பஸ் இல்லை ஆனாலும் வேலைக்கு போகனும்'! கோவையில் பயன்படுத்தப்பட்ட இருசக்கர வாகனங்கள் விற்பனை அமோகம்..!
கோவை: கோவை மாவட்டத்தில் ஊரடங்கு காலத்தில் புதிய மற்றும் பயன்படுத்தப்பட்ட பழைய இருசக்கர வாகனங்களின் விற்பனை அதிகரித்துள்ளதாக, விற்பனையாளர்கள் தெரிவித்துள்ளனர்.
தமிழகத்தில் கொரோனா வைரஸ் பரவல் காரணமாக கடந்த மார்ச் 24ம் தேதி முதல் ஊரடங்கு அமல்படுத்தப்பட்டுள்ளது. இதனால் ரயில், பஸ் உள்ளிட்ட பொது போக்குவரத்து சேவைகள் நிறுத்தப்பட்டன. அதன் பின் ஊரடங்கில் தளர்வுகள் அளிக்கப்பட்டு தொழில்நிறுவனங்கள், அலுவலகங்கள் உள்ளிட்டவைகள் செயல்பட துவங்கின. பொது போக்குவரத்து சேவை சில நாட்கள் அனுமதிக்கப்பட்ட நிலையில், மீண்டும் முற்றிலும் நிறுத்தப்பட்டன.
இதனால், அலுவலகம் செல்வோர், தொழில்நிறுவனங்களுக்கு வேலைக்கு செல்வோர், விவசாய பணிகளுக்கு செல்வோர், கூலி வேலைக்கு செல்வோர் என அனைத்து தரப்பினரும் கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளனர்.
குறிப்பாக, மாவட்டங்களிடையே மற்றும் மாவட்டங்களுக்குள் பேருந்து சேவை மட்டும் நம்பி இருந்த ஏராளமான மக்கள் செய்வதறியாது உள்ளனர்.
பொது போக்குவரத்து முடகத்தின் எதிரொலியாக, பயன்படுத்தப்பட்ட பழைய மற்றும் புதிய இருசக்கர வாகனங்களின் விற்பனை கோவையில் அதிகரித்துள்ளது.
இதுகுறித்து, கோவை ராம்நகர் பகுதியில் பயன்படுத்தப்பட்ட
இருசக்கர வாகனங்களை விற்பனை செய்து வரும் கடை உரிமையாளர், ஜோணஸ் கூறியதாவது: கொரோனா ஊரடங்கு காலத்தில் கடைகள் அடைக்கப்பட்டதால் தொழில் முற்றிலும் முடங்கியது. அதன் பின் ஊரடங்கில் அளிக்கப்பட்ட தளர்வுகள் காரணமாக, கடைகள் திறக்கப்பட்டன. ஆரம்ப கட்டத்தில், விற்பனை மந்தமாக இருந்தது. ஆனால், விற்பனை தற்போது சில நாட்களாக அதிகரித்துள்ளது.
குறிப்பாக, ரூ.30 ஆயிரம் பட்ஜெட்டில் உள்ள பயன்படுத்தப்பட்ட இருசக்கர வாகனங்கள் அதிக அளவில் விற்பனை ஆகின்றன. ஸ்கூட்டர் மாடல் இருசக்கர வாகனங்களை, மக்கள் அதிகமாக விரும்பி வாங்குகின்றனர்.
மேலும், சிலர் வாகனங்களை ஒட்டி பழக வாங்குகின்றனர். அரசு மற்றும் தனியார் பேருந்து இல்லாத சூழலில், அலுவலகம் செல்ல மக்கள் வேறு வழியில்லாமல், பயன்படுத்தப்பட்ட இரு சக்கர வாகனங்களை வாங்க விருப்பம் காட்டி வருகின்றனர்.
கோவை மாவட்டத்தில் 120க்கும் மேற்பட்ட பயன்படுத்தப்பட்ட பழைய இருசக்கர வாகனங்கள் விற்பனை செய்யும் கடைகள் உள்ளன. தற்போது ஒவ்வொரு கடையிலும் 1 முதல் 3 வாகனங்கள் வரை தினமும் விற்பனை ஆகின்றன.
வாகனங்களை வாங்க வரும் மக்களுக்கு எளிதில் 20 ஆயிரம் வரை கடன் கிடைக்கிறது, இதனால் அவர்கள் வாங்கி செல்வதில் சிரமம் இல்லை. இவ்வாறு அவர் கூறினார்.
புதிய இருசக்கர வாகனங்களை வாங்குவதிலும், மக்கள் அதிகம் ஆர்வம் காட்டி வருகின்றனர். இது குறித்து, இருசக்கர வாகனம் விற்பனை செய்யும் தனியார் நிறுவன ஊழியர் ஒருவர் கூறியதாவது:
கடந்த ஜுன் மாதம் முதல் இருசக்கர வாகன விற்பனை சூடு பிடித்துள்ளது. புதிய வாகனங்களுக்கு, வங்கி கடன் எளிதில் கிடைக்க ஏற்பாடு செய்யப்படுகிறது. பலர் தங்களது பழைய வாகனங்களை எக்ஸ்சேஞ்ச் முறையில் மாற்றிவிட்டு, புதிய வாகனங்களை வாங்கி செல்கின்றனர்.
ஊரடங்கினால், ஏற்பட்ட விற்பனை சரிவு, தற்போது மீண்டு வருகிறது. பெரும்பாலும் கல்லூரி மாணவ, மாணவிகள் ஆகஸ்ட் மாதம் இருசக்கர வாகனங்களை வாங்குவது அதிகமாக இருக்கும். கொரோனா காரணமாக கல்லூரிகள் திறக்கப்படவில்லை என்பதால், மாணவ, மாணவிகள் வாகனங்களை வாங்க வருவது நடுத்தர வயதில் உள்ள அலுவலகம் செல்வோர், அன்றாட வேலைக்கு செல்வோர் போன்றவர்கள் மூலம் விற்பனை அதிகரித்துள்ளது. கோவை மாவட்டத்தில் மட்டும் தினமும் 250க்கும் மேற்பட்ட இருசக்கர வாகனங்கள் விற்பனை ஆகின்றன, என அவர் தெரிவித்தார்.