கோவை: கொரோனா வைரஸிலிருந்து பாதுகாத்து கொள்ள எடுக்க வேண்டிய நடவடிக்கைகள் பற்றி சார் ஆட்சியர் தலைமையில் பல்வேறு துறையிருடன் வால்பாறையில் ஆலோசனைக்கூட்டம் இன்று நடைபெற்றது.
கோவை: கொரோனா வைரஸிலிருந்து பாதுகாத்து கொள்ள எடுக்க வேண்டிய நடவடிக்கைகள் பற்றி சார் ஆட்சியர் தலைமையில் பல்வேறு துறையிருடன் வால்பாறையில் ஆலோசனைக்கூட்டம் இன்று நடைபெற்றது.
கோவை மாவட்டம் வால்பாறையிலுள்ள பன்னிமேடு தேயிலை தோட்டத்தில் உள்ள ஒரு பெண்ணுக்கு கொரோனா வைரஸ் அறிகுறி இருந்ததால் அவர் மேல் சிகிச்சைக்காக சிறப்பு ஆம்புலன்ஸ் மூலம் கோவை அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைக்கப்பட்டார்.
இதனால் வால்பாறை மக்களிடையே இச்சம்பவம் பெரும் அச்சத்தையும் பீதியையும் ஏற்படுத்தியுள்ளது.

இதனைத் தொடர்ந்து கோவை மாவட்ட நிர்வாகம் சார்பில் பொள்ளாச்சி சார் ஆட்சியர் தலைமையில் இன்று ஆலோசணை கூட்டம் வால்பாறை வட்டாட்சியர் அலுவலகத்தில் நடைபெற்றது.
இந்த ஆலோசனைக் கூட்டத்தில், ஏற்கனவே வால்பாறை நகராட்சி மற்றும் பொது சுகாதாரத்துறை சார்பில் எடுக்கப்பட்டு வரும் பல்வேறு நடவடிக்கைகள் குறித்து ஆலோசிக்கப்பட்டது.

மேலும், பொதுமக்கள் வெளியூர் பயணங்களை தவிர்க்க வேண்டும் எனவும், பொதுமக்கள் அதிகம் கூடுவதை தவிர்த்தல், அடிக்கடி கை கழுவுதல், நீர் சத்து நிறைந்த ஆகாரங்களை பருக வேண்டும் எனவும் கேட்டுக்கொள்ளப்பட்டது.
மேலும், காய்ச்சல், சளி, இருமல் அறிகுறிகள் இருந்தால் உடனடியாக மருத்துவமனையை அணுகி பரிசோதித்து கொள்ள வேண்டும் என கேட்டுக்கொள்ளப்பட்டது.

இதோடு வரும் மார்ச் 31 ஆம் தேதி வரை வால்பாறையில் தங்கும் விடுதிகளில் யாரையும் அனுமதிக்கக்கூடாது என தெரிவிக்கப்பட்டது. மேலும், மருத்துவ பொருட்களின் விலையினை நிர்ணயித்து கூடுதலாக விற்க கூடாது எனவும் கேட்டுக்கொள்ளப்பட்டது.
கொரோனா வைரஸிலிருந்து தம்மை பாதுகாத்து கொள்ள பொதுமக்கள் அனைவரும் அரசின் அறிவிப்பின் படி நடந்து கொள்ள வேண்டும் என அறிவுறுத்தப்பட்டது.