கோவை: அடிப்படை வசதிகளை உடனடியாக செய்து தர வலியுறுத்தி டிவிஎச் குடியிருப்போர் நல சங்கத்தினர் முதன்மை தலைமை அதிகாரி அலுவலகத்தை முற்றுகையிட்ட சம்பவம் பரபரப்பை ஏற்பட்டது.
கோவை: அடிப்படை வசதிகளை உடனடியாக செய்து தர வலியுறுத்தி டிவிஎச் குடியிருப்போர் நல சங்கத்தினர் முதன்மை தலைமை அதிகாரி அலுவலகத்தை முற்றுகையிட்ட சம்பவம் பரபரப்பை ஏற்பட்டது.
கோவை திருச்சி சாலையில் உள்ள டிவிஎச் என்ற அடுக்குமாடி குடியிருப்பில் சுமார் 400 குடும்பங்கள் வசித்து வருகின்றனர். பிரம்மாண்ட முறையில் கட்டப்பட்டு வரும் இந்த அடுக்குமாடி குடியிருப்பில் வசித்து வருபவர்கள் இன்று முதன்மை தலைமை அதிகாரி அலுவலகத்தை முற்றுகையிட்டு அடிப்படை வசதிகளை உடனடியாக செய்து தர வலியுறுத்தி முதன்மை தலைமை அதிகாரியிடம் வாக்குவாதத்தில் ஈடுபட்டதால் பரபரப்பு ஏற்பட்டது.
இது குறித்து அங்கு வசிக்கும் பொதுமக்கள் கூறுகையில், 12 டவர் கொண்ட அடுக்குமாடி குடியிருப்பு இங்கு அமைக்கப்பட உள்ளதாக விளம்பரம் செய்யப்பட்டது. இதனை நம்பி பொதுமக்கள் பலர் பணம் செலுத்தியதாகவும் 2010ம் ஆண்டு பதிவுகள் ஆரம்பிக்கப்பட்டு 3 டவர்ஸ் 2015ம் ஆண்டிலும், இரண்டாவது டவர் 2016லும் 3வது டவர் 2019 முடிவுற்ற நிலையில் தங்கள் வசம் ஒப்படைக்கப்பட்டதாக தெரிவித்தனர்.
இந்நிலையில், அறிவித்தபடி எந்த அடிப்படை வசதிகளையும் செய்து தராமல் தாங்கள் ஏமாற்றப்பட்டதாகக் குற்றம் சாட்டிய அவர்கள், தற்போது வரை தங்களுக்கு குடிநீர் இணைப்பு வசதி செய்து தரப்படவில்லை எனவும் போர் வாட்டர் மட்டுமே விநியோகிக்கப்படுகிறது என்றனர்.
மேலும், நான்கு சக்கர வாகனங்கள் கூட முறையாக நிறுத்தி கொள்ள வசதிகள் இல்லை என தெரிவித்த குடியிருப்பு வாசிகள், தற்போது உள்ள சில டவர்களில் ஒரு லிப்ட் மட்டுமே இயக்கப்படுவதாகவும் பராமரிப்பு செலவு என சதுர அடிக்கு 2 ரூபாய் + ஜி.எஸ்.டி என செலுத்த கட்டாயப்படுத்துவதாகவும் கூறினர்.
இதனை ஏற்க மறுத்ததன் காரணமாக குப்பைகள் அள்ளுவதில்லை எனவும் இது குறித்து புகார் அளிப்பவர்களுக்கு அலைபேசி மூலம் மிரட்டல்கள் வருவதாகவும் தெரிவித்தனர். மேலும், நான்கரை கோடி ரூபாய்க்கு மேல் உள்ள கார்பஸ் பணத்தை வட்டியுடன் உடனடியாக திருப்பி தர வேண்டும் என்று கூறிய அவர்கள், அனைத்து வசதிகளை உடனடியாக செய்து தர வேண்டும் என வலியுறுத்தினர்.
அதேபோல, குடியிருப்பு வாசிகள் நல சங்கத்தை பல்வேறு காரணங்கள் கூறி அலுவலகத்தை பூட்டி வைத்து உள்ளதாகவும் முறையாக தேர்ந்தெடுக்கப்பட்ட நிர்வாகிகளை அழைத்து பேசி சுமூகமான நிரந்தர தீர்வு எடுக்கவேண்டும் என்றனர். இந்த நிலையில், ஒப்பந்தத்தின் போது அறிவிக்கப்பட்ட அனைத்தையும் செய்து தர வேண்டும் என்ற கோரிக்கைகளை முன் வைத்து அங்கு வந்த முதன்மை தலைமை அதிகாரி ஸ்ரீ தேவியுடன் வாக்குவாதத்தில் ஈடுபட்டதால் பரபரப்பு ஏற்பட்டது.
இதனையடுத்து அவர்களிடம் பேசிய முதன்மை தலைமை அதிகாரி ஸ்ரீ தேவி, நிர்வாக தரப்புடன் பேசி அனைத்தும் பிரச்சனைகளுக்கும் விரைவில் தீர்வு காணப்படும் என உறுதியளித்தார். அதேபோல, 10 நாட்களில் குடிநீர் கிடைக்க ஏற்பாடு செய்யப்படும் எனவும் பராமரிப்பு கட்டணம் 2 ரூபாய் மட்டுமே வசூலிக்கப்படும் என்றும் ஜி.எஸ்.டி வசூலிக்கப்பட மாட்டாது எனவும் உறுதியளித்தார். மேலும், ஒரு மாத காலத்தில் மின்சாரம் தடையின்றி கிடைக்கப் பெற நடவடிக்கைகள் எடுக்கப்படும் என தெரிவித்தார்.