வால்பாறை அரசு மேல்நிலை பள்ளியில் சந்தையானது! சமூக இடைவெளியை கடைபிடிக்க நகராட்சி ஆணையாளர் தலைமையில் ஆய்வு
கோவை: கோவை மாவட்டம் வால்பாறையில் கொரோனா வைரஸ் தடுப்பு நடவடிக்கையின் ஒரு பகுதியாக தேயிலை தோட்டப்பகுதிகளில் இருந்து ஆயிரக்கணக்கான தொழிலாளர்கள் இன்று அத்தியாவசிய பொருட்கள் வாங்க வால்பாறை சந்தைக்கு வருவார்கள் என எதிர்பார்க்கப்பட்ட நிலையில்,
கூட்ட நெரிசலை தவிர்க்கும் பொருட்டு வால்பாறை நகராட்சி ஆணையாளர் டாக்டர் பவன்ராஜ் உத்திரவின் பேரில் வால்பாறை அரசு மேல் நிலை பள்ளி வளாகத்தில் காய்கறி, இறைச்சி. கோழி மற்றும் மீன் சந்தை அமைக்கப்பட்டது.
மக்கள் வரிசையாக ஒரு மீட்டர் இடைவெளியில் நின்று பொருட்களை வாங்கிச் செல்லும்படி தடுப்புகள் அமைக்கப்பட்டன. மேலும், கை கழுவும் வசதியுடன் கழிப்பறை வசதிகளும் ஏற்படுத்தப்பட்டன.
இந்நிலையில், இன்று வால்பாறை சட்டமன்ற உறுப்பினர் கஸ்தூரி வாசு ஞாயிறு சந்தையை துவக்கி வைத்தார்.
தொடர்ந்து, சிறுகுன்றா தேயிலை தோட்டத்தில் 500 குடும்பங்களுக்கு இலவசமாக 10 காய்கறிகள் அடங்கிய பைகளை வழங்கினார். மேலும் சோலையார் எஸ்டேட்டில் உள்ள மக்களுக்கு இலவசமாக காய்கறி பைகள் வழங்கப்பட்டது. வால்பாறை பகுதியிலுள்ள அனைத்து ரேசன் கார்டுகளுக்கும் இலவச காய்கறி பைகள் வழங்க நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டுள்ளது என்று சட்டமன்ற உறுப்பினர் கஸ்தூரி வாசு தெரிவித்தார்.
இந்நிகழ்ச்சியில் சட்டமன்ற உறுப்பினர் கஸ்தூரி வாசு. நகராட்சி ஆணையாளர் டாக்டர் பவன்ராஜ். நகராட்சி பொறியாளர் சரவணபாபு, கூட்டுறவு வங்கி தலைவர் வால்பாறை அமீது, பொன் கனேஷ். சலாவுதீன். நரசப்பன் உட்பட கட்சி நிர்வாகிகள் கலந்து கொண்டனர்.