கோவை: தமிழ்நாடு மாற்றுத்திறனாளிகள் நல ஆணையம் சார்பில் மாற்றுத்திறனாளிகளின் நலனுக்காக கோவையில் மருத்துவக் குழு அமைக்கப்பட்டு வீடியோ கால் முறையில் பிசியோதெரபி ஆலோசனைகள் வழங்க ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளது.
கோவை: தமிழ்நாடு மாற்றுத்திறனாளிகள் நல ஆணையம் சார்பில் மாற்றுத்திறனாளிகளின் நலனுக்காக கோவையில் மருத்துவக் குழு அமைக்கப்பட்டு வீடியோ கால் முறையில் பிசியோதெரபி ஆலோசனைகள் வழங்க ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளது.
இன்றைய நவீன மருத்துவத்தில் தவிர்க்க முடியாத காரணியாக இயன்முறை மருத்துவம் எனப்படும் பிசியோதெரபி உள்ளது. மாதக் கணக்கில் பக்கவிளைவுள்ள வலி நிவாரணி மாத்திரைகள் சாப்பிட்டு குணமாக்குவதைவிட பிஸியோதெரபி மருத்துவம் எந்த பக்க விளைவுகளும் இன்றி விரைவிலேயே குணமாக்கும் தன்மையுள்ளது.
இந்த மருத்துவத்தின் தேவையானது மாற்றுத்திறனாளிகளுக்கும், சிறப்பு குழந்தைகளுக்கும், விபத்தில் முறிவு ஏற்பட்டவர்களுக்கும், கைகால் செயல் இழந்தவர்களுக்கும் என அத்தியாவசியமாக உள்ளது. இந்நிலையில், தற்போது கொரோனாவால் 144 தடை உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ள நிலையில் தொடர் சிகிச்சை அளிப்பதில் சிக்கல் ஏற்பட்டுள்ளது.
மேலும், தொடர் சிகிச்சை அளிப்பதில் நீண்ட இடைவெளி ஏற்பட்டால் பலவீனம் அடையவும் வாய்ப்பு உள்ளது. அது மட்டுமல்லாமல் அவர்கள் ஏற்கனவே எடுத்து வந்து பிசியோதெரபி சிகிச்சையினால் ஏற்பட்ட முன்னேற்றத்திலும் தடை ஏற்பட்டு ஊனத்தின் பாதிப்பு அதிகரிக்கக்கூடும் எனவும் மருத்துவ வட்டாரத்தில் கூறப்படுகிறது. ஆகவே இந்த இடர்பாடுகளை தவிர்ப்பதற்காக தமிழ்நாடு மாற்றுத்திறனாளிகள் நல வாரியமும் தமிழ்நாடு பிசியோதெரபி கவுன்சிலும் இணைந்து மாவட்ட வாரியாக சிகிச்சைகள் மேற்கொள்ள பிசியேதெரபி மருத்துவ குழுவினர் நியமிக்கப்பட்டுள்ளனர்.
இந்த குழுவினர் அலைபேசி மூலமாக ஆலோசனைகளை வழங்குவார்கள். அதேபோல வாட்ஸ்அப் வீடியோ கால் மூலம் சிகிச்சைக்கு உதவுவார்கள். தேவைப்படும் பட்சத்தில் நேரடியாக பாதிக்கப்பட்டவரை சந்தித்து அவர்களுக்கு இலவச சிகிச்சை அளிப்பார்கள். மேலும், இந்த சிகிச்சை அளிப்பதற்காக மாவட்ட வாரியாக குழுக்கள் அமைக்கப்பட்டுள்ளது. குறிப்பாக கோவை மாவட்டத்தை பொறுத்தவரை ஒரு குழுவிற்கு 10 பேர் என 3 குழு அமைக்கப்பட்டுள்ளது.
இதுகுறித்து மருத்துவக் குழுவின் ஒருங்கிணைப்பாளர்களில் ஒருவரான மருத்துவர்.ராஜேஸ் கண்ணா கூறும்போது;-
எங்கள் மருத்துவ குழுவினர் கோவை மாவட்டத்தைப் பொறுத்தவரை சிறப்பாக பணியாற்ற தயாராக உள்ளனர். நாங்கள் வாட்ஸ்அப், ஸ்கைப் உள்ளிட்ட செயலிகளை பயன்படுத்தி சிகிச்சைக்கான உதவிகளை செய்யத் துவங்கியுள்ளோம். மேலும் பொதுமக்கள் எங்களை தொலைபேசி வாயிலாக தொடர்பு கொண்டு தங்களின் மருத்துவ உதவிகளை பெற்றுக் கொள்ளலாம். எனவே கோவை மக்கள் கீழ்க்கண்ட மருத்துவர்களின் எண்களை தொடர்பு கொண்டு தங்களின் மருத்துவ தேவைகளை பூர்த்தி செய்யலாம் என தெரிவித்தார்
மருத்துவர்களின் தொடர்பு எண்கள்;-
1- பிராங்க்லின்: 9843671222
2- ராஜா செல்வகுமார்: 9043796777
3- ராஜேஸ் கண்ணா: 7200300032