கோவை: மக்களின் வரிப்பணத்தில் ஊதியம் பெற்றுக்கொண்டு, அதிமுக கட்சிக்கு மாவட்ட செயலாளர் போல செயல்பட்டுக்கொண்டு இருக்கும் கோவை, மகளிர் மேம்பாட்டு ஆணையத்தின் திட்ட இயக்குனர் செல்வராஜ் அவர்களை கண்டித்து கோவை மாநகர் கிழக்கு மாவட்ட பொறுப்பாளர் நா.கார்த்திக் எம் எல் ஏ கண்டன அறிக்கை வெளியிட்டுள்ளார்.
கோவை: மக்களின் வரிப்பணத்தில் ஊதியம் பெற்றுக்கொண்டு, அதிமுக கட்சிக்கு மாவட்ட செயலாளர் போல செயல்பட்டுக்கொண்டு இருக்கும் கோவை, மகளிர் மேம்பாட்டு ஆணையத்தின் திட்ட இயக்குனர் செல்வராஜ் அவர்களை கண்டித்து கோவை மாநகர் கிழக்கு மாவட்ட பொறுப்பாளர் நா.கார்த்திக் எம் எல் ஏ கண்டன அறிக்கை வெளியிட்டுள்ளார்.
இது தொடர்பாக அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில் தெரிவித்திருப்பதாவது:-
கோவையில், மகளிர் மேம்பாட்டு ஆணையத்தின் திட்ட இயக்குனர் செல்வராஜ் அவர்கள், அரசாங்க பதிவேட்டில் உள்ள, கோவையில் இயங்கி வருகின்ற மகளிர் சுய உதவி குழுக்களின் அனைத்து விலாசம் மற்றும் பெயர்கள் அடங்கிய விபரங்களை கோவையில் உள்ள அதிமுகவினருக்கு அளித்துள்ளார். இந்த தகவல்களை கோவையில் உள்ள ஒவ்வொரு வார்டு அதிமுக வட்ட செயலாளர்களும் பெற்றுக்கொண்டு ஒவ்வொரு மகளிர் சுய உதவி குழுக்களை தொடர்பு கொண்டு என்ன உதவி வேண்டுமானாலும் செய்து தருகிறேன் என்று உறுதி அளித்து அவர்களை அதிமுக கட்சிக்கு ஆதரவாக சார்பாக செயல்பட வேண்டும் என்று நிர்ப்பந்திக்கிறார்கள் .
கோவையில் தேசிய நகர்புற வாழ்வாதார திட்டத்தின் கீழ் ( NULM ) 26 தொண்டு நிறுவனங்கள், பல மகளிர் சுய உதவிக் குழுக்களை நிறுவி பயிற்றுனர்களாக உள்ளனர். இவர்களுக்கு கீழ் செயல்படும் மகளிர் சுய உதவிக் குழுக்களுக்கு பயிற்சி அளிக்கின்றனர். இந்த பயிற்றுனர்களை தொடர்பு கொண்டு இவர்களின் கீழ் செயல்படும் அனைத்து சுய உதவிக் குழுக்களையும் மகளிர் மேம்பாட்டு திட்டத்தின் கீழ் கொண்டு வர வேண்டும் என்றும் அவர்களை அதிமுக கட்சிக்கு ஆதரவாக சார்பாக செயல்பட வேண்டும் என்றும் திட்ட இயக்குனர் செல்வராஜ் அவர்கள் நிர்ப்பந்தித்து வருகிறார். அவ்வாறு சேர்க்க வில்லையென்றால் அவர்களது பயிற்றுனர் பணியை தொடர முடியாது என்று மிரட்டுகிறார்.
மேலும், ஒவ்வொரு வார்டிலும் ஒப்பந்த முறையில் ஒருவரை நியமித்து, அவர்கள் மூலம் அந்தந்த பகுதிகளில் உள்ள மகளிர்களை வீட்டுக்கு ஒருவர் என்ற முறையில் மகளிர் சுய உதவிக் குழுக்களை ஆரம்பித்து , ஒருங்கிணைத்து தேர்தல் கால சமயங்களில் ஒவ்வொரு வீட்டுக்கும் பண விநியோகம் செய்ய , அதிமுக கட்சிக்கு ஆதரவாக செயல்பட வைக்க நடவடிக்கை எடுத்து வருகிறார்கள். இந்த ஒவ்வொரு வட்ட பொறுப்பாளர்களையும் மேற்பார்வையிட இரு பட்டதாரிகளை ஒப்பந்த முறையில் நியமனம் செய்து அவர்களை திட்ட இயக்குனர் செல்வராஜ் கண்காணித்து வருகிறார்.
மக்களின் வரிப்பணத்தில் ஊதியம் பெற்றுக்கொண்டு , அரசு பதவியில் இருக்கும் ஒரு நபர் அரசாங்கத்திடம் உள்ள தகவல்களை அதிமுகவினருக்கு கொடுத்து , அதை மேற்பார்வையும் செய்து , அதிமுக கட்சிக்கு மாவட்ட செயலாளர் போல செயல்பட்டுக்கொண்டு இருப்பதற்கு யார் அதிகாரம் கொடுத்தது?
தற்பொழுது நாடு முழுவதும் கொரோனா வைரஸ் பாதிப்பிற்கு, மாண்புமிகு பிரதமர் அவர்களே சுய ஊரடங்கு உத்தரவு இட்டு , அனைத்து அரசு இயந்திரங்களும் விழிப்புணர்வு ஏற்படுத்தி வரும் வேளையிலே, ஒரு அரசு அதிகாரியாக கொரோனா வைரஸ் தடுப்பு நடவடிக்கைகள் சம்பந்தமான எந்த ஒரு பணிகளையும் மேற்கொள்ளாமல், தற்பொழுதும் மகளிர் சுய உதவி குழுக்களை அழைத்து பேசி உத்தரவு இட்டுக் கொண்டிருப்பதின் மர்மம் என்ன ? இவர் போன்ற அலுவலர்களை தேர்தல் சமயத்தில் தேர்தல் அலுவலர்களாக நியமித்தால் தேர்தல் நியாயமாக நடைபெறுமா? ஜனநாயகத்தில் கேலிக்கூத்தாக உள்ள இது போன்ற நிகழ்வுகளை கோவை மாநகர் கிழக்கு மாவட்ட திமுக சார்பில் வன்மையாக கண்டிக்கிறேன். இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.