கோவை: கோவை ஆலந்துறை பகுதியில் உள்ள அரசு மதுபானக் கடையில் அதிமுக பிரமுகரின் மகன் பணம் கேட்டு மிரட்டி தாக்குதல் நடத்திய சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
கோவை: கோவை ஆலந்துறை பகுதியில் உள்ள அரசு மதுபானக் கடையில் அதிமுக பிரமுகரின் மகன் பணம் கேட்டு மிரட்டி தாக்குதல் நடத்திய சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
கோவை மாவட்டத்தில் உள்ள டாஸ்மாக் கடைகளில் இரவு நேரங்களில் மது விற்பனை படுஜோராக நடைபெற்று வருகிறது. இதனால் இரவு நேரங்களில் மது வாங்க வரும் நபர்களுக்கும் பணியாளர்களுக்கும் இடையே அடிக்கடி மோதல்கள் நிலவி வருகிறது. அதேபோல மாமுல் மோதல்களும் பல இடங்களில் நடைபெற்று வருகிறது.
இந்த நிலையில், கோவை மாவட்ட காவல் எல்லைக்குட்பட்ட ஆலந்துறை பகுதியைச் சேர்ந்த அதிமுக பிரமுகர் தர்மராஜின் மகன் ரஞ்சித் நேற்றிரவு சுமார் பத்து முப்பது மணிக்கு மதுபான கடை ஊழியர்களிடம் பணம் கேட்டு மிரட்டியுள்ளார். அப்போது, அங்கிருந்த அலுவலக உதவியாளர் சசிக்குமார் பணம் தர மறுத்துள்ளதாக தெரிகிறது.

இதனையடுத்து, ரஞ்சித் மற்றும் அவருடன் வந்த நபர்கள் சசிக்குமாரை கடுமையாக தாக்கியுள்ளனர். இதனால் தலையில் பலத்த காயமடைந்த மதுபான கடை ஊழியர் சசிகுமாரை சக ஊழியர்கள் கோவை அரசு மருத்துவமனையில் அனுமதித்தனர். இதையடுத்து ஆலந்துறை போலீசார் ரஞ்சித் மீது வழக்குப்பதிவு செய்து தீவிரமாக தேடி வருகின்றனர்.
அதிமுக பிரமுகரின் மகன் மதுபானக் கடைக்குள் அடியாட்களுடன் புகுந்து தாக்குதல் நடத்தும் காட்சிகள் சமூக வலைதளங்களில் வெளியாகியுள்ளது.