கோவை: இந்திய பருத்தி கழகம் மொத்த பருத்தி விற்பனையில் சிறு, குறு நூற்பலைகளுக்கு தள்ளுபடி செய்ததற்கு சைமா வரவேற்பு தெரிவித்துள்ளது.
கோவை: இந்திய பருத்தி கழகம் மொத்த பருத்தி விற்பனையில் சிறு, குறு நூற்பலைகளுக்கு தள்ளுபடி செய்ததற்கு சைமா வரவேற்பு தெரிவித்துள்ளது.
மத்திய ஜவுளி அமைச்சகத்தின் கீழ், இந்திய பருத்தி கழகம் 1974ம் ஆண்டு துவக்கப்பட்டு, 1985ம் ஆண்டு முதல் பருத்தி குறைந்தபட்ச நிர்ணய விலையில் பருத்தி கொள்முதல் செய்து பருத்தி விவசாயிகளுக்கும், பருத்தியை மையமாக கொண்ட ஜவுளித் தொழிலுக்கும் பெரிதும் உதவி வருகிறது.
2018-19 சீசனில் ஒன்பது லட்சம் பேல்கள் வரை வாங்கி இருப்பு வைத்திருந்த பருத்தியை விலை குறைந்த காரணத்தால் கடந்த சீசனில் இந்திய பருத்தி கழகத்தால் விற்பனை செய்ய முடியவில்லை. தற்போதைய பருத்தி சீசனிலும் குறைந்தபட்ச நிர்ணய விலை திட்டத்தின் கீழ், இந்திய பருத்திக் கழகம் 60 லட்சம் பேல்களுக்கும் அதிகமான பருத்தியை சந்தை விலையை காட்டிலும் அதிகமான விலையில் வாங்கியுள்ளது. ஆகவே, இந்திய பருத்தி கழகம் அப்பருத்திகளுக்கு அதிக விலை நிர்ணயம் செய்தது.
இந்நிலையில், ஜவுளித்துறையினர் மத்திய ஜவுளித்துறை அமைச்சகத்திடம் இந்திய பருத்திக் கழகம் இருப்பு வைத்துள்ள பருத்தியை சந்தை விலைக்கு விற்று, சந்தையில் ஒரு சமதளம் உருவாக்கி அதன் மூலம் நூற்பாலைகளையும், விசைத்தறி மற்றும் கைத்தறி துறையினரின் நலன்களை பாதுகாக்க வேண்டும் என்று கோரி வந்தனர்.
இது குறித்து இன்று வெளியிட்டுள்ள பத்திரிக்கை குறிப்பில், தென்னிந்திய பஞ்சாலைகள் சங்கத்தின் (சைமா) தலைவர், அஷ்வின் சந்திரன், இந்திய பருத்திக் கழகம் தான் 2018-19 சீசனில் வாங்கி வைத்துள்ள பருத்தியை குறைந்தபட்சம் 500 பேல்கள் முதல் அதிகபட்சம் 10,000 பேல்கள் வரை வாங்குவோருக்கு விலையில் தள்ளுபடி அளித்து விற்க வழிவகை செய்த மத்திய ஜவுளித்துறை அமைச்சர், ஸ்மிருதி இரானி அவர்களுக்கு தனது பாராட்டுதலை தெரிவித்துக் கொண்டுள்ளார். இதனால், 355 கிலோ கொண்ட கண்டி ஒன்றுக்கு ரூ.3,200 முதல் ரூ.4,400 வரை விலையில் தள்ளுபடி கிடைக்கும். மேலும், 30 மில்லி மீட்டர் நீளமுள்ள பருத்தி பஞ்சின் விலையை கண்டி ஒன்றுக்கு ரூ.46,400 என்று இந்திய பருத்திக் கழகம் நிர்ணயித்துள்ளது. இந்த பஞ்சின் சந்தை விலை ரூ.40,500 மட்டுமேயாகும்.
