கோவை: கோவையில் 4 இடங்களில் கிருமி நாசினி சுரங்கத்தை உள்ளாட்சித்துறை அமைச்சர் எஸ்.பி.வேலுமணி துவக்கி வைத்தார்.
கோவை: கோவையில் 4 இடங்களில் கிருமி நாசினி சுரங்கத்தை உள்ளாட்சித்துறை அமைச்சர் எஸ்.பி.வேலுமணி துவக்கி வைத்தார்.
உலகையே அச்சுறுத்தி வரும் கொரோனா தொற்றுநோயை கட்டுப்படுத்தவும், அது 3ம் கட்டத்திற்குள் நுழைவதைத் தடுக்கவும் கோவை மாநகராட்சி பல முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை எடுத்து வருகிறது. குறிப்பாக, கோவை மாவட்ட நிர்வாகத்தால் ட்ரோன்கள், தீயணைப்பு வாகனங்கள் மற்றும் பவர்ஜெட்டுகளைப் பயன்படுத்தி வீதிகள் மற்றும் கட்டிடங்களில் கிருமிநாசினி தெளிக்கும் பணி நடைபெற்று வருகிறது.

இந்த நிலையில், கொரோனா வைரஸ் தடுப்பு நடவடிக்கையாக கோவை குறிச்சி உழவர் சந்தை, உக்கடம் பேருந்து நிலையம், ஆர்.எஸ்.புரம் உழவர் சந்தை, காந்திபுரம் பேருந்து நிலையம் உள்ளிட்ட பகுதிகளில் ரூபாய் 4.80 லட்சம் ரூபாய் மதிப்பிலான கிருமி நாசினி சுரங்கத்தை அமைச்சர் எஸ்.பி.வேலுமணி துவக்கி வைத்தார். இந்த கிருமிநாசினி சுரங்கப்பாதை திருப்பூர் சந்தையில் திருப்பூரின் தொழில்முனைவோரால் திருப்பூர் மாவட்ட ஆட்சியர் உதவியுடன் முதன்முதலில் அமைக்கப்பட்டது.
மேலும், 12 இடங்களில் இந்த கிருமி நாசினி சுரங்கம் அமைக்கப்பட உள்ளது. பன்னிரண்டு சுரங்கங்களில் இதுவரை 6 சுரங்கம் தனியார் நிறுவனங்களால் நிதியுதவி செய்யப்பட்டுள்ளன, இதில் இன்று நான்கு சுரங்கம் திறக்கப்பட்டுள்ளன. கோவை ராஜவீதி சுமங்கலி ஜுவல்லர்ஸ் 5 சுரங்கம் (இஎஸ்ஐ பிரதான கட்டிடம், உக்கடம் சந்தை, காந்திபுரம் பஸ் ஸ்டாண்ட், வடவள்ளி சந்தை மற்றும் சுந்தராபுரம் சந்தை) அமைக்க நிதியுதவி செய்துள்ளது, மேலும், காசாகிராண்ட் 1 சுரங்கப்பாதை அமைக்க (ஆர்.எஸ்.புரம் உழவர் சந்தை) நிதியளித்துள்ளது

இதனை தொடர்ந்து, காந்திபார்க் பகுதியில் கிருமி நாசினி தெளிக்கும் வாகனத்தை துவக்கி வைத்தார். ஐந்து மண்டலங்களுக்கு 10 வாகனங்கள் வழங்கப்பட்டது. இதனை தொடர்ந்து அதிகாரிகளுடனான ஆலோசனை கூட்டத்தில் கோவையில் கொரோனா தொற்று தடுப்பு நடவடிக்கைகள் குறித்த ஆலோசனை கூட்டத்தில் அமைச்சர் பங்கேற்க உள்ளார்.