கோவை: கேரளா மாநில எல்லையான வாளையார் சோதனை சாவடியில் கொரோனா வைரஸ் நோய் தடுப்பு மற்றும் முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் மருத்துவக் குழுவினரால் மேற்கொள்ளப்பட்டு வருவதை மாவட்ட ஆட்சியர் கு.இராசாமணி இ.ஆ.ப., அவர்கள் நேற்று நேரில் பார்வையிட்டு ஆய்வு செய்தார்.
கோவை: கேரளா மாநில எல்லையான வாளையார் சோதனை சாவடியில் கொரோனா வைரஸ் நோய் தடுப்பு மற்றும் முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் மருத்துவக் குழுவினரால் மேற்கொள்ளப்பட்டு வருவதை மாவட்ட ஆட்சியர் கு.இராசாமணி இ.ஆ.ப., அவர்கள் நேற்று நேரில் பார்வையிட்டு ஆய்வு செய்தார்.

இந்த ஆய்வின்போது துணை இயக்குநர் ரமேஷ்குமார், உணவு பாதுகாப்பு அலுவலர் தமிழ்செல்வன், வட்டாட்சியர்(மதுக்கரை) பழனிசாமி மற்றும் அரசு அலுவலர்கள் உட்பட பலர் கலந்து கொண்டனர்.
பின்னர் மாவட்ட ஆட்சியர் மாவட்ட ஆட்சியர் அவர்கள் தெரிவித்ததாவது:-
தமிழ்நாடு முதலமைச்சர் அவர்களின் உத்தரவின்படி, கொரோனா வைரஸ் நோய் தடுப்பு நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டு வருவதன் காரணமாக இதுவரை கோவை மாவட்டத்தில் கொரோனா வைரஸ் பாதிப்பு இல்லை என்ற நிலையிலும், நோய் தடுப்பு முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் மற்றும் விழிப்புணர்வு பொதுமக்களிடத்தில் ஏற்படுத்தப்பட்டு வருகிறது.
அண்டை மாநிலமான கேரளாவில் இருந்து வரும் பயணிகள் மூலம் கொரோனா வைரஸ் பரவாமல் தடுப்பதற்கு ஆம்னி பேருந்துகள் மற்றும் சுற்றுலா பேருந்துகள், அரசு பேருந்துகள், கார், சரக்கு வாகனங்கள் ஆகியவைகளை முழுமையாக கிருமி நாசினி கொண்டு தூய்மைப்படுத்தும் பணி மாநிலத்தின் எல்லைப்பகுதிகளான வாளையார், முள்ளி, மேல்பாவியூர், வேலந்தபாளையம், வீரப்பகவுண்டனூர், கோபாலபுரம், மீனாட்சிபுரம், வழுக்குப்பாறை, ஆனைகட்டி ஆகிய சோதனை சாவடிகளில் சுகாதார முன்னெச்சரிக்கைத் தடுப்பு நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டு வருகிறது.
கேரளா மாநில எல்லைப்பகுதியான வாளையார் சோதனை சாவடியில் 24 மணிநேரமும் செயல்படக்கூடிய 10 மருத்துவக்குழுக்கள் நோய்தடுப்பு மற்றும் கண்காணிப்பு பணியினை மேற்கொண்டு வருகின்றனர். கேரளா மாநிலத்திலிருந்து நமது மாவட்டத்திற்கு வருகை தரும் அனைத்து வாகனங்களையும் இச்சோதனை சாவடிகளில் முழுமையாக சுகாதார பரிசோதனை செய்த பிறகே அனுமதிக்கப்படுகின்றது. பேருந்து பயணிகள், வாகன ஓட்டிகள் என அனைவரையும் மருத்துவ குழுவினரால் சோதனை செய்யப்பட்டு அனுப்பப்படுகின்றனர்.
