கோவை: கோவை டி-1 இராமநாதபுரம் காவல் எல்லையில் கொரோனா வைரஸ் அரக்கன் உருவத்தில் தனி மனித இடைவெளி, முக கவசம் அணிவது, கைகளை தூய்மையாக கழுவுவது குறித்த விழிப்புணர்வு வீதி நாடகம் நடைபெற்றது.
கோவை: கோவை டி-1 இராமநாதபுரம் காவல் எல்லையில் கொரோனா வைரஸ் அரக்கன் உருவத்தில் தனி மனித இடைவெளி, முக கவசம் அணிவது, கைகளை தூய்மையாக கழுவுவது குறித்த விழிப்புணர்வு வீதி நாடகம் நடைபெற்றது.
உலகையே அச்சுறுத்தி வரும் கொரோனா வைரஸ் தொற்றின் தாக்கம் நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது. இந்த நிலையில், இந்த தொற்றை கட்டுப்படுத்தும் நோக்கில் மத்திய மாநில அரசுகள் பல்வேறு முயற்சிகளில் ஈடுபட்டு வருகின்றனர். குறிப்பாக தமிழக அரசு உத்தரவின் பேரில் தடை உத்தரவை மீறுபவர்கள் மீது பல்வேறு நடவடிக்கைகள் எடுக்கப்பட்டு வருகிறது.
இந்த நிலையில், கோவை மாநகர காவல் எல்லையில் ஊரடங்கு உத்தரவை மதிக்காமல் அனாவசியமாக சுற்றும் நபர்கள் மீது வழக்குப் பதிவு செய்யப்பட்டு வருவதுடன் அவர்களுக்கு பல்வேறு முறைகளில் விழிப்புணர்வும் செய்யப்பட்டு வருகிறது.

இதனிடையே, நேற்று மாலை கோவை டி-1 ராமநாதபுரம் காவல் எல்லைக்குட்பட்ட புலியகுளம் விநாயகர் கோயில் அருகே கொரோனா வைரஸ் தொற்றின் கொடூரம் குறித்து வீதி நாடகம் நடைபெற்றது. மேலும், பொது மக்கள் அலட்சியமாக சாலைகளில் பயணிப்பதால் அவர்கள் குடும்பத்திற்கும், சமூகத்திற்கும் ஏற்படுத்தும் தீங்கு குறித்தும் கொரோனா உருவத்தில் கோமாளி வேடத்தில் விழிப்புணர்வு செய்யப்பட்டது.

சுமார் நூற்றுக்கும் மேற்பட்ட பொதுமக்கள் தனிமனித இடைவெளியை பின்பற்றி இந்த வீதி நாடகத்தை கண்டனர். இதைத் தொடர்ந்து இந்த வீதி நாடகத்தின் முடிவில் ஊரடங்கு உத்தரவை மதிக்காமல் இருசக்கர வாகனத்தில் வந்த பொதுமக்களுக்கு விநாயகர் மற்றும் அம்மன் உருவத்தில் வந்த சிறுவர்கள் அவர்களுக்கு இலவச முக கவசம் வழங்கி அறிவுரை வழங்கினர்.

இந்த நிகழ்வில் உதவி ஆணையர் செட்ரிக் மனுவேல், காவல் ஆய்வாளர் முருகேசன், போக்குவரத்து உதவி ஆய்வாளர் ராக்கி மகேஷ், ஆத்மா அறக்கட்டளை சரவணன், முன்னாள் மாமன்ற உறுப்பினர் கணேசன் உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர்.