மேலும், பருத்தியை கட்டணமின்றி தாமதமாக எடுத்துக் கொள்ளும் வசதியும், பருத்தியின் தரம் போன்றவைகளை கருத்தில் கொள்ளும் போது, இப்பருத்தியின் விலை சந்தை விலைக்கு அருகாமையில் வருகிறது. இதனால், பஞ்சாலைகள் பருத்தியை இந்திய பருத்திக் கழகத்திடம் இருந்து பருத்தியை வாங்க வாய்ப்புள்ளது. மேலும், இந்திய பருத்திக் கழகம் தற்போதைய சீசனில் குறைந்தபட்ச நிர்ணய விலை திட்டத்தின் கீழ் வாங்கிய பருத்தியை சந்தை விலையில் குறிப்பிட்ட விலையில் இந்த சீசனம் முழுவதும் விற்கும் என்றும், அதன் மூலம் பருத்தியின் விலையில் ஒரு ஸ்திரத்தன்மை ஏற்படும் என்றும் அஷ்வின் நம்பிக்கை தெரிவித்துள்ளார்.
முன்பு இந்திய பருத்திக் கழகம் ஒரு லட்சம் பேல்களுக்கு அதிகமாக வாங்குபவர்களுக்கு 120 நாட்கள் வரை கட்டணமின்றி பருத்தியை எடுத்துக் கொள்வது மற்றும் கவர்ச்சியான விலை தள்ளுபடி அறிவித்தால், பன்னாட்டு வியாபாரிகள் பருத்தியை வாங்கி குவித்து பருத்தி சீசன் இல்லாத காலத்தில் ஊக வணிகத்தில் ஈடுபட்டு விலையை அபரிமிதமாக கூட்டி வந்ததால் ஒட்டு மொத்த ஜவுளித்துறையே பாதிக்கப்பட்டது. மத்திய ஜவுளித்துறை அமைச்சர் அவர்கள் 2017ம் ஆண்டிலேயே இது போன்ற கவர்ச்சியான விலை தள்ளுபடி அறிவித்ததை முற்றிலும் ஒழித்து, பருத்தி விலையில் ஒரு ஸ்திரத்தன்மையை ஏற்படுத்தி, அதன் மூலம் பருத்தியை உண்மையிலேயே உபயோகிக்கும் சிறு, குறு நூற்பாலைகளை பாதுகாக்கும் பொருட்டு நடவடிக்கை எடுத்ததற்கு சைமா தலைவர் மத்திய ஜவுளித்துறை அமைச்சருக்கு தனது பாராட்டுதலை தெரிவித்துள்ளார்.
மத்திய அரசின் பல்வேறு ஏற்றுமதி சலுகை திட்டங்களின் கீழ் நூல் ஏற்றுமதியையும் அரசு கொண்டு வந்து அதன் மூலம் இந்திய நூலுக்கு பன்னாட்டு சந்தைகளில் விதிக்கப்படும் இறக்குமதி வரியை ஈடுகட்டி ஏற்றுமதியை அதிகரிக்க முன்வர வேண்டும் என்று சைமா தலைவர் கேட்டு கொண்டுள்ளார். முந்தைய ஆண்டுடன் ஒப்பிடுகையில், 2019-20ம் ஆண்டில் நூல் ஏற்றுமதி 30 சதவீதம் அளவுக்கு குறைந்துள்ளது. நூல் ஏற்றுமதி அதிகரிக்கும் பொழுது, பருத்திக்கான தேவையும் அதிகரிக்கும், அதன் மூலம் குறைந்தபட்ச விலை நிர்ணய திட்டத்தினால் அரசுக்கு ஏற்படும் நஷ்டம் குறையும் என்றும், இந்திய பருத்திக் கழகம் தற்போதைய சீசனில் 100 இலட்சம் பேல்கள் வரை வாங்க உத்தேசித்துள்ள நிலையில், நூல் ஏற்றுமதிக்கான சலுகையை அரசு அறிவித்தால், அது அனைவருக்கும் நன்மை பயக்கும் என்றும் சைமா தலைவர் தெரிவித்துள்ளார்.