்தது.

இதனால் வாடிக்கையாளர்களின் வரத்து குறைந்து வியாபாரம் பாதிக்கப்பட்டுள்ளதாக பூ வியாபாரிகள் வேதனை தெரிவித்தனர்.