கோவை: மேட்டுப்பாளையம் பவானி ஆற்றில் மூழ்கி வனக்கல்லூரி மாணவர் உயிரிழந்த நிலையில் பல மணிநேர தீவிர தேடுதலுக்கு பிறகு உடலை மீட்ட தீயணைப்பு துறையினர் பிரேத பரிசோதனைக்காக மேட்டுப்பாளையம் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.
கோவை: மேட்டுப்பாளையம் பவானி ஆற்றில் மூழ்கி வனக்கல்லூரி மாணவர் உயிரிழந்த நிலையில் பல மணிநேர தீவிர தேடுதலுக்கு பிறகு உடலை மீட்ட தீயணைப்பு துறையினர் பிரேத பரிசோதனைக்காக மேட்டுப்பாளையம் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.
கோவை மாவட்டம் மேட்டுப்பாளையத்தில் செயல்பட்டு வரும் வனக்கல்லூரி மற்றும் ஆராய்ச்சி நிலையத்தில் மோகன்ராஜ் என்பவர் முதலாம் ஆண்டு செரி கல்ச்சர் துறையில் கல்வி பயின்று வந்துள்ளார். சேலம் கருப்பூரை சேர்ந்த இந்த மாணவர் கல்லூரி விடுதியில் தங்கி கல்வி பயின்று வந்துள்ளார்.
இந்த நிலையில், நேற்று தனது சக நண்பர்கள் எட்டு பேருடன் மேட்டுப்பாளையம் பவானி ஆற்றில் குளிப்பதற்காக சென்றுள்ளார். அனைவரும் ஊமப்பாளையம் என்ற இடத்தில் ஆற்றில் இறங்கி குளித்து கொண்டிருந்த போது ஆழமான பகுதிக்குச் சென்ற காரணத்தினால் மோகன்ராஜ் என்ற மாணவர் நீரில் மூழ்கி உயிரிழந்ததாக கூறப்படுகிறது.
இதனையடுத்து அவரது நண்பர்கள் கொடுத்த தகவலின் அடிப்படையில் மேட்டுப்பாளையம் தீயனைப்பு துறையினர் மோகன்ராஜின் உடலை தேடும் பணியில் ஈடுபட்டனர். பல மணி நேர போராட்டத்திற்கு பிறகு தற்போது உயிரிழந்த மோகன்ராஜின் உடலை மீட்டு பிரேத பரிசோதனைக்காக மேட்டுப்பாளையம் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.
இதனிடையே, உயிரிழந்த மாணவன் மோகன் ராஜ் நன்கு நீச்சல் தெரிந்தவர் என்பதால் அவர் தண்ணீரில் மூழ்கி உயிரிழந்திருக்க முடியாது என சந்தேகம் தெரிவித்துள்ள அவரது பெற்றோர், இது குறித்து உரிய விசாரணை நடத்த வேண்டும் என மேட்டுப்பாளையம் காவல் நிலையத்தில் புகார் அளித்துள்ளனர். இதையடுத்து மாணவன் உயிரிழப்பு குறித்து போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
மேட்டுப்பாளையம் பவானி ஆற்றில் கல்லூரி மாணவன் உயிரிழந்த சம்பவம் கல்லூரி மாணவர்களிடையே பெரும் சோகத்தை ஏற்படுத்தி உள்ளது.