கோவை: பொள்ளாச்சியில் மின் இணைப்பு பெயர் மாற்றம் செய்வதற்கு விவசாயியிடம் ரூபாய் 2000 லஞ்சம் பெற்ற மின்வாரிய ஊழியரை லஞ்ச ஒழிப்புத்துறை போலீசார் இன்று கைது செய்தனர்.
கோவை: பொள்ளாச்சியில் மின் இணைப்பு பெயர் மாற்றம் செய்வதற்கு விவசாயியிடம் ரூபாய் 2000 லஞ்சம் பெற்ற மின்வாரிய ஊழியரை லஞ்ச ஒழிப்புத்துறை போலீசார் இன்று கைது செய்தனர்.
பொள்ளாச்சி அருகே உள்ள கொங்கல் நகரம் பகுதியை சேர்ந்தவர், விவசாயி அமர்நாத். இவர், அண்மையில் குடிமங்கலம் அருகே பண்ணை கிணறு என்ற பகுதியில் 4 ஏக்கர் விவசாய நிலத்தை, ஜெயவேல் என்பவரிடமிருந்து வாங்கியுள்ளார்.

அந்த நிலத்திற்கு மின் இணைப்பு பெயர் மாற்றம் செய்வதற்காக, பொள்ளாச்சி உடுமலை ரோட்டில் உள்ள மின்வாரிய அலுவலகத்தை நாடியுள்ளார். அப்போது, அங்கு பணியாற்றிவரும் மின்வாரிய கணக்கு மேற்பார்வையாளர், அகஸ்டின் கிறிஸ்டோபர் என்பவர், மின் இணைப்பில் பெயர் மாற்றம் செய்வதற்கு 2000 ரூபாய் லஞ்சம் கேட்டுள்ளார். இதை தொடர்ந்து, அமர்நாடத்திடமிருந்து 500 ரூபாய் கட்டாயப்படுத்தி லஞ்சமாக பெற்றுள்ளார்.
மேலும், மீதமுள்ள தொகையை கொடுத்தால் மட்டுமே பெயர் மாற்றம் செய்து தரப்படும், என்று மின்வாரிய கணக்கு மேற்பார்வையாளர், அகஸ்டின் தெரிவித்துள்ளார்.
இதனால் வேதனையடைந்த, விவசாயி அமர்நாத் இது குறித்து லஞ்ச ஒழிப்புத்துறையிடம் புகார் அளிக்க முடிவு செய்தார். தொடர்ந்து, கோவை லஞ்ச ஒழிப்பு போலீசாரிடம் புகார் தெரிவித்தார்.
இதையடுத்து, இன்று ரசாயன பொடி தடவிய ரூபாய் நோட்டுகளை அகஸ்டின் கிறிஸ்டோபர் லஞ்சமாக விவசாயிகளிடமிருந்து பெரும்பொழுது, அங்கு மறைந்திருந்த லஞ்ச ஒழிப்புத்துறை ஆய்வாளர் சசிலேகா தலைமையிலான போலீசார் மின்வாரிய ஊழியரை கையும் களவுமாக பிடித்தனர்.
பின்னர், அவர் மீது வழக்குப்பதிவு செய்து கோவை மாவட்ட லஞ்ச ஒழிப்புத்துறை போலீசார், அகஸ்டின் கிறிஸ்டோபரை கோவையில் உள்ள சிறப்பு நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தி சிறையில் அடைக்க நடவடிக்கை மேற்கொண்டு வருகின்றனர்.