கோவை: கோவை மாநகராட்சி துப்புரவு பணியாளர் நியமனத்தில் முறைகேட்டை கண்டித்து 500க்கும் மேற்பட்ட துப்புரவு பணியாளர்கள் கோவை மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தை முற்றுகையிட்டதால் பரபரப்பு ஏற்பட்டது.
கோவை: கோவை மாநகராட்சி துப்புரவு பணியாளர் நியமனத்தில் முறைகேட்டை கண்டித்து 500க்கும் மேற்பட்ட துப்புரவு பணியாளர்கள் கோவை மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தை முற்றுகையிட்டதால் பரபரப்பு ஏற்பட்டது.

கோவை மாநகராட்சி துப்புரவு பணியாளர்கள் பணிக்கு கடந்த இருதினங்களுக்கு முன்பு 310 பேருக்கு பணி நியமன ஆணையை உள்ளாட்சித் துறை அமைச்சர் எஸ்பி.வேலுமணி வழங்கினார். முதுகலை பட்டம் பெற்றவர்களுக்கும் துப்புரவு பணி நியமனம் வழங்கப்பட்டது. இதில் முறைகேடுகள் நடைபெற்றதாகவும் பல ஆண்டுகளாக ஒப்பந்த அடிப்படையில் துப்புரவு பணியாற்றும் நபர்களுக்கு பணி ஆணை வழங்கப்படாததைக் கண்டித்து துப்புரவு பணியாளர்கள் பணியை புறக்கணித்து கோவை மாவட்ட ஆட்சியர் அலுவலகம் முன்பு போராட்டம் நடத்தினர்.

இதுதொடர்பாக தமிழ்நாடு அண்ணல் அம்பேத்கர் துப்புரவு மற்றும் பொதுப்பணியாளர்கள் சங்கத்தின் செயலாளர் தமிழ்நாடு செல்வன் கூறுகையில், கோவை மாநகராட்சியின் 100 வார்டுகளிலும் கடந்த 10 ஆண்டுகளாக 3 ஆயிரத்திற்கும் மேற்பட்ட துப்புரவு பணியாளர்கள் ஒப்பந்த அடிப்படையில் பணியாற்றி வருவதாகவும் சமீபத்தில் 549 காலி பணியிடங்களுக்கு நேர்முக தேர்வு நடைபெற்றதில் பல ஆண்டுகளாக பணியாற்றி வருபவர்களுக்கு முன்னுரிமை தராமல் உள்ளாட்சித்துறை அமைச்சர் வேலுமணியின் தொகுதிக்கு உட்பட்ட 310 பேர்களுக்கு துப்புரவு பணியாளர் பணி நியமன ஆணை வழங்கப்பட்டு உள்ளதாக குற்றம் சாட்டினர்.

மேலும், அனுபவம் இல்லாதவர்களிடம் பணத்தை பெற்றுக்கொண்டு பணிநியமனம் வழங்கியுள்ளதாகவும் புதியதாக பணி ஆணை பெற்றவர்கள் 5 லட்சம் பணம் கொடுத்து பணி நியமனம் பெற்றுள்ளோம் என பகிரங்கமாக கூறுவதாகவும் மாநகராட்சி அலுவலகத்தில் பணி வழங்க தற்போது மாநகராட்சி உதவி ஆணையாளர் அலுவலகத்தில் ரகசிய கூட்டம் நடைபெறுவதாக தெரிவித்தனர்.
அமைச்சர் எஸ்பி.வேலுமணி இந்த புதிய பணி நியமன ஆணை வழங்கியதன் மூலம் தங்களுக்கு துரோகம் விளைவித்து விட்டதாகவும் அனைத்து துறையிலும் முறைகேட்டில் ஈடுபட்டு விட்டு தற்போது துப்புரவு தொழிலிலும் முறைகேட்டை துவக்கி விட்டார் என்றனர். இது அவருக்கு துர்நாற்றத்தை ஏற்படுத்தும் எனவும் நியாயம் கிடைக்கும் வரை பணிக்கு திரும்ப மாட்டோம் என தெரிவித்தனர். துப்புரவு தொழிலாளர்கள் முற்றுகை காரணமாக அங்கு பலத்த போலீஸ் பாதுகாப்பு போடப்பட்டு உள்ளது.