கோவை: கொரோனா தடுப்பு முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் தொடர்பான ஆலோசனை கூட்டம் கோவை மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் அமைச்சர் எஸ்.பி.வேலுமணி தலைமையில் நடைபெற்றது.
கோவை: கொரோனா தடுப்பு முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் தொடர்பான ஆலோசனை கூட்டம் கோவை மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் அமைச்சர் எஸ்.பி.வேலுமணி தலைமையில் நடைபெற்றது.

இந்த ஆலோசனை கூட்டத்தில் மாவட்ட ஆட்சியர் கு.ராசாமணி, மாநகராட்சி ஆணையாளர் ஷ்ரவன்குமார், மேற்கு மண்டல காவல்துறை தலைவர் பெரியய்யா, மாநகர காவல் ஆணையர் சுமித் சரண், எம்.பி ஏ.கே.செல்வராஜ், சட்டமன்ற உறுப்பினர்கள் பி.ஆர்.ஜி.அருண்குமார், அம்மன். அர்ஜூனன், கஸ்தூரி வாசு, கந்தசாமி, மருத்துவக் கல்லூரி முதல்வர் அசோகன், சுகாதார துறை, காவல் துறை, வருவாய் துறை அதிகாரிகள் கலந்து கொண்டனர்.
ஆலோசனைக்கு கூட்டத்திற்குப் பின்னர் அமைச்சர் எஸ்.பி.வேலுமணி செய்தியாளர்களுக்கு பேட்டியளித்தார். அப்போது, கொரோனா வைரஸ் தடுப்பு நடவடிக்கைகள் போர்க்கால அடிப்படையில் எடுக்கப்பட்டு வருவதாகவும் பிரதமர் அறிவித்த 21 நாட்கள் 144 தடை உத்தரவு அமலுக்கு வந்துள்ளது எனவும் அரசின் நடவடிக்கைகளுக்கு பொதுமக்கள் முழு ஒத்துழைப்பு கொடுக்க வேண்டும் என கேட்டுக் கொண்டார்.
கோவை மாவட்டத்தில் 314 பேர் தனிமைப்படுத்தப்பட்டு கண்காணிப்பில் வைக்கப்பட்டுள்ளதாக தெரிவித்த அவர், சார்ஜா, ஐக்கிய அரபு எமிரேட்ஸ் பகுதியில் இருந்து வருபவர்களை கண்காணிக்க 200 படுக்கைகள் கொண்ட கண்காணிப்பு மையம் கருமத்தம்பட்டி பகுதியில் அமைக்கப்பட்டுள்ளது எனவும் இதுவரை 546 பயணிகள் சோதனையிடப்பட்டு அவர்களுக்கு கொரோனா பாதிப்பு இல்லை என உறுதி செய்யப்பட்டுள்ளது எனவும் தெரிவித்தார்.
கோவை இ.எஸ்.ஐ மருத்துவமனையில் 540 படுக்கைகள் தயாராக இருக்கின்றது எனவும் தனியார் மருத்துவமனைகளில் 100 படுக்கைகள் தயாராக உள்ளது எனவும் தேவையான வென்டிலேட்டர்கள் தயார் நிலையில் வைக்கப்பட்டுள்ளது எனவும் தெரிவித்தார். தனியார் மருத்துவமனைகளில் கொரோனா வார்டு ஏற்படுத்தப்பட்டுள்ளதாக கூறினார்.
மேலும், கோவை மாவட்டத்தில் 8 அரசு ஆரம்ப சுகாதார நிலையங்களில் 240 படுகை வசதிகள் ஏற்படுத்தப்பட்டுள்ளதாக தெரிவித்த அவர், வாளையார் உட்பட 8 சோதனை சாவடிகளில் 39 மருத்துவக் குழுக்கள் சுழற்சி முறையில் கண்காணிப்பு பணியில் இருக்கின்றனர் எனவும் அவர் தெரிவித்தார்.
வீட்டில் தனிமைப்படுத்த 314 நபர்களிடம் அதிகாரிகள் தொடர்பில் இருந்து வருகின்றனர் எனவும் தனிமைப்படுத்தப்பட்ட 314 நபர்களின் வீடுகளில் ஸ்டிக்கர் ஓட்டப்பட்டுள்ளது என தெரிவித்த அமைச்சர் எஸ். பி.வேலுமணி, கோவையில் இதுவரை கொரோனா அறிகுறி இருந்த 97 பேருக்கு சோதனை செய்யப்பட்டது எனவும் இதில் 73 பேருக்கு கொரோனா பாதிப்பு இல்லை என்பதும் 2 பேருக்கு கொரோனா வைரஸ் இருப்பதும் உறுதி செய்யப்பட்டுள்ளது என தெரிவித்தார்.
மேலும் 27 பேர் சோதனைக்கு உட்படுத்தப்பட்டு முடிவிற்காக காத்து இருக்கின்றனர் என கூறிய அவர், கொரோனா வைரஸ் குறித்து கோவை அரசு மருத்துவமனையிலேயே பரிசோதிக்கப்பட்டு உடனுக்குடன் முடிவுகள் தெரிவிக்கப்பட்டு வருகின்றது எனவும் தெரிவித்தார். அனைத்து பேருந்து நிலையங்களிலும் கிருமிநாசினி தெளிக்கப் படுகின்றது எனவும் சிறைவாசிகள், மகளிர் சுய உதவிக்குழு மூலம் முக கவசம் தயாரிக்கப்பட்டு வருகின்றது எனவும் தெரிவித்தார்.
மக்கள் முழு கவனத்துடன் இருக்க வேண்டும் எனவும் பொதுமக்கள் வீட்டிற்குள்ளே இருக்க வேண்டும், சுய கட்டுப்பாடு வேண்டும் எனவும் சிலர் அதை கடைபிடிக்காமல் இருப்பதாக தெரிவித்தார். வைட்டமின் சி உணவு வகைகளை அதிகமாக உட்கொள்ள வேண்டும் எனவும் நெல்லிக்காய், ஆரஞ்சு போன்றவற்றை அதிக அளவில் சாப்பிட வேண்டும் எனவும் அவர் தெரிவித்தார்.
மேலும், ரேஷன் கடைகள் மூலம் பொருட்கள் அனைத்தும் வழங்க நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது எனவும் டோக்கன் சிஸ்டம் முறையில் பொருட்கள் விநியோகிக்கப்படும் எனவும் அதிக விலைகளில் பொருட்களை விற்க கூடாது என அறிவுறுத்தப்பட்டு இருப்பதாக தெரிவித்த அவர், மாநிலத்தின் அனைத்து பகுதிகளிலும் குடிநீர் சீரான முறையில் கிடைக்க நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது என அமைச்சர் எஸ்.பி.வேலுமணி தெரிவித்தார்.