கோவை : கோவையை சேர்ந்த இளைஞர் தன்னை ஏமாற்றி விட்டு வேறு ஒரு பெண்ணை திருமணம் செய்யப்போவதாக மத்திய பிரதேச மாநிலத்தை சேர்ந்த பெண் ஒருவர் கோவை மாவட்ட காவல் கண்காணிப்பாளரிடம் புகார் மனுவை அளித்துள்ளார்.
கோவை : கோவையை சேர்ந்த இளைஞர் தன்னை ஏமாற்றி விட்டு வேறு ஒரு பெண்ணை திருமணம் செய்யப்போவதாக மத்திய பிரதேச மாநிலத்தை சேர்ந்த பெண் ஒருவர் கோவை மாவட்ட காவல் கண்காணிப்பாளரிடம் புகார் மனுவை அளித்துள்ளார்.
மத்திய பிரதேச மாநிலம் இந்தூர் பகுதியை சேர்ந்தவர் நித்தி பாண்டே மற்றும் கோவை வீரகேரளம் பகுதியை சேர்ந்த லட்சுமி நாராயணன் நந்தகோபால் என்பவரும் கத்தார் நாட்டில் உள்ள கத்தார் ஏர்லைன்ஸ் நிறுவனத்தில், தொழில் நுட்ப பிரிவில் ஒன்றாக பணிபுரிந்து வந்துள்ளனர். ஒரே இடத்தில் இருவரும் பணிபுரிந்து வந்த நிலையில், இவர்களிடையே ஏற்பட்ட நட்பு நாளடைவில் காதலாக மாறியது.

இதனைத் தொடர்ந்து, கடந்த 2016ம் ஆண்டு முதல் கத்தாரில் இருவரும் லிவிங் டு கெதர் முறையில் ஒன்றாக குடும்பம் நடத்தி வந்துள்ளனர். மேலும், கோவையில் உள்ள லட்சுமி நாராயணன் நந்தகோபால் வீட்டிற்கு வந்து இருவரும் பல முறை ஒன்றாக தங்கி இருந்துள்ளனர்.
இந்த நிலையில், கடந்த சில மாதத்திற்கு முன்னர் லட்சுமி நாராயணன் நந்தகோபால் வேறு திருமணம் செய்ய போவதாகவும், தங்களது குடும்ப சூழலுக்கும் கலாச்சாரத்திற்கு உன்னுடைய கலாச்சாரம் ஒத்துவராது என கூறி நித்திபாண்டேவை தவிர்த்துள்ளார். இதையடுத்து, இதுகுறித்து கோவை மாவட்ட காவல் கண்காணிப்பாளர் மற்றும் தேசிய பெண்கள் ஆணையம் உட்பட பலரிடம் கடந்த ஏப்ரல் மாதம் நித்தி பாண்டே புகார் மனு ஒன்றை அளித்துள்ளார்.
தொடர்ச்சியாக ஆறு மாதத்திற்கு மேலாக இந்த மனு குறித்து விசாரணை நடைபெற்று வந்த நிலையில், விசாரணைக்கு லட்சுமி நாராயணன் நந்தகோபால் ஆஜராகவில்லை என கூறப்படுகின்றது. இந்நிலையில், சமூக நலத்துறையினர் நித்திபாண்டேவை அழைத்து அறிவுரை கூறி புகார் மனுவை முடித்து வைத்துள்ளனர்.
இதனையடுத்து, லட்சுமி நாராயணன் நந்த கோபாலுக்கு வேறு ஒரு பெண்ணை திருமணம் செய்வதற்கான ஏற்பாடுகளை அவர்களது குடும்பத்தினர் செய்து வந்துள்ளதாக கூறப்படுகிறது. இந்நிலையில், தன்னைப் போல் வேறு ஒரு பெண்ணும் ஏமாந்து விடக்கூடாது என்பதற்காக மத்திய பிரதேசத்தை சேர்ந்த நித்தி பாண்டே, அனைத்திந்திய ஜனநாயக மாதர் சங்கத்தினருடன் சேர்ந்து இன்று மீண்டும் கோவை மாவட்ட காவல் கண்காணிப்பாளரிடம் மனு ஒன்றை அளித்தார் .
அதில், தன்னை திருமணம் செய்து கொள்வதாக கூறி ஏமாற்றிய லட்சுமி நாராயணன் நந்தகோபால் மீது உரிய நடவடிக்கை எடுக்கப்பட வேண்டும் எனவும், ஏற்கனவே இது குறித்து தேசிய பெண்கள் ஆணையத்திடமும், கோவை பேரூர் அனைத்து மகளிர் காவல் துறையில் புகார் அளிக்கப்பட்டு இருப்பதாகவும், காவல்துறையில் அளிக்கப்பட்ட புகாரில் உரிய நடவடிக்கை எடுக்கப்படவில்லை எனவும் தெரிவித்தார்.
மேலும், தன்னை ஏமாற்றியது குறித்து லட்சுமி நாராயணன் நந்தகோபாலன் பெற்றோரிடம் தெரிவித்த போது, அவர்களும் சேர்ந்து தன்னை மிரட்டுவதாகவும் தெரிவித்த நித்தி பாண்டே, இன்னும் பதினைந்து நாளில் லட்சுமி நாராயணன் நந்தகோபாலன் வேறு ஒரு பெண்ணை திருமணம் செய்ய இருப்பதாகவும் அந்தப் பெண்ணும் பாதிக்கப்பட்டு விடக்கூடாது என்பதற்காகவே காவல் துறையில் புகார் அளித்து இருப்பதாகவும் கூறினார்.
மொழி பிரச்சனை மற்றும் அதிகாரிகளின் அலட்சியத்தால் கத்தார் ஏர்லைன்ஸ் ஊழியர் நித்தி பாண்டே கொடுத்த புகார் முறையாக விசாரிக்கப்படவில்லை எனவும் 6 மாதமாக அந்த பெண்ணை கோவை காவல் துறையினர் அலைக்கழித்து இருப்பதாகவும் மாதர் சங்கத்தினர் குற்றம்சாட்டினர். எனவே, இந்த பிரச்சினை குறித்து காவல்துறையினர் முறையான விசாரணை நடத்தப்பட வேண்டும் எனவும் மாதர் சங்கத்தினர் வலியுறுத்தினர்.
இதனிடையே, விசாரணைக்கு பல முறை அழைத்தும் வராத கத்தார் ஏர்லைன்ஸ் ஊழியர் லட்சுமி நாராயணன் நந்தகோபாலை மீண்டும் அழைத்து விசாரணை நடத்த காவல்துறையினர் திட்டமிட்டுள்ளனர்.