கோவை: கோவை பீளமேடு அருகே பிரசவ வலியுடன் சாலையில் சென்று கொண்டிருந்த ஒரிசா மாநிலத்தைச் சேர்ந்த இளம்பெண்ணுக்கு திடீரென வலி அதிகமாகியதையடுத்து சாலையில் சென்று கொண்டிருந்தவர்கள் உதவியுடன் பிரசவம் பார்க்கப்பட்டு தாயும் சேயும் நலமாக மீட்கப்பட்டனர்.
கோவை: கோவை பீளமேடு அருகே பிரசவ வலியுடன் சாலையில் சென்று கொண்டிருந்த ஒரிசா மாநிலத்தைச் சேர்ந்த இளம்பெண்ணுக்கு திடீரென வலி அதிகமாகியதையடுத்து சாலையில் சென்று கொண்டிருந்தவர்கள் உதவியுடன் பிரசவம் பார்க்கப்பட்டு தாயும் சேயும் நலமாக மீட்கப்பட்டனர்.
கோவை சிங்காநல்லூர் காவல் எல்லை மற்றும் பீளமேடு காவல் எல்லைக்குட்பட்ட பகுதிகளில் ஆயிரக்கணக்கான வட மாநிலத்தைச் சேர்ந்த தொழிலாளர்கள் குடும்பத்துடன் வசித்து வருகின்றனர். இதில் சிங்காநல்லூர் காமராஜர் சாலை அருகே உள்ள ரயில்வே கேட் அருகாமையில் ஒடிசா மாநிலத்தைச் சேர்ந்த தொழிலாளர்கள் கூடாரம் அமைத்து தங்களின் வாழ்க்கையை நடத்தி வருகின்றனர்.
இந்த நிலையில், இந்த குழுவிலுள்ள 26 வயது மதிப்புள்ள இளம்பெண்ணுக்கு நேற்று பிரசவ வலி ஏற்பட்டுள்ளது. இதைத்தொடர்ந்து அந்தப் பெண் மருத்துவமனை செல்வதற்காக முயன்றபோது வலியால் துடித்துள்ளார். பின்னர் அதே பகுதியில் உள்ள இந்திய கம்யூனிஸ்ட் கட்சி அலுவலகம் முன்பு பெண்ணை பாதுகாப்பாக உட்கார வைத்து 108 ஆம்புலன்சுக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது.
இதைத்தொடர்ந்து ஆம்புலன்ஸ் வருவதற்குள் தகவலறிந்து வந்த எழுத்தாளர் ஆட்டோ சந்திரன் பிரசவ வலியால் துடித்த பெண்ணை மீட்பதற்குள் பிரசவம் ஆகும் நிலை தொடங்கியது. இதையடுத்து 108 ஆம்புலன்ஸும் பின்னர் வந்தது.
இதைத்தொடர்ந்து பொதுமக்கள் மற்றும் 108 ஆம்புலன்ஸ் ஊழியர்கள் உதவியுடன் அந்த இளம்பெண்ணுக்கு ஆண் குழந்தை பிறந்தது. பின்னர் ஆம்புலன்ஸ் ஊழியர்கள் தாயையும் சேயையும் பாதுகாப்பாக கோவை அரசு மருத்துவமனையில் அனுமதித்தனர். தற்போது இருவரும் நலமாக இருப்பதாக மருத்துவமனை வட்டாரத்தில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
சாலையின் ஓரத்தில் இளம்பெண் ஒருவருக்கு பிரசவம் பார்க்கப்பட்ட வீடியோ காட்சிகள் தற்போது சமூக வலைதளங்களில் வேகமாக பரவி வருகிறது.