கோவை மாவட்டத்தில் தைப்பூச திருவிழாவை முன்னிட்டு மாநகர மற்றும் மாவட்ட காவல் எல்லைக்குட்பட்ட பகுதிகளில் கிட்டத்தட்ட 1500க்கும் மேற்பட்ட போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபட உள்ளனர்.
கோவை: கோவை மாவட்டத்தில் தைப்பூச திருவிழாவை முன்னிட்டு மாநகர மற்றும் மாவட்ட காவல் எல்லைக்குட்பட்ட பகுதிகளில் கிட்டத்தட்ட 1500க்கும் மேற்பட்ட போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபட உள்ளனர்.
தைப்பூச தேர் திருவிழாவானது கோவை மருதமலை அருள்மிகு சுப்பிரமணிய சுவாமி திருக்கோவிலில் நாளை காலை 11:30 மணிக்கு மேல் நடைபெறவுள்ளது.
இந்த விழாவில் குமரகுருபர சுவாமிகள், சாந்தலிங்க மருதாசல அடிகளார் அமைச்சர்கள் எஸ் பி வேலுமணி, சேவூர் ராமச்சந்திரன், சட்டப்பேரவை துணைத்தலைவர் பொள்ளாச்சி ஜெயராமன் ,சட்டமன்ற உறுப்பினர்கள், நாடாளுமன்ற உறுப்பினர்கள் மாவட்ட ஆட்சியர் காவல்துறை அதிகாரிகள் அரசு அதிகாரிகள் என பலர் கலந்து கொள்ள உள்ளனர்.
மேலும், பல்லாயிரக்கணக்கான பக்தர்கள் மருதமலை சுப்பிரமணிய சுவாமி திருக்கோவிலில் வழிபட வர உள்ளதால், மருதமலையை சுற்றியுள்ள பகுதிகளில் மாவட்ட காவல் கண்காணிப்பாளர் சுஜித்குமார் உத்தரவின்பேரில் 300க்கும் மேற்பட்ட போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபட உள்ளனர்.
அதே போல், கோவை மாநகர் மற்றும் மாவட்ட காவல் எல்லைக்குட்பட்ட பகுதிகளில் உள்ள கோயில்களில் சிறப்பு பூஜைகள் மற்றும் தேர் ஓட்டங்கள் நடைபெற உள்ளதால் மொத்தமாக 1500க்கும் மேற்பட்ட போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபட உள்ளனர்.
குறிப்பாக மருதமலையில் மலை மேல் செல்ல இரு சக்கர வாகனங்கள் மற்றும் நான்கு சக்கர வாகனங்களுக்கு அனுமதி மறுக்கப்பட்டுள்ளது.
அதேபோல, மலையடி வாரத்திலிருந்து கோவிலுக்கு செல்ல சிறப்பு பேருந்துகள் இயக்கப்பட்டுள்ளது.
மேலும் கோவை மாவட்டத்தை சுற்றியுள்ள பல்வேறு பகுதிகளில் பக்தர்கள் எளிதாக வந்து செல்ல இந்து சமய அறநிலையத் துறையின் சார்பில் சிறப்பு பேருந்துகள் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.