கோவை: பறவைகள் மனித இனத்திற்காக மரங்களின் விதைகளை பரப்பும் அற்புதமான செயலை மேற்கொள்கின்றன.
கோவை: கோவை மாவட்டத்தில் பறவைகளுக்காக தன் நிலத்தில் ஒரு பகுதியை அளித்த இயற்கை விவசாயியை பற்றிய சிறப்பு தொகுப்பை காண்போம் வாருங்கள்.
பறவைகள் மனித இனத்திற்காக மரங்களின் விதைகளை பரப்பும் அற்புதமான செயலை மேற்கொள்கின்றன. இன்னும் சொல்லப்போனால் தங்களுக்கான உணவையும், உறைவிடத்தையும் தானாகவே அமைத்துக் கொண்டு இந்த வானில் சிறகடித்து பறந்து கொண்டிருக்கின்றன.

சின்ன சின்ன சிட்டுக்குருவிகள், மைனாக்கள், தவிட்டு குருவி, சில்லைகள், மாங்கொத்திகள், கிளிகள், மயில்கள், குயில் என பறவைகள் சூழ் உலகமாக இருக்கிறது அவருடைய தோட்டம்.
இதனிடையே, ஒரு மரத்தில் இரு புள்ளி சில்லைகள் தன் குஞ்சிற்கு உணவை அளித்து அன்பை பறிமாறி கொண்டு இருப்பது பார்ப்பதற்கே கொள்ளை அழகு.
காகத்திற்கே முன்னோர் என்று சொல்லித் தான் சாப்பாடு வைக்கிறார்கள். அதுவும் வடகம், உணவு பொருட்களை எடுத்தால் அவற்றை விரட்ட முதல் ஆளாக இருக்கிறோம். இந்த இடத்திலேயே நமக்கான பண்புகள் வெளிப்படுகிறது. இத்தகைய குணங்களிலிருந்து முற்றிலும் வேறுபட்டு இருக்கிறார் கோவை தொண்டாமுத்தூர் பகுதி அருகே உள்ள குளத்துப் பாளையத்தை சேர்ந்த இயற்கை விவசாயி முத்து முருகன்..!
தனக்கு சொந்தமான 2 1/2 ஏக்கர் நிலத்தில் இயற்கை விவசாயம், காட்டுமாடு வளர்ப்பு, சுற்றுச்சூழல் பாதுகாப்பு என இயற்கையோடு இணைந்த எளிமையான வாழ்வை வாழ்ந்து வருகிறார். இந்த பூமி அனைத்திற்குமானது அதில் பறவைகளுக்கும் இடமுண்டு.

அந்த வகையில் சிறுதானியங்களான கம்பு, சோளம் போன்ற பயிர்களை விளைவித்து அதில் கால்பகுதியை பறவைகளுக்கு விட்டு விடுகிறார். பறவைகள் சாப்பிட மிதமுள்ளவற்றை கால்நடைகளுக்கு ஒதுக்கி விடுகிறார்.

புள்ளினங்கள் மீதான அன்பை பற்றி அவரிடம் பேசிய போது, கடந்த 10 ஆண்டுகளாக வள்ளுவர் வழியில் இயற்கை விவசாயம் செய்து வருகிறேன். இதுவரை ரசாயன பொருட்களை பயன்படுத்தியதில்லை. தோட்டத்திலிருந்து கிடைக்கும் பொருட்களை வைத்து வியாபாரம் செய்து வருகிறேன். லாப நோக்கத்தில் இதுவரை விவசாயம் செய்தது இல்லை. பத்து வருடங்களுக்கு முன்னர் எல்லாம் சூழல் காரணிகள் சாப்பிட்ட பின்னரே மனிதர்களுக்கு கிடைக்கும். ஆனால் இன்றைய காலத்தில் அனைத்திலும் இரசாயனம். அதை உண்டு வாழும் பறவையினங்கள் அழிவை நோக்கி செல்கிறது.

எந்த ஒரு உயிரினமும் மனிதர்களால் இறக்கக் கூடாது என்பதற்காகவே தோட்டத்திற்கு உணவு தேடி வரும் பறவைகளுக்காக ஒரு பகுதியை உணவுக்காக விட்டு இருக்கிறேன் என்கிறார். மேலும் பேசிய அவர், நன்மை தரும் மண்ணிற்கு மனிதனை தவிர மற்ற ஏனைய உயிரினங்கள் அனைத்தும் உதவி புரிகிறது.
தொடர் காடுகள் அழிப்பால் பறவைகளின் இருப்பிடம் கேள்விக்குறியாக உள்ளது. அதனை காக்கும் சிறு உதவியாகவும், இந்த உலகிற்கு என்னால் முடிந்த சேவையை இந்த பறவைகளுக்கு செய்து வருகிறேன். பறவைகளுக்காக செய்யும் செலவு ஒரு போதும் நஷ்டமாவதில்லை. சின்ன சின்ன உயிரினங்கள் இந்த காட்டில் உலா வருவது மிகுந்த மகிழ்ச்சி அளிக்கிறது. ஏனெனில் இந்த பூமி மனிதர்களுக்கானது அல்லவே! என்று கூறுகிறார் இயற்கை விவசாயி முத்து முருகன்.
நாம் உண்ட பின் இருக்கும் உணவை மற்றவர்களுக்கு கொடுக்க வேண்டும். இது சமூக நீதி என்பர். ஆம், அது உண்மையே, பறவைகள் உண்ட பின் கிடைக்கும் உணவே நியாயமானது.