கோவை: கோவை கிணத்துக்கடவு பகுதியில் பள்ளி தலைமை ஆசிரியர் மாணவிகளுக்கு பாலியல் தொல்லை கொடுத்ததாக எழுந்த புகாரின் மீது நடவடிக்கை எடுக்கக்கோரி கோவை மாவட்ட காவல் கண்காணிப்பாளர் அலுவலகத்தில் ஜனநாயக மாதர் சங்கத்தினர் மற்றும் இந்திய மாணவர் சங்கத்தினர் புகார் மனு அளித்தனர்.
கோவை: கோவை கிணத்துக்கடவு பகுதியில் பள்ளி தலைமை ஆசிரியர் மாணவிகளுக்கு பாலியல் தொல்லை கொடுத்ததாக எழுந்த புகாரின் மீது நடவடிக்கை எடுக்கக்கோரி கோவை மாவட்ட காவல் கண்காணிப்பாளர் அலுவலகத்தில் ஜனநாயக மாதர் சங்கத்தினர் மற்றும் இந்திய மாணவர் சங்கத்தினர் புகார் மனு அளித்தனர்.
கோவை மாவட்டம் கிணத்துக்கடவு தாலுகாவிற்கு உட்பட்ட காட்டம்பட்டியில் அரசு துவக்கப்பள்ளி செயல்பட்டு வருகிறது. இந்த பள்ளியில் தலைமை ஆசிரியராக பணிபுரியும் மாகாளியப்பன் ஆறுமுகம் என்பவர் கடந்த வெள்ளிக்கிழமையன்று பல மாணவிகளிடம் தவறாக நடந்து கொண்டதாக புகார் எழுந்தது. இதையடுத்து ஆத்திரமடைந்த பெற்றோர்கள் தலைமையாசிரியர் மீது நடவடிக்கை எடுக்கக் கோரியும், மாவட்ட கல்வி அதிகாரி மற்றும் உதவி தொடக்கக்கல்வி அதிகாரிகள் தலைமையாசிரியரை காப்பாற்றும் முயற்சியில் ஈடுபட்டு வருவதாக குற்றம்சாட்டி நேற்றிரவு காட்டம்பட்டி பகுதியில் சாலை மறியலில் ஈடுபட்டனர்.
இதனையடுத்து, போராட்டத்தில் ஈடுபட்ட நான்கு பேரை காவல் நிலையத்திற்கு அழைத்துச் சென்ற போலீசார், பெற்றோர்களிடம் தாங்கள் தவறாக ஆசிரியரை நினைத்து போராட்டம் நடத்தியதாக எழுதி வாங்கிக்கொண்டதாக கூறப்படுகிறது. இந்நிலையில், தலைமை ஆசிரியர் மாகாளியப்பன் பாதிக்கப்பட்ட பெண்ணின் தாய் ஒருவருக்கு தொலைபேசியில் அழைத்து தெரியாமல் நடந்துவிட்டதாகவும், தன்னை மன்னிக்கும்படியும் கூறியுள்ளார். ஆசிரியர் மீது பெற்றோர்கள் புகாரளிக்காததால் அவர் மீது இதுவரை காவல்துறையினர் எந்த நடவடிக்கையும் எடுக்கவில்லை.

இந்த நிலையில், தலைமை ஆசிரியர் மீது நடவடிக்கை எடுக்கக்கோரி ஜனநாயக மாதர் சங்கத்தினர் மற்றும் இந்திய மாணவர் சங்கத்தினர் கோவை மாவட்ட காவல் கண்காணிப்பாளர் அலுவலகத்தில் புகார் மனு அளித்துள்ளனர்.
இதைத்தொடர்ந்து அவர்கள் செய்தியாளர் சந்திப்பில் கூறும்போது ;-

தலைமையாசிரியர் மாகாளியப்பன் மீது போலீசார் போக்சோ சட்டத்தின் கீழ் வழக்கு பதிவு செய்து சிறையில் அடைக்க வேண்டும் எனவும் உடனடியாக குழந்தைகள் நல ஆணையம் மற்றும் கல்வித்துறை அதிகாரிகள் இந்த விவகாரத்தில் தலையிட்டு அப்பள்ளிக்கு சென்று விசாரணை நடத்த வேண்டும் என தெரிவித்தனர்.