மேலும், அவ்வழியாக வருகின்ற பேருந்துகள், நான்கு சக்கர வாகனங்கள், இரண்டு சக்கர வாகனங்கள் ஆகியவைகளில் கிருமி நாசினிகள் தெளிக்கப்பட்டு, சாலைகளில் குளோரின் பவுடர்கள் இடப்பட்டும் நோய் தடுப்பு நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டும் வருகிறது. இப்பணிகளை ஒருங்கிணைந்து மேற்கொள்ள வருவாய்துறை, உள்ளாட்சித்துறை, காவல்துறை, போக்குவரத்துத்துறை மற்றும் சுகாதாரத்துறை அலுவலர்களுக்கு அறிவுறுத்தப்பட்டுள்ளதுடன், தேவையான விழிப்புணர்வும் அளிக்கப்பட்டுள்ளது.
மாவட்டத்தின் எல்லையோர பகுதிகளில் நோய் தடுப்பு பணிகள் மேற்கொள்ளப்பட்டு வருகிறது. கொரோனா வைரஸ் தடுப்பு பணிகளை கண்காணிக்கவும், சோதனை செய்யவும், விழிப்புணர்வு நடவடிக்கைகளை மேற்கொள்ள ஆனைக்கட்டி பகுதிகளில் வருவாய் கோட்டாட்சியர் வடக்கு அவர்களும், கருமத்தம்பட்டியில் உள்ள கொரோனா கண்காணிப்பு மையத்திற்கு வருவாய் கோட்டாட்சியர் தெற்கு அவர்களும், பொள்ளாச்சி மலையோர கிராமங்கள், வால்பாறை மற்றும் கேரளா மாநில எல்லையோர இருக்கக்கூடிய கிராமங்களுக்கு பொள்ளாச்சி சார் ஆட்சியர் அவர்களும், நியமனம் செய்யப்பட்டுள்ளனர்.
முகக்கவசங்களை அனைவரும் அணிந்து கொள்ளவேண்டிய அவசியமில்லை. சளி இருமல் உள்ளவர்கள் மட்டுமே முகக்கவசத்தை போட்டுக்கொள்ளலாம். மேலும், முகக் கவசங்கள் தட்டுப்பாடு மற்றும் அதிக விலைக்கு விற்பனை தடுக்கவும், கோவை மாவட்ட மகளிர் திட்டத்தின் மூலம் மகளிர் சுய உதவிக்குழுவினால் முகக்கவசங்கள் தயாரிக்க பணி நடைபெற்று வருகிறது. அரசு மருத்துவமனைகள், தனியார் மருத்துவமனைகள் மற்றும் முகக்கவசங்கள் தேவைப்படுவோர் மாவட்ட ஆட்சியரகத்தில் உள்ள மகளிர் திட்ட அலுவலகத்தை அணுகி குறைந்த விலையில் பெற்றுக்கொள்ளலாம்.
வெளிமாநிலங்கள் மற்றும் வெளியூர்களுக்கு சுற்றுலா செல்வதையும், தேவையற்ற பயணங்களையும் பொதுமக்கள் தவிர்த்திடவேண்டும். அடிக்கடி கைகளை சுத்தமாக கழுவுவதன் மூலம் இந்நோயிலிருந்து நம்மை நாம் தற்காத்து கொள்ள முடியும். அனைத்து தரப்பு மக்களும் மாவட்ட நிர்வாகத்தின் சார்பில் எடுக்கப்படும் அனைத்து நோய் தடுப்பு நடவடிக்கை முயற்சிகளுக்கு முழு ஒத்துழைப்பு நல்கிட வேண்டும்.
மேலும், கொரோனா வைரஸ் தொற்று குறித்து சமூக வலைத்தளங்கள், ஊடகங்கள், பொதுவெளிகளில் வதந்திகள் பரப்புபவர்கள் மீது கடுமையான நடவடிக்கை எடுக்கப்படும். கொரோனா வைரஸ் குறித்து உறுதிப்படுத்தப்படாத தகவல்களையும், வதந்திகளையும் பொது மக்கள் நம்ப வேண்டாம். மேலும், சளி, காய்ச்சல், இருமல் உள்ளவர்கள் உடனடியாக அரசு மருத்துவமனை அணுகிட வேண்டும் என மாவட்ட ஆட்சியர் கு.இராசாமணி தெரிவித்தார்.