கோவை: தமிழகத்தின் இரண்டாவது பொருளாதார நகரமான கோவை மாநகரின் பொது அமைதியை பாதுகாக்க வேண்டும் என கோவை மாவட்ட ஆட்சியர் மற்றும் காவல்துறை ஆணையாளர் சந்தித்து மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் மாநிலச் செயலாளர் கே.பாலகிருஷ்ணன் தலைமையில் மனு அளிக்கப்பட்டது.
கோவை: தமிழகத்தின் இரண்டாவது பொருளாதார நகரமான கோவை மாநகரின் பொது அமைதியை பாதுகாக்க வேண்டும் என கோவை மாவட்ட ஆட்சியர் மற்றும் காவல்துறை ஆணையாளர் சந்தித்து மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் மாநிலச் செயலாளர் கே.பாலகிருஷ்ணன் தலைமையில் மனு அளிக்கப்பட்டது.
இது குறித்து அவர் அளித்துள்ள மனுவில் தெரிவித்ததாவது:-
கோவையில் இந்து முன்னணி பிரமுகர் மீது தாக்குதல், பள்ளிவாசல் மீது பெட்ரோல் குண்டு வீச்சு, ஆட்டோக்கள் மீது தாக்குதல், இந்து முன்னணி அலுவலகம் மீது பெட்ரோல் குண்டு வீச்சு, எஸ்.டி.பி.ஐ நிர்வாகிகள் மீது தாக்குதல் என தொடர் சம்பவங்களால் பதட்டமான சூழல் நிலவுகின்றது.
இந்நிலையில், கடந்த 10ம் தேதி இரவு அனைத்து ஜமாத் மற்றும் இஸ்லாமிய கூட்டமைப்பினருடன் கோவை மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் ஆட்சியர் கு.ராசாமணி அமைதி பேச்சுவார்த்தை நடத்தினார். இந்த அமைதி பேச்சுவார்த்தையில் கோவை மாநகர காவல் ஆணையர் சுமித் சரண், துணை ஆணையர் பாலாஜி சரவணன் மற்றும் அதிகாரிகள் பங்கேற்றனர்.

கோவை மாநகரின் அமைதிக்கும் சட்டம் ஒழுங்கை பாதுகாப்பதற்கும் காவல்துறை எடுக்கக்கூடிய பல நடவடிக்கைகளை நாங்கள் வரவேற்கிறோம். பல்வேறு நிர்ப்பந்தங்களால் சில சமரசங்கள் செய்யப்படுவதையும் பார்க்கிறோம். இவைகளில் இருந்து விலகி நகரின் அமைதி மற்றும் சட்டம் ஒழுங்கை சார்ந்து மட்டுமே காவல்துறை செயலாற்ற வேண்டுமென கேட்டுக்கொள்கிறோம்.
மேற்கண்ட சீரழிவுகளை காவல்துறை இரு மதங்கள் சம்பந்தப்பட்டதாகவோ அல்லது சட்டம் ஒழுங்கு சார்ந்ததாகவோ பார்க்கக்கூடாது. தமிழகத்தின் இரண்டாவது பொருளாதார நகரமான இம்மாநகரின் பொது அமைதியை பாதுகாக்க அரசியல் கட்சிகள், மக்கள் பிரதிநிதிகள், தொழில்முனைவோர் வர்த்தகர்கள் சமூக சமய அமைப்புகளை கொண்ட விரிவான அமைதி உருவாக்க வேண்டும். மதபதற்றத்தை ஏற்படுத்தக்கூடிய ஊர்வலங்கள், பொதுக்கூட்டங்கள், ஆர்ப்பாட்டங்கள், பேச்சாளர்கள் என எதையும் அனுமதிக்கக்கூடாது. மீறி செயல்படுவோர்கள் மீது கடும் நடவடிக்கை எடுக்க வலியுறுத்துகிறோம், இவ்வாறு அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.