கோவை: கோவை மாவட்டத்தில் மட்டும் விநாயகர் சிலைகள் செய்யும் தொழிலை நம்பி நேரடியாகவும், மறைமுகமாகவும் 2 ஆயிரத்திற்கும் மேற்பட்ட தொழிலாளர்கள் உள்ளனர்.
கோவை: கோவை மாவட்டத்தில் மட்டும் விநாயகர் சிலைகள் செய்யும் தொழிலை நம்பி நேரடியாகவும், மறைமுகமாகவும் 2 ஆயிரத்திற்கும் மேற்பட்ட தொழிலாளர்கள் உள்ளனர்.

கொரோனா ஊரடங்கு காரணமாக விநாயகர் சதுர்த்தி தினத்தில் பொது இடங்களில் விநாயகர் சிலைகள் வைக்க அனுமதியில்லை, என தமிழக அரசு அறிவித்துள்ளது. இதனால், ஐந்து அடிக்கும் மேல் உள்ள விநாயகர் சிலைகள் விற்பனை நடக்காது, என்பதால் விநாயகர் சிலை செய்யும் தொழிலாளர்கள் வாழ்வாதாரத்தை இழந்து தவித்து வருகின்றனர்.
இந்தாண்டு விநாயகர் சதுர்த்தி விழா வரும் 22ம் தேதி கொண்டாடப்பட உள்ளது. கோவை மாவட்டத்தில் விநாயகர் சதுர்த்தி ஒரு வாரத்திற்கு முன்பாகவே இந்து அமைப்புகள், பொதுமக்கள் என பலரும் பொது இடங்களில் 5 அடி முதல் 25 அடி வரையிலான, விநாயகர் சிலைகளை வைத்து வழிபடுவது வழக்கம்.

இதற்காக, பாகுபலி, லிட்டில் கிருஷ்ணா, ஸ்பைடர்மேன் என விதவிதமாக விநாயகர் சிலை செய்யக் கோரி மார்ச் மாதம் முதலே மண்பாண்ட தொழிலாளர்களுக்கு ஆர்டர்கள் கொடுப்பது வழக்கம்.
இந்தாண்டு விற்பனை இல்லை என்றால் அடுத்த ஆண்டு சிலைகளை செய்யக்கூட பணம் இருக்காது. தமிழக அரசு நல்ல முடிவை எடுக்க வேண்டும் - கோவையில் மண்பாண்ட கலைஞர்கள் வேதனை.

கோவை மாவட்டத்தில் மட்டும் விநாயகர் சிலைகள் செய்யும் தொழிலை நம்பி நேரடியாகவும், மறைமுகமாகவும் 2 ஆயிரத்திற்கும் மேற்பட்ட தொழிலாளர்கள் உள்ளனர். கடந்த ஆண்டு மட்டும் 1 லட்சம் சிறிய ரக 2 அடி முதல் 4 அடி வரையிலான விநாயகர் சிலைகளும், 25 ஆயிரத்திற்கும் மேற்பட்ட பெரிய ரக 5 அடி முதல் 25 அடி வரையிலான விநாயகர் சிலைகள் விற்பனை ஆகியுள்ளன, என்று அத்தொழில் செய்து வரும் தொழிலாளர்கள் தெரிவித்தனர்.
இதனால், அவர்களது வாழ்வாதாரம் முற்றிலும் பாதிக்கப்படும் என்ற அச்சத்தில் உள்ளனர்.
இது குறித்து கோவையில் விநாயகர் சிலைகள் செய்து வரும் கைவினைக் கலைஞர் சரவணக்குமார் கூறுகையில்:
கோவையில் விநாயகர் சிலைகள் ரூ.25 முதல் ரூ.25 ஆயிரம் வரை வியாபாரம் நடக்கும். கடந்த ஆண்டு மட்டும் எங்கள் நிறுவனம் மூலம் செய்யப்பட்ட விநாயகர் சிலைகள் மற்றும் தெரிந்த நிறுவனங்களில் செய்யப்பட்ட விநாயகர் சிலைகள் சுமார் ரூ.50 லட்சம் வரை விற்பனை செய்யப்பட்டது. குறிப்பாக, 1 லட்சம் சிறிய ரக விநாயகர் சிலைகள் விற்பனை ஆனது. இந்தாண்டு பெரிய விநாயகர் சிலைகள் விற்பனை இல்லை.

ஆனால், வீடுகளில் விநாயகர் சிலைகள் வைக்க அனுமதி உள்ளது. ஆனால் பொதுமக்கள் அதனை செய்யும் இடங்களில் வந்து வாங்குவது சிரமம். எனவே, சாலையோரம் அல்லது வேறு இடங்களில் விநாயகர் சிலைகள் விற்பனை செய்ய மாவட்ட நிர்வாகம் அனுமதிக்க வேண்டும்.
கடன்கள் தள்ளுபடி செய்ய வேண்டும். குறைந்தபட்சம் வட்டியையாவது தள்ளுபடி செய்ய வேண்டும்.
சிலைகள் செய்ய நாங்கள் வங்கிகளில் கடன் வாங்கியுள்ளோம். தற்போது, நாடு முழுவதும் அசாதாரணமான சூழல் நிலவி வருவதால், இந்தாண்டு சிலை விற்பனை பெரிதும் பாதிக்கப்படும். எனவே, எங்கள் போன்ற கலைஞர்களின் வாழ்வாதாரத்தை கருத்தில் கொண்டு கடன்கள் தள்ளுபடி செய்ய வேண்டும். குறைந்தபட்சம் வட்டியையாவது தள்ளுபடி செய்ய வேண்டும்.
தமிழக அரசு பொது இடங்களில் விநாயகர் சிலைகளை வைக்க அனுமதி அளித்தால், கடந்த ஆண்டு செய்து வைக்கப்பட்டுள்ள பெரிய ரக விநாயகர் சிலைகள் வியாபாரம் நடக்கும். சுமார் 300க்கும் மேற்பட்ட தொழிலாளர்கள் வேலை மற்றும் வாழ்வாதாரத்தை இழந்து நிற்கின்றனர், என்றார்.
இது குறித்து மற்றுமொரு கைவினைக் கலைஞர் சக்திவேல் கூறுகையில்:
நாங்கள் வாழ்வா சாவா போராட்டத்தில் உள்ளோம். இந்தாண்டு பொது இடங்களில் விநாயகர் சிலைகளை வைக்க அனுமதிக்கவில்லை என்றால் இரண்டு ஆண்டுகள் வருமானம் எங்களுக்கு பாதிக்கும். ஒவ்வொரு ஆண்டும் ஜனவரி முதல் டிசம்பர் வரை சிலைகளை செய்வோம்.
அதில் விற்பனை ஆகும் பணத்தை கொண்டு அடுத்தாண்டு சிலைகளை செய்யும் பணிகளை மேற்கொள்வோம். இந்தாண்டு விற்பனை இல்லை என்றால் அடுத்த ஆண்டு சிலைகளை செய்யக்கூட பணம் இருக்காது.
மேலும், செய்த சிலைகளை மழை காலங்களில் பாதுகாப்பது என்பது அவ்வுளவு எளிதல்ல. தமிழக அரசாங்கம் இதுகுறித்து நல்ல முடிவு ஒன்று எடுத்து எங்களை காப்பாற்ற வேண்டும், என்றார்.