கோவை : கோவை உக்கடம் பகுதிகளில் உள்ள இரண்டு வீடுகளில் இன்று காலை முதல் தேசிய புலனாய்வு முகமை அதிகாரிகள் திடீர் சோதனைகளை மேற்கொண்டனர். இதனால் அப்பகுதியில் பரபரப்பு நிலவியது.
கோவை : கோவை உக்கடம் பகுதிகளில் உள்ள இரண்டு வீடுகளில் இன்று காலை முதல் தேசிய புலனாய்வு முகமை அதிகாரிகள் திடீர் சோதனைகளை மேற்கொண்டனர். இதனால் அப்பகுதியில் பரபரப்பு நிலவியது.

கோவையில் இந்து முன்னணி செய்தி தொடர்பாளர் சசிகுமார் கொலை வழக்கு, இந்து இயக்க தலைவர்களை கொலை செய்ய திட்டம் தீட்டிய வழக்கு மற்றும் இலங்கையில் நடைபெற்ற வெடிகுண்டு தாக்குதல் குறித்த வழக்குகள் தொடர்பாக கோவையில் அவ்வப்போது தேசிய புலனாய்வு முகமை அதிகாரிகள் திடீர் சோதனைகள் செய்து வருகின்றனர்.

இந்த நிலையில், இன்று உக்கடம் ஜி.எம் நகரில் வசித்து வரும் நிசார் என்பவரது வீட்டிலும், அதேபோல உக்கடம் லாரிபேட்டையில் வசித்து வரும் செளருதீன் என்பவரது வீட்டிலும் தேசிய புலனாய்வு முகமை அதிகாரிகள் திடீர் சோதனை மேற்கொண்டனர்.

ஏற்கனவே கோவையில் நடைபெற்ற சோதனைகளில் வீடுகளில் இருந்து ஆவணங்கள் கைப்பற்றப்பட்டதாக தேசிய புலனாய்வு முகமை அதிகாரிகள் தெரிவித்திருந்த நிலையில், தற்போது இந்த சோதனை நடைபெற்றது.
இந்த சோதனையையடுத்து, கோவை மாநகர போலீசார் அப்பகுதியில் பாதுகாப்புக்காக நிறுத்தப்பட்டுள்ளனர். கோவையை போல சிவகங்கை, திருச்சி, நாகப்பட்டினம் மற்றும் தூத்துக்குடி ஆகிய மாவட்டங்களிலும் தேசிய புலனாய்வு முகமை அதிகாரிகள் சோதனை மேற்கொண்டனர்.
இந்த சோதனையில் 2 மடிக்கணினிகள், 8 செல்போன்கள், 5 சிம் கார்டுகள், ஒரு மெமரி கார்டு மற்றும் 14 ஆவணங்களை தேசிய புலனாய்வு முகமை அதிகாரிகள் கைப்பற்றினர்.