கோவை: கோவை செட்டிபாளையம் பகுதியில் வருகிற 23ம் தேதி நடைபெற உள்ள ஜல்லிக்கட்டு போட்டிக்கு 4150 காளைகள் பதிவு செய்யப்பட்டுள்ளதாகவும் சிறந்த காளையை வளர்த்தவருக்கு நாட்டு மாடு சிறப்பு பரிசாக வழங்கப்படும் என்று கோவை ஜல்லிக்கட்டு சங்க தலைவர் அன்பரசன் தெரிவித்தார்.
கோவை: கோவை செட்டிபாளையம் பகுதியில் வருகிற 23ம் தேதி நடைபெற உள்ள ஜல்லிக்கட்டு போட்டிக்கு 4150 காளைகள் பதிவு செய்யப்பட்டுள்ளதாகவும் சிறந்த காளையை வளர்த்தவருக்கு நாட்டு மாடு சிறப்பு பரிசாக வழங்கப்படும் என்று கோவை ஜல்லிக்கட்டு சங்க தலைவர் அன்பரசன் தெரிவித்தார்.

கோவை செட்டிபாளையம் பகுதியில் வருகிற 23ம் தேதி கோவை மாவட்ட நிர்வாகம் மற்றும் கோவை ஜல்லிக்கட்டு சங்கம் சார்பில் மூன்றாமாண்டு ஜல்லிக்கட்டு போட்டிகள் நடைபெற உள்ள நிலையில், ஜல்லிக்கட்டு சங்க தலைவர் அன்பரசன், செயலாளர் தங்கவேலு, தமிழ்நாடு ரேக்ளா பேரவை தலைவர் அர்ஜுனன் மற்றும் காவல்துறையினர் ஜல்லிக்கட்டு நடைபெறும் மைதானத்தில் ஏற்பாட்டு பணிகளை பார்வையிட்டனர்.

பின்னர் செய்தியாளர்களுக்கு பேட்டியளித்த கோவை ஜல்லிக்கட்டு சங்க தலைவர் அன்பரசன், கோவை ஜல்லிக்கட்டு சங்கம் சார்பில் மூன்றாமாண்டு ஜல்லிக்கட்டு போட்டி 23ம் தேதி காலை 7 முதல் மாலை 5 மணி வரை செட்டிபாளையம் பகுதியில் நடைபெற உள்ளது. தமிழகத்திலேயே மிகப்பெரிய கேலரி அமைத்து மக்களுக்கு தீங்கு இல்லாமல் இருக்க சீரும் சிறப்பாக ஏற்பாடுகள் செய்துள்ளதாகவும் மக்களுக்கு தண்ணீர், உணவு, பேருந்து வசதிகளை மாவட்ட நிர்வாகம் செய்துள்ளது என்றார்.
நிகழ்ச்சியின் ஒரு பகுதியாக நாட்டு மாட்டு காளை கண்காட்சி, கிராமிய கலை நிகழ்ச்சிகள் நடைபெறும் எனவும் ஜல்லிக்கட்டில் 750 முதல் 900 காளைகளும், 600 மாடுபிடி வீரர்களும் போட்டியில் கலந்து கொள்வார்கள் என்றும் ஜல்லிக்கட்டு போட்டிக்காக போராட்டம் நடத்திய அனைத்து இளைஞர்களுக்கும் மதிப்பளித்து இந்த நிகழ்ச்சியை நடத்துவதாக தெரிவித்தார்.
மேலும், காயமடைவோர்களுக்கு சிறந்த மருத்துவ வசதி ஏற்படுத்தப்பட்டு சிகிச்சையளிக்க உள்ளதாகவும் ஜல்லிக்கட்டு நடத்தப்படும் மற்ற மாவட்டங்களை விட கூடுதல் பரிசுப் பொருட்கள் வழங்க உள்ளதாக கூறிய அவர், அனைத்து வீரர்களுக்கும் மாடுகளுக்கும் பரிசு பொருட்கள் வழங்கப்படும் என்று கூறினார்.
இந்த ஆண்டு இதுவரை 4150 காளைகள் பதிவு செய்யப்பட்டுள்ள நிலையில், கோவை மாவட்டத்தில் வளர்க்கப்பட்ட 300 காளைகள் களமிறக்கப்படும் என்றும் அடுத்த ஆண்டு முதல் கோவை காளைகளுக்கு முக்கியத்துவம் அளிக்கப்படும் என்றவர், 1000 ஏக்கர் பரப்பளவில் ஜல்லிக்கட்டு நடத்துவதாகவும் ஆயிரம் வாகனங்கள் கூட பார்க்கிங் செய்ய வசதி ஏற்பாடு செய்யப்பட்டு வருவதாக கூறினார்.
கடந்த ஆண்டு 50 முதல் 1 லட்சம் பார்வையாளர்கள் வரை பங்கேற்ற நிலையில், இந்த ஆண்டு 3 லட்சம் பேர் வரை வருவார்கள் என எதிர்பார்க்கப்படுவதாக கூறிய அவர், ஒரு கேலரியில் 8 ஆயிரம் பேர் வரை அமர்ந்து போட்டியை காணலாம் எனவும் முதல் பரிசாக மாருதி ஆல்டோ கார், இரண்டாம் பரிசாக மோட்டார் பைக், மூன்றாம் பரிசு ஸ்கூட்டர் வழங்கப்படும் என்றும் சிறந்த காளையை வளர்த்தவருக்கு நாட்டு மாடு சிறப்பு பரிசாக வழங்கப்படும் என்றார்.
மேலும், கோவை ஜல்லிக்கட்டு போட்டியில் பங்கேற்கும் மாடு பிடி வீரர்களுக்கும் பார்வையாளர்களுக்கும் முதல் முறையாக இன்சூரன்ஸ் செய்யப்பட உள்ளதாக அவர் தெரிவித்தார்.