கோவை ஒண்டிப்புதூர் பகுதியில் கடந்த ஞாயிற்றுகிழமை முழு ஊரடங்கின் போது, தேவை இல்லாமல் வெளியே வந்த 13 வயது சிறுவனை, சிங்காநல்லூர் காவல் நிலைய காவலர் துர்காராஜ் என்பவர் லத்தியால் தாக்கினார்.
கோவை: ஒண்டிப்புதூர் பகுதியில் கடந்த ஞாயிற்றுகிழமை முழு ஊரடங்கின் போது, தேவை இல்லாமல் வெளியே வந்த 13 வயது சிறுவனை, சிங்காநல்லூர் காவல் நிலைய காவலர் துர்காராஜ் என்பவர் லத்தியால் தாக்கினார்.
இதில், அந்த சிறுவன் காலில், இரத்தக்கட்டு ஏற்பட்டு காயம் ஏற்பட்டது. சிறுவனது தரப்பில் புகார் எதுவும் கொடுக்கப்படாததால் வழக்கு ஏதும், பதிவு செய்யப்படவில்லை.
இந்நிலையில், சிறுவன் தாக்கபட்டு காயம் அடைந்தது, தொடர்பாக புகைபடங்கள் மற்றும் வீடியோ காட்சிகள் வெளியானது. இதனையடுத்து, மாநகர காவல் ஆணையர் உத்தரவின் பேரில் காவலர் துர்காராஜ் காவல் கட்டுப்பாட்டு அறைக்கு மாற்றபட்டார்.
இந்நிலையில், நேற்று நாளிதழ்களில் வெளியான செய்தியை அடிப்படையாக கொண்டு, மாநில மனித உரிமை ஆணையம் இந்த விவகாரத்தை விசாரணைக்கு எடுத்துக்கொண்டது.
இது தொடர்பாக, கோவை மாநகர காவல் துறை ஆணையருக்கு மாநில மனித உரிமை ஆணையம் நோட்டீஸ் அனுப்பியுள்ளது.
சிறுவன் மீது தாக்குதல் நடத்திய விவகாரத்தில் எடுக்கப்பட்ட நடவடிக்கைகள் குறித்து மூன்று வார காலத்திற்குள் விளக்கம் அளிக்க வேண்டும், என மாநில மனித உரிமை ஆணையம் உத்திரவிட்டுள்ளது.
