கோவை: கொரோனா பாதிப்பில் தமிழகம் தப்பித்துக்கொள்ள பொதுமக்கள் விழிப்புணர்வாக தனிமனித இடைவெளியை பின்பற்ற வேண்டும் என்ற நோக்கத்தில் கோவை போலீசார் பாடிய பாடல் பொதுமக்கள் மத்தியிலும் சமூக வலை தளங்களிலும் வரவேற்பை பெற்றுள்ளது.
கோவை: கொரோனா பாதிப்பில் தமிழகம் தப்பித்துக்கொள்ள பொதுமக்கள் விழிப்புணர்வாக தனிமனித இடைவெளியை பின்பற்ற வேண்டும் என்ற நோக்கத்தில் கோவை போலீசார் பாடிய பாடல் பொதுமக்கள் மத்தியிலும் சமூக வலை தளங்களிலும் வரவேற்பை பெற்றுள்ளது.
உலகத்தையே அச்சுறுத்திவரும் கொரோனா வைரஸின் தாக்கம் நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது. இதனால் நோய் பரவலை கட்டுப்படுத்த 21 நாட்கள் ஊரடங்கு உத்தரவு பிறப்பிக்கப்பட்டு தனிமனித இடைவெளி பின்பற்றப்பட்டு வருகிறது.
இருப்பினும் ஒரு சில பகுதிகளில் பொதுமக்கள் விழிப்புணர்வின்றி தனிமனித இடைவெளியை பின்பற்றாமல் அலட்சியம் காட்டி வருகின்றனர். இதனால் காவல்துறையினர் தொடர்ந்து பல்வேறு விழிப்புணர்வுகளையும் அதே சமயத்தில் நூதன முறையில் தண்டனைகளையும் வழங்கி வருகின்றனர்.
இந்த நிலையில், இன்று கோவையில் இரண்டாம் நிலை காவலர் ஒருவர் தனிமனித இடைவெளியை பின்பற்ற வேண்டும் என்ற நோக்கில் பாடல் பாடி சமூகவலைத்தளத்தில் வெளியிட்டுள்ளார்.
நீலகிரி மாவட்டத்தைச் சேர்ந்தவர் புஷ்பராஜ் (35). இரண்டாம் நிலை காவலரான இவர் கோவை மாவட்டத்தில் உள்ள கோவைப்புதூர் 4ம் பட்டாலியனில் பணிபுரிந்து வருகிறார். 2016ம் ஆண்டு பணியில் சேர்ந்த புஷ்பராஜ் பாடல்கள் பாடுவதில் அதிக ஆர்வம் கொண்டவர்.
இந்த நிலையில், இவர் பணியின் போது பொதுமக்கள் போதுமான தனிமனித இடைவெளியை பின்பற்றாமல் நடப்பதை கண்டு பொதுமக்களுக்கு விழிப்புணர்வு ஏற்படுத்தும் வகையில் பாடலை பாடியுள்ளார். இது பொதுமக்கள் மத்தியிலும் காவல்துறையினர் மத்தியிலும் வரவேற்பைப் பெற்றுள்ளது.
இதுகுறித்து அவர் கூறும்போது;-
கொரோனா வைரஸ் வேகமாக பரவி வரும் நிலையில் பொதுமக்கள் பாதுகாப்பாக இருந்து கொள்ள வேண்டும். ஒவ்வொருவரின் உயிரும் முக்கியம் என்ற நோக்கில் இந்த விழிப்புணர்வு பாடலை பாடியுள்ளேன். மேலும், இந்த பாடலை நான் பொழுதுபோக்கிற்காக பாடவில்லை. தமிழ்நாடு காவல்துறையின் பணிகளை கொண்டு பொது மக்கள் விழிப்படைய வேண்டும் என்ற நோக்கில் பாடியுள்ளேன். ஆகவே, அரசின் விதிகளுக்குட்பட்டு பொதுமக்கள் பாதுகாப்பாக நடந்து கொண்டால் இந்த வைரஸ் நோயில் இருந்து தப்பித்துக் கொள்ளலாம் என தெரிவித்தார்.