கோவை: கோவை சிங்காநல்லூர் காவல் எல்லைக்குட்பட்ட அட்டப்பாகவன்டபுதூர் குட்டை தோட்டம் பகுதியில் உள்ள விவசாய நிலத்தில் இருந்த சந்தன மரத்தை மர்ம நபர்கள் வெட்டி கடத்தி சென்ற சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
கோவை: கோவை சிங்காநல்லூர் காவல் எல்லைக்குட்பட்ட அட்டப்பாகவன்டபுதூர் குட்டை தோட்டம் பகுதியில் உள்ள விவசாய நிலத்தில் இருந்த சந்தன மரத்தை மர்ம நபர்கள் வெட்டி கடத்தி சென்ற சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
கோவை மாவட்டத்தில் கடந்த ஆண்டு (2019) துவங்கியதிலிருந்தே சந்தன மரக் கடத்தல் சம்பவம் அதிகரித்து வருகிறது. இந்த கடத்தல்காரர்களை கண்காணிக்க போலீசார் ரோந்து பணிகள் மேற்கொண்டும் கடத்தல் சம்பவங்கள் குறைந்தபாடில்லை.
மேலும் காட்டூர் காவல் எல்லை, சாய்பாபா கோவில் காவல் எல்லை, பந்தய சாலை காவல் எல்லை, குனியமுத்தூர் காவல் எல்லை, ஆர்எஸ்புரம் காவல் எல்லை என தொடர்ச்சியாக சந்தன மரத்தை வெட்டி கடத்திய கடத்தல்காரர்கள் கடைசியாக சிங்காநல்லூர் காவல் எல்லையில் பயங்கர ஆயுதங்களுடன் சந்தன மரக்கட்டைகளை கடத்திச் செல்லும் வீடியோக்கள் சமூக வலைதளங்களில் வெளியாகியது.
இதையடுத்து, குற்றவாளிகளை கைது செய்ய மாநகர காவல் ஆணையாளர் சுமித் சரண் உத்தரவின் பேரில் தனிப்படை அமைக்கப்பட்டது. இதைத்தொடர்ந்து கடந்த ஆண்டு டிசம்பர் மாதம் 17ம் தேதி சாய்பாபா காலனி பகுதியில் சந்தனமர வேட்டை நடைபெற உள்ளதாக போலீசாருக்கு கிடைத்த ரகசிய தகவலின் பேரில் சிங்காநல்லூர் காவல் எல்லை உட்பட பல்வேறு பகுதிகளில் சந்தனமர கடத்தலில் ஈடுபட்ட கோவிந்தராஜ், விஷ்ணு மற்றும் அன்பு ஆகிய 3 பேரை போலீசார் கைது செய்தனர். மேலும் அவர்களிடம் இருந்த மரம் அறுக்கும் ஆயுதங்களான கோடாரி, ரம்பம் போன்ற பொருட்களை பறிமுதல் செய்தனர். அதேபோல தப்பியோடியவர்களை தொடர்ந்து தேடி வருகின்றனர்.
இந்நிலையில், நேற்று மீண்டும் சிங்காநல்லூர் காவல் எல்லைக்குட்பட்ட அட்டப்பாகவன்டபுதூர் குட்டை தோட்டம் பகுதியில் உள்ள விவசாய நிலத்தில் இருந்த சந்தன மரத்தை மர்ம நபர்கள் வெட்டி கடத்திச் சென்றுள்ளனர். இதைத் தொடர்ந்து இந்த சம்பவம் தொடர்பாக நிலத்தின் உரிமையாளர் பாபு சிங்காநல்லூர் காவல் நிலையத்தில் புகார் அளித்துள்ளார்.
இதை தொடர்ந்து அவர் கூறும்போது ;-
இந்த சந்தன மரம் சுமார் 25 ஆண்டுகள் பழமையானது. இதன் உயரம் சுமார் 20 அடி வரை இருக்கும். இது திட்டமிட்டு நோட்டமிடப்பட்டு திருடப்பட்டுள்ளது. இந்த சந்தன மரங்களை கண்டிப்பாக மீட்க வேண்டும். அதேபோல குற்றவாளிகளை விரைந்து கைது செய்ய வேண்டும் என போலீசாரிடமும் மாவட்ட ஆட்சியரிடம் புகார் அளித்துள்ளேன் என தெரிவித்தார்.