நீலகிரி: கொரோனா வைரஸ் எதிரொலியாக நீலகிரி மாவட்டத்தில் உதகை, குன்னூர், கோத்தகிரி, கூடலூர், போன்ற பகுதிகளில் உள்ள முக்கிய சுற்றுலாத்தலங்கள் வரும் 31ம் தேதி வரை மூடப்படுவதாக மாவட்ட ஆட்சியர் இன்னசென்ட் திவ்யா தெரிவித்தார்.
நீலகிரி: கொரோனா வைரஸ் எதிரொலியாக நீலகிரி மாவட்டத்தில் உதகை, குன்னூர், கோத்தகிரி, கூடலூர், போன்ற பகுதிகளில் உள்ள முக்கிய சுற்றுலாத்தலங்கள் வரும் 31ம் தேதி வரை மூடப்படுவதாக மாவட்ட ஆட்சியர் இன்னசென்ட் திவ்யா தெரிவித்தார்.

இதுகுறித்து செய்தியாளர்களை சந்தித்து அவர் பேசுகையில், நீலகிரி எல்லையில் உள்ள கேரளா மாநிலம் வயநாடு பகுதியில் இருவருக்கு கொரோனா காய்ச்சல் உறுதி செய்யப்பட்டுள்ளதால், நீலகிரிக்கு சுற்றுலா பயணிகள் வருவதை தவிர்க்குமாறு மாவட்ட ஆட்சியர் வேண்டுகோள் விடுத்துள்ளார்.

உதகை தாவரவியல் பூங்கா, குன்னூர் சிம்ஸ் பூங்கா, படகு இல்லம் உட்பட அனைத்து சுற்றுலா மையங்கள் மூடப்படுவதாக மாவட்ட ஆட்சியர் இன்னாசென்ட் திவ்யா உத்தரவிட்டுள்ளார்.
தங்கும் விடுதிகளில் உள்ள வெளிநாடு மற்றும் பிற மாநில சுற்றுலா பயணிகள் நாளை காலைக்குள் மாவட்டத்தை விட்டு வெளியேற வேண்டுமெனவும் 8 பேர் நீலகிரியில் கொரோனா வைரஸ் அறிகுறிகளுடன் கண்காணிப்பில் இருப்பதாக மாவட்ட ஆட்சியர் இன்னசென்ட் திவ்யா கூறினார்.
மேலும், பொதுமக்களும் இதை கருத்தில் கொண்டு தேவையற்ற பயணத்தை மேற்கொள்ள வேண்டாம் எனவும் தவிர்க்க முடியாத பயணம் என்றால் செல்லலாம் என அறிவுறுத்தினார். இதுமட்டுமல்லாமல் அதிகமாக மக்கள் கூடும் இடங்களான கோயில்கள், தேவாலயங்கள், மசூதிகள் என அனைத்து பகுதிகளிலும் கூட்டத்தை தவிர்க்க வேண்டுமெனவும், சுபநிகழ்ச்சிகளில் 100 நபர்கள் மட்டுமே கலந்து கொள்ளும் விதமாக நிகழ்ச்சிகளை நடத்திக் கொள்ளலாம் என வேண்டுகோள் விடுத்தார்.
அதேபோல, எல்லையோர பகுதிகளில் தீவிர சோதனை நடைபெற்று வருவதாகவும் தொலைபேசிகளில் வாட்ஸ்அப் மூலம் தேவையற்ற வதந்திகளை பரப்புவோர் மீது நடவடிக்கை எடுக்கப்படும் என தெரிவித்த அவர், கொரேனா வைரஸ் அறிகுறிகள் இருப்பின் சந்தேகத்திற்கு 1077 என்ற இலவச தொலைபேசி எண்ணிற்கு அழைத்து தங்களது சந்தேகங்களை தீர்த்துக் கொள்ளும் வகையில் மாவட்ட நிர்வாகம் ஏற்படுத்தி உள்ளது எனவும் கூறினார்.
மேலும், நகராட்சி மற்றும் ஊராட்சி பகுதிகளில் 40க்கும் மேற்பட்ட குழுக்கள் பிரிக்கப்பட்டு, நகராட்சி மட்டுமல்லாமல் அனைத்து கிராமப் பகுதிகளிலும் தீவிர கண்காணிப்பில் ஈடுபடுவார்கள் என தெரிவித்த மாவட்ட ஆட்சியர், இன்று மூடப்படும் சுற்றுலா தலங்கள் அனைத்தும் 31ம் தேதி வரை மூடப்பட்டிருக்கும் என தெரிவித்தார்.