கோவை: மலேசியாவிலிருந்து விமானம் மூலம் திருச்சி விமான நிலையத்தில் இறங்கி கோவை வந்த கேரளாவைச் சேர்ந்த நபருக்கு கொரோனா வைரஸ் பாதிப்பு இருப்பதாக எழுந்த சந்தேகத்தை தொடர்ந்து கோவை இஎஸ்ஐ மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு மருத்துவ கண்காணிப்பில் உள்ளார்.
கோவை: மலேசியாவிலிருந்து விமானம் மூலம் திருச்சி விமான நிலையத்தில் இறங்கி கோவை வந்த கேரளாவைச் சேர்ந்த நபருக்கு கொரோனா வைரஸ் பாதிப்பு இருப்பதாக எழுந்த சந்தேகத்தை தொடர்ந்து கோவை இஎஸ்ஐ மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு மருத்துவ கண்காணிப்பில் உள்ளார்.
உலகையே அச்சுறுத்தி வரும் கொரோனா வைரஸ் தற்போது வரை 97 நாடுகளில் பரவியுள்ளது. அதேபோல இந்த வைரஸ் தாக்கத்தால் 3 ஆயிரத்து 500-க்கு மேற்பட்டோர் பலியாகி விட்டனர். ஒரு லட்சத்துக்கு மேற்பட்டோர் சிகிச்சை பெற்று வருகிறார்கள். இந்தியாவில் தற்போது வரை 43 பேர் இந்த வைரஸ் தாக்கத்தினால் பாதிக்கப்பட்டுள்ளனர்.
இந்நிலையில், இந்தியா முழுவதும் உள்ள விமான நிலையங்களில் வெளிநாடுகளிலிருந்து வைரஸ் தாக்க அறிகுறிகளுடன் வருபவர்கள் அங்கேயே தடுத்து நிறுத்தப்பட்டு பரிசோதனைக்கு உட்படுத்தப்படுகின்றனர். இருப்பினும் ஒரு சிலர் விமான நிலைய பரிசோதனைகளில் இருந்து தப்பித்து வருவது அனைவரையும் அதிர்ச்சியில் ஆழ்த்துகிறது.
இந்த நிலையில், கேரள மாநிலம் திருச்சூர் மாவட்டத்தைச் சேர்ந்த 36 வயது மதிக்கத்தக்க ஆண் நபர் ஒருவர் நேற்று மலேசியாவிலிருந்து திருச்சி விமான நிலையத்தில் இறங்கி கோவை வந்துள்ளார். பின்னர் ராமநாதபுரம் அருகே உள்ள ஜெம் மருத்துவமனையில் வேறொரு சிகிச்சைக்காக சென்றுள்ளார். அப்போது அவருக்கு சளி, காய்ச்சல் இருப்பதை அறிந்த மருத்துவர்கள் சந்தேகத்தின் பேரில் கோவை அரசு மருத்துவமனைக்கு அவரை அனுப்பி வைத்தனர்.
இதைத்தொடர்ந்து நேற்றிரவு அனுமதிக்கப்பட்ட அவர் இன்று காலை இஎஸ்ஐ மருத்துவமனையில் உள்ள கொரோனா சிறப்பு சிகிச்சை பிரிவுக்கு மாற்றப்பட்டு உள்ளார். இதைத்தொடர்ந்து அவரது ரத்தம் மற்றும் சளி மாதிரிகள் சென்னையில் உள்ள ஆய்வகத்திற்கு அனுப்பப்பட்டுள்ளது.
கேரளாவைச் சேர்ந்த நபர் கொரோனா அறிகுறிகள் இருப்பதை அறிந்தே தங்கள் மாநிலத்திற்கு செல்லாமல் கோவைக்கு வந்ததும், அறிகுறிகளை மறைத்ததும் மருத்துவமனை ஊழியர்கள் மத்தியில் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
இதனிடையே, இவர் தங்கியிருந்த ஹோட்டல் அறை, ஹோட்டலில் இருந்தவர்கள், இவருக்கு சிகிச்சை எடுத்த செவிலியர்கள் என அனைவரும் சுகாதாரத்துறையின் கண்காணிப்பில் கொண்டு வரப்பட்டு உள்ளனர். தற்போது, கேரள இளைஞரின் உடல்நலம் சீராக உள்ளதாகவும், இருப்பினும் ரத்த மாதிரிகள் அறிக்கை பெறப்பட்ட பிறகே அடுத்தகட்ட நடவடிக்கைகள் தெரிவிக்கப்படும் என சுகாதாரத்துறை அதிகாரிகள் தெரிவித்தனர். இதேபோன்று சார்ஜாவில் இருந்து விமானம் மூலம் கோவை வந்த நபர், வீட்டிலேயே சுகாதாரத்துறை கண்காணிப்பில் வைக்கப்பட்டுள்ளார்.