கோவை: மேட்டுப்பாளையம் அருகே விவசாய தோட்டத்தில் புகுந்த சிறுத்தை பசுமாட்டினை வேட்டையாடிய நிலையில் இன்று மீண்டும் ஆடுகளை கடித்து கொன்றதால் அப்பகுதி கிராம மக்கள் மத்தியில் பீதியை ஏற்படுத்தியுள்ளது.
கோவை: மேட்டுப்பாளையம் அருகே விவசாய தோட்டத்தில் புகுந்த சிறுத்தை பசுமாட்டினை வேட்டையாடிய நிலையில் இன்று மீண்டும் ஆடுகளை கடித்து கொன்றதால் அப்பகுதி கிராம மக்கள் மத்தியில் பீதியை ஏற்படுத்தியுள்ளது.
கோவை மாவட்டம் மேட்டுப்பாளையத்தில் சிறுமுகை அருகே உள்ளது சிட்டேபாளையம் கிராமம். கால்நடை வளர்ப்பு அதிகம் கொண்ட இந்த கிராமம் மலை அடிவார பகுதியாக உள்ளது.
கடந்த இரு தினங்களுக்கு இந்த கிராமத்தில் நுழைந்து சிறுத்தை ஓன்று விவசாய நிலத்தில் மேய்ச்சலுக்காக கட்டி வைக்கப்பட்டிருந்த முருகன் என்பவரது பசுமாட்டினை வேட்டையாடி இழுத்துச் சென்றது. இந்த சம்பவம் அந்த கிராம மக்கள் மத்தியில் பீதியை ஏற்படுத்தியுள்ள நிலையில் சிறுத்தையை கூண்டு வைத்துப் பிடிக்க கோரிக்கை வைத்தனர்.

இந்த நிலையில், அதே பகுதியில் உள்ள சரவணன் என்பவரது வீட்டின் அருகே ஆட்டு பட்டியில் அடைத்து வைக்கப்பட்டிருந்த வெள்ளாடு ஒன்றை சிறுத்தை நுழைந்து கடித்து கொன்றுள்ளது. அப்போது, அங்கு பட்டியில் அடைத்து வைக்கப்பட்டிருந்த மற்ற ஆடுகள் அலறும் சத்தம் கேட்டு சென்று பார்த்த போது சிறுத்தை அங்கிருந்து ஓடியது.
பின்னர் இது குறித்து சிறுமுகை வனத்துறைக்கு தகவல் தெரிவிக்கப்பட்டதை தொடர்ந்து சம்பவ இடத்திற்கு வந்த வனத்துறையினர், உயிரிழந்த ஆட்டின் உடலை ஆய்வு செய்ததில் சிறுத்தை வேட்டையாடியது உறுதியானது. இதனையடுத்து சிறுத்தையை கூண்டு வைத்து பிடிக்கும் முயற்சியில் நடவடிக்கை எடுத்து வருவதாக வனத்துறையினர் தெரிவித்துள்ளனர்.
இது குறித்து பேசிய அந்த கிராம மக்கள் மக்கள் அதிகம் வசிக்கும் பகுதிக்கே நுழைந்து கால்நடைகளை சிறுத்தை அடுத்தடுத்து வேட்டையாடியுள்ளதால் மக்கள் மத்தியில் அச்சம் நிலவுவதால் சிறுத்தையை வனத்துறையினர் கூண்டு வைத்து விரைந்து பிடிக்க வேண்டும் என வலியுறுத்தியுள்ளனர்.