அனைத்து ஏழை மக்களுக்கும் சொந்தவீடு என்ற குறிக்கோளுடன் பிரதமர் மோடி 2015 இல் "பிரதம மந்திரி ஆவாஸ் யோஜனா" என்ற திட்டத்தை அறிவித்தார்.
கோவை: அனைத்து ஏழை மக்களுக்கும் சொந்தவீடு என்ற குறிக்கோளுடன் பிரதமர் மோடி 2015 இல் "பிரதம மந்திரி ஆவாஸ் யோஜனா" என்ற திட்டத்தை அறிவித்தார்.
ஏழை மக்களும் சொந்த வீடு கட்டிக் கொள்ள உதவியாக, இத்திட்டத்தில் நகர்ப்புறங்களுக்கு அதிகபட்சமாக 2.5 லட்சம் ரூபாய் மானியமாக வழங்கப்படுகிறது. பொள்ளாச்சி ஒன்றியங்களுக்கு உட்பட்ட கிராமங்களில் கணிசமாக, ஏழை மக்கள் இத்திட்டத்தில் பயனடைந்துள்ளனர்.
இந்த ஆண்டு திட்டத்தில் பயனடைய விண்ணப்பிக்க வேண்டிய காலக்கெடு முடிவடைந்த நிலையில், மக்களின் நலனுக்காக காலக்கெடுவை வரும் 2021 மார்ச் 31-ஆம் தேதி வரை காலக்கெடு நீட்டிக்கப்பட்டுள்ளது என ஒன்றிய அதிகாரிகள் தெரிவித்தனர்.
பயனாளிகள் விண்ணப்பத்தில் இருந்து 114 நாட்களுக்குள் தகுதியுள்ள விண்ணப்பதாரர்களுக்கு மானியம் வழங்கப்படும், எனவும் உறுதி அளிக்கப்பட்டுள்ளது. இத்திட்டத்தில் பயனடைய, விரும்புவோர் தற்போதுள்ள கொரோனா சூழலில் அரசு அலுவலகங்களுக்கு அலைய வேண்டியது இல்லை.
விண்ணப்பதாரர்கள், வீட்டிலிருந்தபடியே ஆன்லைனில் விண்ணப்பிக்கலாம். பான்கார்டு, ஆதார் எண், ஓட்டுநர் உரிமம், உள்ளிட்ட அரசால் வழங்கப்பட்ட
ஆவணங்கள், புகைப்பட அடையாள அட்டை மாத வருமான சான்று, வங்கி ஸ்டேட்மென்ட், வருமான வரி தாக்கல் ஆகிய ஆவணங்களுடன் https://pmaymis.gov.in/ என்ற இணையதளத்தில் கொடுக்கப்பட்டுள்ள விதிமுறைகளின்படி ஆவணங்களை பதிவேற்றம் செய்து விண்ணப்பிக்கலாம், என அதிகாரிகள் தெரிவித்தனர்.