கோவை: சீனாவிலிருந்து கோவை வந்துள்ள மாணவருக்கு கொரோனா வைரஸ் பாதிப்பு உள்ளதா என்ற சந்தேகத்தின் பேரில் கோவை இஎஸ்ஐ மருத்துவமனையில் மருத்துவ கண்காணிப்பில் வைக்கப்பட்டு மருத்துவ பரிசோதனை செய்யப்பட்டு வருகிறது.
கோவை: சீனாவிலிருந்து கோவை வந்துள்ள மாணவருக்கு கொரோனா வைரஸ் பாதிப்பு உள்ளதா என்ற சந்தேகத்தின் பேரில் கோவை இஎஸ்ஐ மருத்துவமனையில் மருத்துவ கண்காணிப்பில் வைக்கப்பட்டு மருத்துவ பரிசோதனை செய்யப்பட்டு வருகிறது.
உலகம் முழுவதும் கொரோனா வைரஸின் பாதிப்பு அனைவரையும் அதிர்ச்சியில் ஆழ்த்தியுள்ளது. இந்த நோய் பாதிப்பினால் பல உயிர்கள் தொடர்ந்து பலியாகி வருகின்றனர். மேலும், இந்த நோயானது தொடர்ந்து பரவி வருவதால் அதை தடுக்கும் நோக்கில் சர்வதேச உலகமும் தங்களது ஆய்வினை தொடர்ந்து செய்து வருகிறது. மேலும், இந்த நோய் பரவாமல் இருக்கவும் அரசின் சார்பில் பல்வேறு நடவடிக்கைகள் எடுக்கப்பட்டு வருகிறது. அதேபோல, அனைத்து விமான நிலையங்களிலும் வெளிநாடுகளிலிருந்து வரும் பயணிகள் பரிசோதனைக்கு பின்பே அனுமதிக்கப்படுகின்றனர்.
இந்நிலையில், நேற்று சீனாவிலிருந்து விமானம் மூலம் ஜப்பான் வந்து ஜப்பானிலிருந்து சென்னை வந்து, பின்னர் சென்னையில் இருந்து விமானம் மூலம் கோவை வந்த மாணவரிடம் நடைபெற்ற சோதனையில் எழுந்த சந்தேகத்தின் பேரில், சுகாதாரத் துறையினர் மாணவரை கோவை இஎஸ்ஐ மருத்துவமனையில் அனுமதித்துள்ளனர்.
இதைத்தொடர்ந்து அந்த மாணவரின் சளி மற்றும் ரத்தம் எடுத்து சென்னையில் உள்ள கிங்ஸ் மருத்துவமனைக்கு பரிசோதனைக்கு அனுப்பப்பட்டுள்ளது. மேலும், அவரை சிறப்பு மருத்துவ குழுவினர் தொடர்ந்து மருத்துவ கண்காணிப்பில் வைத்துள்ளனர்.
மேலும் இந்த மாணவர் தமிழகத்தைச் சேர்ந்தவர் என்றும் மேற்கல்வி பயில்வதற்காக சீனா சென்றுள்ளதும் முதற்கட்டமாக தெரியவந்துள்ளது. ஆனால், கொரோனா வைரஸ் பாதிப்புக்கு உள்ளாகி உள்ளாரா என்பது குறித்த எந்த தகவலும் முழுமையாக உறுதிப்படுத்தப்படவில்லை. அதேபோல, இந்த நோய் தாக்கம் குறித்து தவறான வதந்திகள் பரப்பக் கூடாது என்று சுகாதாரத்துறை சார்பில் அறிவுறுத்தப்பட்டுள்ளது.