திருப்பூர்: திருப்பூரில் 1156 பேர் வீட்டு கண்காணிப்பில் வைக்கப்பட்டுள்ளதாக திருப்பூர் உழவர் சந்தைகளில் ஆய்வு மேற்கொண்ட மாவட்ட ஆட்சியர் விஜய கார்த்திகேயன் தெரிவித்தார்
திருப்பூர்: திருப்பூரில் 1156 பேர் வீட்டு கண்காணிப்பில் வைக்கப்பட்டுள்ளதாக திருப்பூர் உழவர் சந்தைகளில் ஆய்வு மேற்கொண்ட மாவட்ட ஆட்சியர் விஜய கார்த்திகேயன் தெரிவித்தார்.

திருப்பூர் மாவட்ட ஆட்சியர் விஜய கார்த்திகேயன் இன்று திருப்பூர் தென்னம்பாளையம் உழவர் சந்தை, அம்மா உணவகம் மற்றும் மீன் மார்க்கெட் ஆகிய பகுதிகளில் ஆய்வு மேற்கொண்டார்.

அப்போது, அங்கிருந்த வணிகர்கள் மற்றும் பொதுமக்களுக்கு இடைவெளிவிட்டு பொருட்களை வாங்குமாறு முககவசம் இல்லாமல் வெளியே வரவேண்டாம் எனவும் அறிவுறுத்தினார்.
பின்னர் செய்தியாளர்களிடம் பேசிய அவர், திருப்பூரில் அத்தியாவசிய வாழ்க்கை பாதிக்காதவாறு நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டுள்ளதாகவும், பொதுமக்கள் பயன்பெறும் வகையில் அந்தந்த பகுதி மளிகை கடைகளின் தொடர்பு எண்ணை சமூக வலைதளங்களில் பகிர்ந்து உள்ளதாகவும் அதன் மூலம் போன் செய்து ஆர்டர் கொடுத்துவிட்டு கூட்டம் இல்லாத நேரத்தில் சென்று பெற்றுக் கொள்ளவும் அறிவுறுத்தப்பட்டுள்ளது எனவும் தெரிவித்தார்.
மேலும், திருப்பூரில் வீட்டு கண்காணிப்பில் 1156 பேர் இருப்பதாகவும் அவர்களுக்கு கொரோனா தொற்று அறிகுறி எதுவும் இல்லை எனவும் உறுதிப்படுத்தினார். அதேபோல், சாலையில் அத்தியாவசியம் இன்றி யாரும் செல்ல வேண்டாம் எனவும் அவர் அவ்வாறு செல்பவர்கள் மீது காவல்துறை சட்டப்படி நடவடிக்கை எடுக்கவும் எனவும் தெரிவித்தார்.