கோவை: கோவை மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் கோவை அனைத்து ஜமாத் மற்றும் இஸ்லாமிய கூட்டமைப்பினருடன் மாவட்ட ஆட்சியர் கு.ராசாமணி அமைதி பேச்சுவார்த்தை நடத்தினார்.
கோவை: கோவை மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் கோவை அனைத்து ஜமாத் மற்றும் இஸ்லாமிய கூட்டமைப்பினருடன் மாவட்ட ஆட்சியர் கு.ராசாமணி அமைதி பேச்சுவார்த்தை நடத்தினார்.
கோவையில் இந்து முன்னணி பிரமுகர் மீது தாக்குதல், பள்ளிவாசல் மீது பெட்ரோல் குண்டு வீச்சு, ஆட்டோக்கள் மீது தாக்குதல், இந்து முன்னணி அலுவலகம் மீது பெட்ரோல் குண்டு வீச்சு, எஸ்.டி.பி.ஐ நிர்வாகிகள் மீது தாக்குதல் என தொடர் சம்பவங்களால் பதட்டமான சூழல் நிலவுகின்றது.
இந்நிலையில், நேற்று இரவு அனைத்து ஜமாத் மற்றும் இஸ்லாமிய கூட்டமைப்பினருடன் கோவை மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் ஆட்சியர் கு.ராசாமணி அமைதி பேச்சுவார்த்தை நடத்தினார். இந்த அமைதி பேச்சுவார்த்தையில் கோவை மாநகர காவல் ஆணையர் சுமித் சரண், துணை ஆணையர் பாலாஜி சரவணன் மற்றும் அதிகாரிகள் பங்கேற்றனர். இந்த அமைதி பேச்சுவார்த்தை இரண்டு மணி நேரத்திற்கும் மேலாக நடைபெற்றது.
பின்னர் செய்தியாளர்களுக்கு பேட்டியளித்த அனைத்து ஜமாத் மற்றும் இஸ்லாமிய கூட்டமைப்பின் ஒருங்கிணைப்பாளர் ராஜா உசேன், கோவையில் இந்து முன்னணி அமைப்பினர் இஸ்லாமியர்களை தொடர்ந்து தாக்குவதும், பள்ளிவாசல்கள் தாக்கப்படுவது குறித்து மாவட்ட ஆட்சியரிடம் தெரிவிக்கப்பட்டதாக கூறினார். மேலும், கடந்த ஒரு வாரத்தில் மட்டும் 8 இஸ்லாமியர்கள் தாக்கப்பட்டு இருப்பது குறித்தும் மாவட்ட ஆட்சியரிடம் தெரிவித்து இருப்பதாகவும்,இந்த வன்முறையைக் கட்டுப்படுத்த வேண்டும் என அவரிடம் தெரிவித்து இருப்பதாகவும் உரிய நடவடிக்கை எடுக்கப்படும் ஆட்சியர் உறுதி அளித்து இருப்பதாக ராஜா உசேன் தெரிவித்தார்.
மேலும், நேற்று எஸ்.டி.பி.ஐ கட்சியினர் இக்பால், ஷாஜகான் ஆகியோரை தாக்கியவர்கள் "ஜெய் ஸ்ரீராம்" என முழங்கியபடி தாக்குதல் நடத்தியதை மாவட்ட ஆட்சியர் கவனத்திற்கு கொண்டு சென்று இருப்பதாக தெரிவித்தார். புறநகர் பகுதிகளில் உள்ள இஸ்லாமிய வழிபாட்டுத் தலங்களுக்கு உரிய பாதுகாப்பு அளிக்க வேண்டும் என்று கோரிக்கை விடுத்திருப்பதாகவும் ஆட்சியரும் உரிய பாதுகாப்பு அளிக்கப்படும் என தெரிவித்து இருப்பதாக கூறினார்.
அதேபோல, ஆத்துப்பாலம் பகுதியில் நடைபெறும் "ஷாகின் பாக் " போராட்டம் தங்களது குடியுரிமைக்கான போராட்டம் எனவும் சட்டமன்றத்தில் தீர்மானம் நிறைவேற்றும் வரை இந்தப் போராட்டம் தொடரும் எனவும் அனைத்து ஜமாத் மற்றும் இஸ்லாமிய அமைப்புகளின் ஒருங்கிணைப்பாளர் ராஜா உசேன் தெரிவித்தார். இன்று இந்து அமைப்பினருடன் அமைதி கூட்டம் மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் நடைபெற இருப்பது குறிப்பிடத்தக்கது.